Primary tabs
-
பெண்கள் அறிவு பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். ஆண், பெண் - சமத்துவத்திற்குப் பெண் கல்வி கட்டாயம் தேவை என்ற கருத்தைப் பல இடங்களில் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். கல்வியறிவு பெற்ற - தமிழ் உணர்வு கொண்ட தமிழ்ப் பெண்களால்தான் தமிழ்நாடு முன்னேறும் என்னும் கருத்தைப் ‘பெண்கல்வி’ என்னும் பாடலில் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
பெண்களால் முன்னேறக் கூடும் - நம்
வண் தமிழ் நாடும் எந்நாடும்!
கண்களால் வழிகாண முடிவதைப் போலே!
கால்களால் முன்னேற முடிவதைப் போலே!(பெண்களால் முன்னேறக் கூடும்)
படியாத பெண்ணினால் தீமை! - என்ன
பயன் விளைப்பாள் அந்த ஊமை?
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல
நிலை காண வைத்திடும், பெண்களின் கல்வி!(பெண்களால் முன்னேறக் கூடும்)
பெற்றநல் தந்தை தாய் மாரே - நும்
பெண்களைக் கற்க வைப்பீரே!
இற்றைநாள் பெண் கல்வியாலே - முன்
னேற வேண்டும் வையம் மேலே!(பெண்களால் முன்னேறக் கூடும்)
(இசையமுது, ‘பெண்கல்வி’)
நல்ல பெண் குழந்தைகளைப் பெற்ற தந்தையரே! தாயரே! உங்கள் பெண் குழந்தைகளைக் கல்வி கற்க வையுங்கள். பெண் கல்வியால் மட்டுமே இந்த உலகம் முன்னேற முடியும் என்று பெற்றோர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிதாசன்.
பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த இசைப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?(துன்பம்)
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?(துன்பம்)
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - யாம்
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?(துன்பம்)
புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?(துன்பம்)
(இசையமுது,‘பெற்றோர் ஆவல்’)
(வன்பு - வலிமை; அன்றை - அந்நாள்; தமிழ்க்கூத்து - நாடகத் தமிழ்)
இந்தப் பாடல் 1939 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்காலத்தில் ‘யாழ்’ என்னும் இசைக் கருவி பயன்பாட்டில் இல்லை. யாழில் இருந்து வளர்ச்சி பெற்ற வீணை என்னும் இசைக் கருவியே பயன்படுத்தப்பட்டது, எனினும் இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘வீணை’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சங்க காலத்திலே தமிழர் பயன்படுத்திய ‘யாழ்’ என்னும் இசைக் கருவியையே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்கால நாட்டியத்தைக் குறிப்பிடாமல் ‘அன்றை நற்றமிழ்க் கூத்து’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
அறம் எது? மறம் எது? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
அகம், புறம் என்று வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்து அறிந்தவர்கள் தமிழர்கள். அதைச் சங்ககால நூலின் வழியில் புரிய வைக்குமாறு பெற்றோர் கேட்பது போல் பாரதிதாசன் பாடியுள்ளார்.
பாரதிதாசனுக்குக் கலை என்றால் பிற கலப்பு இல்லாத தமிழ்க் கலை தான் மகிழ்ச்சியைத் தரும்; இசை என்றால் தமிழ் இசைதான் மகிழ்ச்சியைத் தரும்; மொழி என்றால் தமிழ் மொழி தான் மகிழ்ச்சியைத் தரும். இவற்றை இந்தப் பாடலின் அடிப்படையாய் அமைத்து அவர் பாடியுள்ளதைக் காணமுடிகிறது.
பெண்கள் மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கிவிடக் கூடாது. பேய், பூதம் என்னும் இல்லாத பொருள்கள் இருக்கிறது என்று நம்பி அஞ்சக் கூடாது என்பதைப் பின்வரும் பாடலின் வழியாகப் பாரதிதாசன் உணர்த்தியுள்ளார்.
அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்
உச்சி இருட்டினில் பேய் வந்ததாக
உளறினால் அச்சமா? பேய் என்பதுண்டா?(அச்சமும் மடமையும்)
முச்சந்தி காத்தானும் உண்டா - இதை
முணுமுணுப்பது நேரில் கண்டா?
பச்சைப் புளுகெல்லாம் மெய்யாக நம்பிப்
பல் பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி(அச்சமும் மடமையும்)
கள் உண்ணும் ஆத்தாளும் ஏது? மிகு
கடிய சாராய முனி ஏது?
விள்ளும் வைசூரிதான் மாரியாத்தாளாம்;
வேளை தோறும் படையல் வேண்டும் என்பாளாம்(அச்சமும் மடமையும்)
மடமைதான் அச்சத்தின் வேராம் - அந்த
மடமையால் விளைவதே போராம்.
மடமையும் அற நல் ஒழுக்கமும் வேண்டும்
கல்வி வேண்டும் அறிவு கேள்வியும் வேண்டும்(அச்சமும் மடமையும்)
(இசையமுது, ‘அச்சம்தவிர், மடமை நீக்கு’)
(பச்சைப் புளுகு - பெரிய பொய், முச்சந்தி காத்தான், கள் உண்ணும் ஆத்தாள், சாராய முனி - சிறு தெய்வங்கள், விள்ளும் - சொல்லும்)
பகுத்தறிவு கொண்ட பெண்கள் சமுதாயத்தில் நிறைந்தால் அச்சம் அகலும். அச்சம் அகன்றால் அறியாமை நீங்கும். அறியாமை நீங்கிய பகுத்தறிவுச் சமுதாயத்தில் போர் ஏற்படாது. பெண்களிடம் பகுத்தறிவு தோன்ற வேண்டும் என்றால் கல்வியும் கேள்வியும் நிறைய வேண்டும் என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.