Primary tabs
-
மனித வாழ்க்கையில் கலை பெறும் இடத்தை இந்த நாடகம் விளக்குகிறது. கலை வாழ்க்கையில் போட்டி ஏற்படுவது இயல்புதான். அந்தப் போட்டி மனப்பான்மை பொறாமையாக மாறக் கூடாது என்பதை ‘நல்ல தீர்ப்பு’ என்னும் இந்த நாடகம் விளக்குகிறது.
பிறை நாட்டு அரசனின் மகள் முல்லை. அந்நாட்டுப் படைத்தலைவனின் மகள் கிள்ளை. அமைச்சனின் மகள் சாலி. இவர்கள் மூவரும் தோழிகள்.
பீலி நாட்டுச் சிற்றரசன் கடம்பன். அவனது மகள் நிலவு. இவள் சிறந்த ஆடலரசி.
நிலவிடம் ஆடல் கற்றுக் கொள்வதற்கு கிள்ளையும் சாலியும் விரும்பினார்கள். ஆனால் பிறை நாட்டுக்கும் பீலி நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் தகராறால் அங்கே சென்று ஆடல் கற்க இயலவில்லை.
கிள்ளையிடம் முல்லை மிகுந்த தோழமையுடன் பழகுவதாகச் சாலி பொறாமை கொண்டாள். எனவே சூழ்ச்சியின் மூலம் அவர்களைப் பிரிக்க விரும்பினாள்.
அந்த வேளையில் அரசியின் மோதிரம் காணாமல் போய்விடுகிறது. கிள்ளைதான் அந்த மோதிரத்தைத் திருடினாள் என்று பொய் சொல்கிறாள் சாலி.
வழக்கை ஆராய்ந்த மன்னன், கிள்ளையை நான்கு ஆண்டுகள் நாடு கடத்துவதாகத் தீர்ப்புக் கூறினான். நான்கு ஆண்டுகளும் அவள் பீலி நாட்டிலேயே வாழ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பீலி நாட்டில்தான் ஆடலரசி நிலவு வாழ்கிறாள். அங்கே போய் கிள்ளை ஆடல் கலையைக் கற்று விடுவாள் என்று எண்ணிய சாலி, ‘கிள்ளை ஆடல் கற்றுக் கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினாள்.
அப்போது, மோதிரம் கிடைத்து விட்டதாகச் செய்தி வந்தது. கிள்ளை குற்றம் அற்றவள் என்பதை அனைவரும் அறிந்தனர். சாலியின் பொறாமைக் குணம் அனைவருக்கும் தெரிந்தது. மன்னனிடம் சாலி மன்னிப்புக் கேட்கிறாள்.
பிறை நாட்டில் ஆடல் அரங்கு அமைக்கப்பட்டது. அங்கே பீலி நாட்டைச் சார்ந்த நிலவு வந்து ஆடல் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நாடகம் ‘நல்ல தீர்ப்பு’ என்ற தலைப்புக்கு ஏற்ப, குற்றம் செய்யாத கிள்ளைக்கு மன்னனின் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமைந்ததை விளக்குகிறது.