தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 5.6

  • 5.6 அமைதி
     

    E

    உரையாடலே இல்லாமல் தமிழில் எழுதப்பட்ட முதல் நாடகம் ‘அமைதி’ என்னும் இந்த நாடகம் ஆகும். இதை ‘ஊமை நாடகம்’ என்றே பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். உரையாடல் இல்லாமல் அங்க அசைவுகளாலேயே நடிக்கும் வகையில் இந்த நாடகம் அமைந்துள்ளது.

    இந்த நாடகத்தில் முதன்மை மாந்தனாக உள்ள மண்ணாங்கட்டிக்கு மட்டுமே பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏனைய மாந்தர்களுக்குப் பெயர் சூட்டப்படவில்லை.
     

    5.6.1 அமைதி நாடகக் கதை
     

    ஒரு சிற்றூரில் மண்ணாங்கட்டி என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பிறருக்காக வாழ வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவன். அவன் தனது தாய் இறந்த பிறகு அங்கே வாழ விரும்பாமல் வெளியேறுகிறான். தன்னுடன் எழுதுகோல், தாள், சில நகைகள், காசுகள் முதலியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டான்.

    அடுத்த நாள் அவன் அயலூர் ஒன்றை அடைந்தான். அங்கே குளிரில் வாடிக் கொண்டிருந்த மூதாட்டிக்குத் தன்னிடமிருந்த துணியைக் கொடுக்கிறான்.

    இவ்வாறு அவன் சென்ற ஒவ்வோர் ஊரிலும் வாழ்ந்தவர்களுக்குத் தன்னிடம் இருந்த பொருட்களைக் கொடுக்கிறான்.

    ஓர் ஊரில் பண்ணையார்கள் நன்கு உண்டு உறங்குவதைக் கண்டான். அங்கே உள்ள ஏழைகள் பசியால் வாடுவதையும் கண்டான். வேலை இல்லாததால் ஏழைகள் துன்பப்படுவதை அறிந்த அவன் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்குத் திட்டமிட்டுச் செயல்படுகிறான்.


     

    குறவர்கள் கலவரம் ஏற்பட்டபோது ஒருவனது மண்டை உடைந்தது. அவனைக் காப்பதற்குச் சென்ற மண்ணாங்கட்டி காவலரிடம் அடிபடுகிறான். இறுதியில் உயிரையும் விடுகிறான்.
     

    மண்ணாங்கட்டியை உதவாத பொருள் என்று ஒதுக்குவது இயல்பு. எதற்கும் பயன்படாதவனை ‘மண்ணாங்கட்டி’ என்று இழிவாகக் கூறுவதும் உண்டு. ஆனால், இதற்கு மாறாக ‘அமைதி’ நாடகத்தில் மண்ணாங்கட்டி என்ற பெயர் கொண்டவன் எல்லாருக்கும் உதவுவதாகப் பாரதிதாசனால் படைக்கப்பட்டுள்ளான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:04:06(இந்திய நேரம்)