Primary tabs
-
பாடம் - 3
C02133 உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சிஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
உயிர் ஈற்றுச் சிறப்புப் புணர்ச்சி என்றால் என்ன என்பது பற்றிச் சொல்கிறது. உயிர்முன் உயிர் வந்து புணரும் புணர்ச்சி பற்றிச் சொல்கிறது. அப்புணர்ச்சியில் ய, வ என்னும் மெய்கள் உடம்படுமெய்களாகத் தோன்றுவதை விளக்கிச் சொல்கிறது. எகர வினா முன்னரும், அ,இ,உ என்னும் மூன்று சுட்டுகளின் முன்னரும் நாற்கணம் வந்து புணர்வதை விளக்கிச் சொல்கிறது. நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரம் வருமொழி முதலில் உயிரும் யகரமும் வரும்போது அடையும் மாற்றங்களை விளக்கிச் சொல்கிறது.
எல்லா உயிர் ஈற்றுச் சொற்களுக்கும் முன்னர் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகுந்துவரும் என்பதை விளக்கிக் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- உடம்படுமெய் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
- உடம்படுமெய்கள் இரண்டு உயிர்களுக்கு இடையே தோன்றும் விட்டிசையைத் தடுக்கவும், ஒலிக்கும் முயற்சியை எளிதாக்கவும் வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
- உடம்படுமெய்களாக எவை வரும், அவை புணர்ச்சியில் எந்தச் சூழலில் வரும் என்பனவற்றை அறிந்து கொள்ளலாம்.
- புணர்ச்சியில், வருமொழி முதலில் உயிர் வரும்போது, குற்றியலுகரம் தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு நீங்குவதை அறிந்து கொள்ளலாம்.
- இயல்பு ஈறாகவும், விதி ஈறாகவும் வரும் எல்லா உயிர்கள் முன்னரும், வல்லினம் வந்து புணரும்போது மிகும் பாங்கினை அறிந்து கொள்ளலாம்.