தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி - பொதுவிதி

  • 6.1 எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி - பொதுவிதி

    வருமொழியில் எண்ணல் அளவைப் பெயர் (எண்ணுப்பெயர்) நிறுத்தல் அளவைப் பெயர், முகத்தல் அளவைப் பெயர், நீட்டல் அளவைப் பெயர் ஆகிய பெயர்களும், பிற பெயர்களும் வந்தால், நிலைமொழியில் உள்ள ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களில் சில விகாரங்கள் ஏற்படும். அவை வருமாறு:

    1.

    ஒன்று இரண்டு என்னும் எண்ணுப்பெயர்களின் முதலில் உள்ள குறில் நீளும்.

    சான்று:

    ஒன்று + ஆடு = ஓராடு (ஒ - ஓ என நீண்டது)
    இரண்டு + ஆண்டு = ஈராண்டு (இ - ஈ என நீண்டது)

    2.

    மூன்று, ஆறு, ஏழு ஆகிய எண்ணுப்பெயர்களின் முதலில் உள்ள நெடில் குறுகும்.

    சான்று:

    மூன்று + தமிழ் = முத்தமிழ் ( மூ - மு எனக் குறுகியது)
    ஆறு + படைவீடு = அறுபடைவீடு (ஆ - அ எனக் குறுகியது)
    ஏழு + பிறப்பு = எழுபிறப்பு (ஏ - எ எனக் குறுகியது)

    3.

    ஆறு, ஏழு அல்லாத மற்ற ஆறு எண்ணுப்பெயர்கள் ஈற்றுயிர் மெய் கெடும். (கெடும் - நீங்கும்)

    சான்று:

    ஒன்று + ஆடு = ஓராடு (று - கெட்டது)
    இரண்டு + ஆண்டு = ஈராண்டு (டு - கெட்டது)
    மூன்று + தமிழ் = முத்தமிழ் (று - கெட்டது)
    நான்கு + புறம் = நாற்புறம் (கு - கெட்டது)
    ஐந்து + பொறி = ஐம்பொறி (து - கெட்டது)
    எட்டு + குணம் = எண்குணம் (டு - கெட்டது)

    4.

    ஏழு என்ற எண்ணுப்பெயரின் ஈற்றில் உள்ள உகர உயிர் கெடும்.

    சான்று:

    ஏழு + கடல் = ஏழ் கடல்

    நூற்பா:

    எண், நிறை, அளவும், பிறவும் எய்தின்
    ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்ணுள்
    முதல் ஈர்எண் முதல் நீளும்; மூன்று ஆறு
    ஏழு குறுகும்; ஆறு ஏழு அல்லவற்றின்
    ஈற்றுஉயிர் மெய்யும், ஏழன் உயிரும்
    ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்                                              (நன்னூல், 188)

    (அளவு - முகத்தல் அளவை, நீட்டல் அளவை; ஏகும் - கெடும்; ஏற்புழி - ஏற்புடைய இடங்களில்; என்மனார் - என்று சொல்வர்)

    இந்நூற்பாவில் கூறப்படும் முதல் நீளல், முதல் குறுகல் முதலான விகாரங்களை ஏற்புடைய இடங்களில் ஏற்றவாறு கொள்ள வேண்டும் என்கிறார் நன்னூலார். சான்றாக ஒன்று என்பது வருமொழி முதலில் உயிர் வரும் போது ஓராயிரம் என முதல் குறில் நீள்கிறது; ஆனால் வருமொழி முதலில் மெய்வரும்போது ஒரு கால் என முதல் குறில் விகாரம் எதனையும் கொள்ளாமல் குறிலாகவே உள்ளது. எனவேதான் நன்னூலார் ஏற்புடைய இடங்களில் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். நூற்பாவில் வரும் ‘ஏற்புழி’ என்பதற்குப் பொருளும் விளக்கமும் இதுவேயாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 19:07:42(இந்திய நேரம்)