தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முத்தகச் செய்யுள்

  • 2.3 முத்தகச் செய்யுள்

    முத்தகச் செய்யுள் என்பது தனியே நின்று ஒருபொருள் தந்து முற்றுப் பெறுவது ஆகும். அதாவது பாடற்கருத்து, ஒரே செய்யுளில் எழுவாயும் பயனிலையுமாக அமைந்து முற்றுப் பெறுவதாகும்.

    அவற்றுள் முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்
    (நூற்பா : 3)

    எனவரும் நூற்பா இக்கருத்தை விளக்கும்.

    2.3.1 முத்தகச் செய்யுள் - சான்று

    என்ஏய் சிலமடவார் எய்தற்கு எளியவோ?
    பொன்னே ! அநபாயன் பொன்நெடுந்தோள் - முன்னே
    தனவேஎன்று ஆளும் சயமடந்தை தோளாம்
    புனவேய் மிடைந்த பொருப்பு

    (ஏய்
    =
    போன்ற ; உவமஉருபு
    பொன்னே
    =
    பொன் போன்றவளே ; மகடூஉ முன்னிலை
    தனவே
    =
    தன்னுடையதே
    சயமடந்தை
    =
    வெற்றிக்கு உரிய கொற்றவை
    புனவேய்
    =
    காட்டுமூங்கில்
    மிடைந்த
    =
    நெருங்கிய
    பொருப்பு
    =
    மலை)

    பொன்போன்ற பெண்ணே! அநபாய சோழனின் அழகிய பெரியதோள் மலைபோன்றது. கொற்றவையின் மூங்கில் போன்ற தோள்கள் நெருங்கிச் சேர்ந்திருக்கும் மலை அது.

    அந்தக் கொற்றவை தனக்கே உரியதெனக் கருதி, அநபாயன் தோளில் பிரியாமல் தங்கியிருப்பாள். அத்தகைய தோள்கள் என்னைப் போன்ற பெண்களால் அடைவதற்கு எளியதாக இருக்குமோ? இருக்காது. (இது, அநபாய சோழன் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தோழியிடம் கூறியதாக அமைந்த பாடல் ஆகும்)

    இப்பாடலில், தோள் ஆகிய பொருப்பு என்னும் எழுவாய், எய்தற்கு எளியவோ என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்தது. சொற்றொடரும் ஒரே பாடலில் முற்றுப் பெற்றது. பாடல் கருத்தும் அடுத்த பாடலைத் தேடித் தொடராமல், ஒரே பாடலில் முடிவுற்றது. எனவே, இது முத்தகச் செய்யுள் வகை ஆயிற்று.

    முத்தகச் செய்யுள் நூல்கள்

    எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றுள் காணப்படும் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தனிப் பாடல்களாகக் கருதப்படும் நிலையில் அவை முத்தகச் செய்யுள் அமைந்த நூல்களே ஆகும்.

    தனிப் பாடல்கள், நீதி நூல்களில் தனித்தனிக் காணப்படும் செய்யுள்கள் இவ்வகையினவே. பக்தி இலக்கியப் பாடல்களும், மறுமலர்ச்சிப் பாடல்களும் இவ்வகையினவே ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:09:16(இந்திய நேரம்)