Primary tabs
-
4.4 பெண்ணியத் திறனாய்வின் பணி
பெண்கள் எவ்வாறு இலக்கியங்களிலும் ஊடகங்களிலும் சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று விளக்கவியல் அடிப்படையில் பார்ப்பது போதாது. சமூக- பொருளாதார- பண்பாட்டுத் தளங்களில் பெண்களின் சில இருப்புகளையும் எழுச்சிகளையும், தருக்கவியல் அடிப்படையிலும், எதிர்நிலையிலான முரண்கள் வழியாகவும், வரலாற்றுச் சூழமைவுகள் மற்றும் எதிர்காலத்துவம் என்ற பின்னணியிலும் பார்க்கப்பட வேண்டும். அதுவே பெண்ணியத் திறனாய்வின் பணியாகும்.
படைப்பாளிகள் ஆண்களா, பெண்களா என்பது முக்கியமல்ல- என்றாலும், பெண் என்ற அடையாளம், பெண் என்ற உணர்வு, பெண் என்ற அனுபவம் நேரடியாக இருக்கும் என்பதால் பெண் எழுத்தாளர்களிடம் பெண்ணியச் சிந்தனையையும் பெண்ணிய மொழியையும் எதிர்பார்ப்பது என்பது இயல்பே. பெண்ணிய எழுத்து, ஒடுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளை வெளியே கொண்டு வர வேண்டும். ஏனென்றால், பெண்ணியம் என்பது, சுயம் பற்றிய உணர்வு, போராட்ட குணம், அடக்குமுறை அல்லது ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஓர் எழுச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.