Primary tabs
-
4.0 பாட முன்னுரை
இலக்கியத் திறனாய்வு முறைகளில் பெண்ணியம் (Feminism) சிறப்பான தொரு பார்வைக் கோணத்தைத் தந்திருக்கிறது. எந்தத் திறனாய்வுக்கும் அதனுடைய பார்வை, கூர்மையும் தெளிவும் கொண்டிருப்பது மிகவும் அவசியம். பெண்ணியம், அத்தகையதொரு கூர்மையைத் தந்திருப்பதோடு, வழக்கமான விளக்கங்களுக்கு மாற்றாகப் (alternative) புதிய விளக்கங்களை- பெண்மை- என்ற கோணத்திலிருந்து தந்திருக்கிறது. எனவே திறனாய்வுக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்திருக்கிறது. நவீன இலக்கியத்தை எழுதுவதற்குரிய புதிய தளங்களை அது முன்வைக்கிறது; அதேபோது, வாழ்க்கைநிலையிலுள்ள எதிரும்புதிருமான பிரச்சனைகளின் உண்மைகளைக் காட்டிச் சிந்திக்கவும் தூண்டுகிறது. அண்மைக் காலமாக - குறிப்பாக 1970-களுக்குப் பிறகு, தமிழகத்தில் பெண்விடுதலை முழக்கங்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. அதன் பின்னணியில் இலக்கியத்திலும் பெண்ணியச் சிந்தனை பெருகி வந்துள்ளது.