Primary tabs
- 1.6 தொகுப்புரை
அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதர்களையே தன் சிறுகதைகளில் கதை மாந்தர்கள் ஆகியிருக்கிறார் சூடாமணி. உள்ளத்தே மறைந்து கிடக்கும் அன்பின் ஆழத்தை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தும் மனிதர்கள், அன்புக்கும் தோழமைக்கும் ஏங்கும் சிறுவர் சிறுமியர், வறுமையிலும் பெருமிதமுடைய பெண்கள் மற்றும் சிறுவர்கள் இவர்களே பெரும்பாலும் இவர் படைக்கின்ற கதைமாந்தர்கள். கள்ளம் கபடம் அற்ற குழந்தைகளும், சிறுவர் சிறுமிகளுமே இவ்வுலகத்தில் மகிழ்ச்சியைத் தோற்றுவிப்பவர்கள். முதியவர்களுக்கு ஏற்படும் அலுப்பையும் சலிப்பையும் போக்க வல்லவர்கள் இவர்கள்.
மனித உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகளிலும் பலப்பல வகையான உணர்வுகளைக் காணமுடிகிறது.
எளிமையான மொழிநடையைக் கையாண்டு வாசகர் மனம்கொள்ளச் சுவையாகக் கதை சொல்வது இவர் சிறப்பு. 50 ஆண்டுகளுக்கு மலோக நல்ல தரமான கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர். பல இதழ்களிலும், ஆண்டு தோறும் வெளிவரும் தீபாவளி மலர்களிலும் தொடர்ந்து படைப்புப் பணி செய்பவர். பிரச்சினைகளைப் பெரிதாக்கிக் காட்டாமல் எளிமையாகத் தீர்வு சொல்வதும் இவர் படைப்பின் சிறப்பு. இதனால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது.