Primary tabs
6.6 தொகுப்புரை
உலகளவில் அறிவியல் மகத்தான வளர்ச்சி பெற்று வருகிறது. இத்துறையின் கண்டுபிடிப்புகள் மானுட அறிவின் எல்லையற்ற ஆற்றலைக் காட்டுகின்றன. இத்தகைய சூழலில் இந்தியாவில் அறிவியலின் அசுர சாதனைகளைக் கொண்டு ஓர் ஆட்சி நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனைக்காக இந்நாவலை சுஜாதா படைத்துள்ளமை அவரது அறிவியல் ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது. இம்முயற்சியில் அவரது சமுதாயப் பார்வை இன்றைய இந்தியனின் நிலையை ஒட்டியே காட்டப்படுகிறது. அரசு சட்டங்கள் மனிதனின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக இருந்தாலும் மக்கள் அரசின் வசதியான வாழ்விற்குரிய சலுகைகளால் எவ்வாறு ஆட்டு மந்தைகளாக்கப்படுகிறார்கள் என்பதை அவர் விளக்கியுள்ளார். ஆதலின் கடின உழைப்பு மட்டும் சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கியமல்ல. எந்தவொரு ஆட்சிமுறைச் செயல்பாட்டிலும் சமூகத்தைப் பாதிக்கக் கூடிய நன்மை தீமைகளை ஆராய்ந்து அதற்கேற்பச் செயலாற்றி ஆட்சிமுறையை மேன்மைப்படுத்தும் தொடர்முயற்சி மக்களிடம் இருந்தால் மட்டுமே மனித சமுதாயம் சிறப்புறும் என்ற கருத்தை அவர் நிலைநாட்டுகிறார். மக்களாட்சி, அறிவியலாட்சி இவற்றின் ஆட்சி முறையில் உள்ள நிறைகுறைகளை நிகழ்ச்சிகளின் மூலம் சுட்டிக் காட்டுவதுடன் மக்களின் விழிப்புணர்வு மட்டுமே சமுதாய நலத்தை என்றும் தக்கவைக்கும் வழியாகும் என்று அவர் தீர்வு காணுகிறார்.