தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.2 கதைச் சுருக்கம்

  • 6.2 கதைச் சுருக்கம்

    சேரன் செங்குட்டுவன் வடக்கே கனக விசயர்களை வென்று, அவர்கள் தலையில் கண்ணகிக்குக் கல்கொண்டு வந்து வஞ்சிமாநகரில் விழா எடுக்கிறான்.

    • அடலேற்றின் காதல்
    • அந்த வேளையில் சேரன் அவையில் மாங்கனி என்ற கணிகை குலப்பெண் யாவரையும் கவரும் விதத்தில் நடனமாடினாள். அப்போது, அங்கிருந்த அமைச்சர் அழும்பில்வேள் மகன் அடலேறு, அவள் அழகைக் கண்டு மயங்கிக் காதல் கொள்கிறான். தன் மாளிகையில் மாங்கனியை நினைத்தவாறே உட்கார்ந்திருந்த அடலேறுவிடம், மோகூர் மன்னன் பழையனுக்கு எதிராகப் போர்தொடுக்கும் செய்தியைச் சொல்கிறான். அமைச்சரும் அவன் தந்தையுமான அழும்பில்வேள், போருக்குச் செல்லும் எண்ணம் ஒரு பக்கமிருந்தாலும், அந்த இரவில் தனியாக இருக்கும் மாங்கனியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான் அடலேறு. மாங்கனி அவனைத் திட்டியும் பழித்தும் பேசி மறுத்துவிடுகிறாள். ஆனாலும், அடலேற்றின் பண்பினையும் பெருந்தன்மையையும் நினைத்து அவனிடம் மனத்தைப் பறிகொடுத்தவளாகவே காணப்படுகிறாள்.

    • அடலேற்றின் படையெடுப்பு
    • அடலேற்றின் தலைமையில் சேரர் படை மோகூருக்குச் செல்கிறது. ஆடல், பாடல்களுக்காக மாங்கனியும் அவளுடன் ஐந்து பெண்களும் செல்கின்றனர். மோகூரின் வடக்குப் பகுதியில் தனித்தனியாகக் கூடம் அமைத்துத் தங்குகின்றனர். அன்று நள்ளிரவில் அடலேறு மாங்கனியைச் சந்தித்துப் பேசித் தனது கூடாரத்தை அடைகின்றான். அவ்வேளையில் மோகூர் மன்னன் தன் படைத்தலைவனான மலைமேனியை உளவறிந்துமாறு அனுப்புகிறான். மலைமேனி சேரர் படைகளைப் பார்க்கிறான். அதனருகில் மாங்கனியையும் மற்ற பெண்களையும் பார்க்கிறான். பார்த்த மாத்திரத்திலே மாங்கனியையும் மற்ற பெண்களையும் மலைமேனியின் ஆட்கள் காட்டிற்குத் தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

      போர் வெற்றி

      சேரர் படை வீரர்கள் பல படைகளைக் கடந்து பகைவர்களை அழித்து, மோகூருக்குள் நுழைந்து, வெற்றி பெற்றுப் பெருமகிழ்ச்சியோடு அரண்மனைக்குள் நுழைய, நான் சரணம்’ எனக்கூறிப் பழையன் பணிந்தான். அவன் பெண் மக்கள் இருவரும் கண்களில் நீர் சொரிய ஆங்கே வந்துநின்றனர். மூவரையும் படைத்தலைவன் தளிவேல் சிறைப்படுத்தினான்.

      அடலேற்றின் செயல்கள்

      மோகூர் நாட்டைக் கைப்பற்றிய பெருமிதத்துடன் அந்த நகரை வலம் வந்தான் அடலேறு. அப்போது கட்டுப்பாடற்ற சில சேர வீரர்கள் அக்கிரமச் செயல்கள் செய்வதைப் பார்த்துக் கண்டித்தான் அடலேறு. தளிவேல் என்பவன் பழையன் மகள் பொன்னரசியின் கூந்தலை அறுத்துவிடுகிறான். தென்னரசி மட்டும் அவனை எதிர்த்து நின்றாள். அந்த நேரத்தில் அங்கு வந்த அடலேறு, தளிவேலைக் கண்டித்து, அவனது வீரப்பதக்கங்களைப் பறித்தான். பின்னர், பழையன் மற்றும் மக்கள் இருவரையும் விடுவித்து அவர்களைத் தேற்றுகிறான். உடனே, பழையன் அடலேற்றை விருந்திற்கு அழைக்கிறான். அடலேறு அவ்விருந்தில் கலந்து கொள்கிறான். அப்போது பழையன் மகளிர் முக்கனியைக் கொண்டு வந்து படைக்கும் நேரத்தில், மாங்கனியைத் தொட்டு எடுக்கும் நேரத்தில், காட்டுவெளியில் தங்கவைத்துவிட்டு வந்த தன் காதலி மாங்கனி நினைவுக்கு வர விரைவாகப் புறப்பட்டுப் போய்விடுகிறான். அவனது செயலை நினைத்துப் பழையனும் அவனது மகளிரும் மிகவும் வருத்தமுறுகிறார்கள்.

      அடலேற்றின் பகையும் துன்பமும்

      மாங்கனியைக் காணாதவனாக அடலேறு மிகவும் அழுதுபுலம்புகிறான். ஒன்றும் செய்வதறியாது திகைப்புற்று நிற்கிறான்.

      இந்நிலையில் ‘தளிவேல்’ அடலேறுவிற்குப் பகைவனாக மாறிவிடுகிறான். மாங்கனியை, சூரபதன் என்பவனுக்கு விற்றுவிடுகிறான். மாங்கனியைச் சூரபதன் காவலுக்குட்படுத்திக் கொடுமைகள் பல நிகழ்த்துகிறான்.

      இச்சூழ்நிலையில், வெற்றிப் பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும், தன் காதலியைத் தொலைத்த சோகத்துடன் அடலேறு சேரநாடு திரும்புகிறான்.

      அடலேற்றின் திருமணம்

      சிலநாள்கள் கழித்து, பழையனிடமிருந்து தன் மகள் தென்னரசியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டி ஓலை வருகின்றது. மன்னன் விருப்பப்படியும் தன் தந்தையின் கட்டளையின் பேரிலும் திருமணத்திற்குச் சம்மதித்து அடலேறு மணம் புரிகிறான்.

      மாங்கனியின் வருகை

      பல இன்னல்களிடையேயும் தன் காதலனை மனத்தில் நிறுத்தி நாடி வருகிறாள் மாங்கனி. சேர நாடு வந்தடைகிறாள். அடலேறுவிற்குத் திருமணம் நடந்து முடிந்துவிடுகிறது. கேள்விப்படுகிறாள். ஆறாத்துயரில் மூழ்குகிறாள். தென்னரசியும் அடலேறுவும் இருக்கும் அறையின் அருகில் செல்கின்றாள். அங்கு இருவரும் ஒன்றிப்போய் பேசி மகிழ்வதைப் பார்த்து, ‘அத்தான்’ என்றாள் மாங்கனி. அந்தக் குரலைக் கேட்ட அடலேறு மாங்கனி! மாங்கனி! என்று வெளியே ஓடிவருகிறான்.

      துன்பமுடிவு

      மாங்கனி அங்கு நிற்காமல் துயரத்தோடு ஓடி, சுழன்று வரும் ஆற்றில் விழுகிறாள். அவளைக் காப்பாற்ற அடலேறும் விழ, அவ்விருவரையும் காப்பதற்காகத் தென்னரசியும் விழுந்து விடுகிறாள். இப்படி மூவரும் ஆற்றில் மூழ்கி இறந்து விடுகின்றனர். இக்கதையே மாங்கனி காப்பியம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2018 15:41:36(இந்திய நேரம்)