Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.புறத்திணைகளின் எண்ணிக்கை குறித்து விளக்குகபுறத்திணைகளை அகத்திணைகளுக்கு இணையாக ஏழு எனக் கூறுவார் தொல்காப்பியர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழு திணைகளாகும். தொல்காப்பியருக்குப் பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் பன்னிரண்டு திணைகளாகப் பிரித்தனர். முன்னர்க் கூறிய ஏழு திணைகள் தவிர, கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்னும் ஐந்தும் பிற்காலத்தில் தனிப் புறத்திணைகளாக இணைக்கப்பட்டன. ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியுடன் இணைத்தும், நொச்சியை உழிஞையுடன் இணைத்தும் கூறினார். கைக்கிளை, பெருந்திணையை அகத்திணைகளாகவே தொல்காப்பியர் கருதினார். பொதுவியல் என ஓர் இயல் கூறவேண்டிய தேவை தொல்காப்பியருக்கு ஏற்படவில்லை.