Primary tabs
-
1.0 பாட முன்னுரை
சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று பகுக்கப்படுகின்றன. அடி வரையறை, பொருள் அமைப்பு, பாவகை ஆகியவற்றைக் கொண்டு இந்நூல்கள் பகுக்கப்பட்டுள்ளன. அடிகளால் நீண்ட பத்துப் பாடல்களைப் பத்துப்பாட்டு எனத் தொகுத்தனர். பல்வேறு அடி எண்ணிக்கையில் அமைந்த பாடல்களை அடி எண்ணிக்கை, யாப்பு அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும், அக-புறப் பொருள் அடிப்படையிலும் எட்டுத் தொகுப்புகளாகத் தொகுத்தனர். அவை எட்டுத்தொகை எனப்படும். மேற்காணும் சங்க இலக்கியங்களில், முல்லைத் திணையில் அமைந்த பாடல்களை இப்பாடத்தில் காணலாம்.