Primary tabs
-
1.2 தமிழ் மொழியில் சொல்
பண்டைத்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்லினைக் கிளவி, மொழி, சொல் என்று மூன்று சொற்களால் குறிப்பிடுகிறது. சொல்லுக்குப் பொருள் கொள்ளும் முறை பற்றிய தொல்காப்பியரின் கருத்துகள், இன்றைய பின்-நவீனத்துவக் கோட்பாட்டுச் சிந்தனைக்கு முன்னோடியாக விளங்குகின்றன. அவருடைய கருத்துகளை இங்கே காண்போம்.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
(தொல் : சொல்லதிகாரம் - 155)சொற்கள் பொருள் குறித்து வரும் தன்மையுடையனவே தவிர, பொருளை (அர்த்தம்) ஏற்று வருவதில்லை என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். அதாவது அடிப்படையில் சொற்களுக்குப் பொருள் இல்லை. பொருள் என்பது சொல்லின் இடுகுறித் தன்மையினால் வெளிப்படுகின்றது.
மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா
(தொல் : சொல்லதிகாரம் - 394)ஒரு சொல்லுக்கான பொருளினை அறியமுடியும். ஆனால், அச்சொல் அப்பொருளை உணர்த்துவதற்கான காரணம் வெளிப்படையாகத் தோன்றாது.
பொருட்குப் பொருள் தெரியின் அது வரம் பின்றே
(தொல் : சொல்லதிகாரம் : 391)ஓருசொல் உணர்த்தும் பொருளுக்குப் பொருள் என்ன என்று ஆராய்ந்துகொண்டு போனால், அது வரம்பில்லாமல் விரியும் தன்மையுடையது. அதாவது பொருள் கொள்ளுதல் என்பது பல்வேறுபட்ட சாத்தியப்பாடுகளை உள்ளடக்கியது எனலாம்.
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
(தொல் : சொல்லதிகாரம் : 156)இங்கு, சொல்லுக்குப் பொருண்மை, சொன்மை என்று இரு பண்புகள் உள்ளார்ந்த நிலையில் விளக்கப்பட்டுள்ளன. சொல்லானது பொருண்மை என்ற பொருள் சார்ந்த பண்பும், சொன்மை என்ற ஓசை சார்ந்த பண்பும் கொண்டிருப்பதாக இதனை விளக்கவியலும்.
சங்க இலக்கியப் படைப்புகளைப் படைத்திட்ட புலவர்கள் ஏறக்குறைய 50,000 சொற்களைக் கையாண்டுள்ளனர். இவை அனைத்தும் ஓரசை, ஈரசைச் சொற்களே. எனவே பண்டைக்காலத்தில் புலவர்களும் இலக்கண ஆசிரியர்களும் சொல் பற்றிய புரிதலுடன் செயற்பட்டனர் என்று அறிய முடிகின்றது.