Primary tabs
-
6.5 தொகுப்புரை
தற்கால உரைநடை ஐரோப்பியர் காலமான கி.பி.16-ஆம் நூற்றாண்டிலேயே தொடக்கம் பெற்று, வெளிநாட்டிலிருந்து வந்த கிறித்துவப் பாதிரியார்களால் வளர்ச்சி பெற்றது. அச்சு இயந்திர வருகை உரைநடைக்கு உயிரூட்டியது.
வேதநாயகர், வீரமாமுனிவர் போன்றோர் மெல்ல உரையாசிரியர்களின் உரைநடையிலிருந்து புதிய உரைநடைக்கு நடை பயின்றனர். கிறித்தவத் துண்டுப் பிரசுரங்களே அக்கால உரைநடையை வளர்த்தது எனலாம்.
19ஆம் நூற்றாண்டில் உரைநடை, ஆறுமுக நாவலர், வீராசாமி செட்டியார் போன்றோரால் எளிமையாக்கப்பட்டுப் பரவலாக மக்களிடம் சென்றது.
இருபதாம் நூற்றாண்டு உரைநடைக்குப் பொற்காலம் எனலாம். வேதநாயகம் பிள்ளை, இராஜமையர் போன்றோரின் படைப்புகள் பேச்சு வழக்கிலும், யாவரும் விரும்பிப் படிக்கும் முறையிலும் அமைந்தன. தனித்தமிழ்நடை தந்த மறைமலையடிகள், துணிவு தரும் நடையிலான உரைநடை கண்ட பெரியார், மறுமலர்ச்சி நடை தந்த திரு.வி.க., பாரதி, வ.ரா எனப் பலர் உரைநடைக்கு உரமிட்டனர்.
புதுமைப்பித்தன் தொடங்கி இன்னும் மலர்ச்சி பெற்றது உரைநடை. வட்டார வழக்குகள், புதிதாக எழுதிப் பார்க்கும் முறை என உரைநடை வளர்ந்தது. கி.ராஜநாராயணன், அ.மார்க்ஸ், எஸ்.இராமகிருஷ்ணன், பாமா, ப.சிவகாமி, சல்மா என விதவிதமான மொழிகளின் கலவையில் தமிழ் உரைநடை இன்று வளர்ச்சியின் உச்சிக்குச் சென்றுள்ளது.