தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.2-குடிமையும் செயலும்

  • 4.2 குடிமையும் செயலும்


        ஒருவன் தான் பிறந்த குடியை உயர்வு அடையச் செய்ய வேண்டும்
    என்ற விருப்பம் மட்டும் இருந்தால் போதாது. அதை அவன்
    செயல்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவன் குடி உயரும்,
    மேம்பாடு அடையும். அதற்கு எத்தகைய செயல்களைச் செய்ய
    வேண்டும் என்பது பற்றி வள்ளுவர் பல கருத்துகளைக் கூறியுள்ளார்.

    4.2.1 குற்றமிலாமை


        யாரை உலகு சுற்றமாகக் கொள்ளும்? அள்ளி வழங்கும் வள்ளலாக
    இருக்க வேண்டுமோ? அதற்குச் செல்வம் வேண்டுமே!
    அப்படியானால் செல்வந்தரைத்தான் மக்கள் சுற்றமாகக் கொள்வரா?
    இல்லை. ஒருவன் நல்லவனாக இருந்தாலே போதும் என்கிறார்
    வள்ளுவர்.


    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு



    (குறள்: 1025)


    (குடிசெய்து = குடிஉயர்வதற்கான நற்செயல்களைச் செய்து,
    சுற்றம்
    = உறவினர்)

    தான் குற்றம் எதுவும் செய்யாமல், தன் குடியை உயர்வடையச்
    செய்து வாழ்கின்ற ஒருவனை, உலகிலுள்ள மக்கள் தம்
    உறவினனாகக் கருதி, தாமே சென்று சூழ்ந்து கொள்வார்கள்.

        அன்பு, நாண், ஒப்புரவு (உதவும் பண்பு), கண்ணோட்டம்,
    பொய்யாமை ஆகிய ஐந்து பண்புகளும் நற்குடிப்பிறந்தாரின்,
    சான்றாண்மையின், ஐந்து தூண்கள் என்று வள்ளுவர் பிறிதொரு
    இடத்தில் (குறள்: 983) கூறுகிறார். இவ்வாறு குற்றம் கடிந்து
    நல்லொழுக்க முறையில் குடிசெய்து வாழ்வாரை உலகிலுள்ள மக்கள்
    தம் உறவாகக் கொள்வர்.

    4.2.2 உழைப்பு


        யாராவது ஒருவர், ஏதாவது ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு
    அதைத் தேடினால், உடனே, ‘உழைத்துச் சம்பாதித்ததாக இருந்தால்
    அது தானே கிடைக்கும்; கவலைப்படாதீர்கள்’ என்று கூறுவது மரபு.
    இதிலிருந்து என்ன தெரிகிறது? உழைப்பு வீணாகாது, உழைத்த காசு
    பாழாகாது என்பது மக்களின் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை,
    தமிழர்களிடம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இதனை
    வள்ளுவர் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். பொருளை
    ஒருவருக்கு ஈவதாக இருந்தாலும், உன் முயற்சியால், உன்
    உழைப்பினால், பெற்ற செல்வமாக இருந்தால் மட்டுமே பிறருக்குக்
    கொடு என்கிறார் (குறள்: 212). அதைத் ‘தாளாற்றி தந்த பொருள்’
    (தாள் = முயற்சி) என்று குறிப்பிடுகிறார். மேலும், எந்த அளவுக்கு
    உழைக்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்குப் பலன் கிட்டும் (குறள்:
    619) என்று இன்னொரு இடத்திலும் கூறுகிறார். எனவே,
    இவற்றிலிருந்து     உழைப்பிற்கு     வள்ளுவர்     சிறப்பிடம்
    கொடுத்துள்ளமை புலப்படும்.

        குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து உயர்வடையச் செய்ய
    விரும்புபவன் செய்யவேண்டிய செயலில் முதன்மையானது தானே
    உழைத்தல் என்கிறார் வள்ளுவர்.


    தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
    உண்ணலின் ஊங்கு இனியது இல்



    (குறள்: 1065)


    (அடு = சமைத்த, புற்கை = கூழ், தாள் = முயற்சி,
    ஊங்கு
    = மேம்பட்டது)

    தன் உழைப்பினால் சம்பாதித்துத் தான் சமைத்த கூழ், தெளிந்த நீர்
    போல இருப்பினும் தன் உழைப்பினால் கிடைத்த அந்த உணவை
    உண்ணுவதைவிட இனிமையானது வேறு ஒன்றுமில்லை.

        தன் உழைப்பினால் கிடைத்த பொருள், மிகவும் குறைவாக
    இருக்கலாம். அதனால் கெட்டியாக இல்லாமல் நீரோட்டம் போன்ற
    கூழை மட்டுமே சமைக்க இயலும். இருந்தாலும் தான் உண்ணும்
    கூழ், தன் உழைப்பினால் ஈட்டிய பொருளால் ஆனது என்பதை
    நினைக்கும்பொழுது பெருமை ஏற்படும், மகிழ்ச்சி ஏற்படும். எனவே
    தன் உழைப்பால் பெற்ற உணவு நீரோட்டம் போன்ற கூழாக
    இருந்தாலும் அதுவே இனிக்கும் என்கிறார் வள்ளுவர். எனவேதான்,
    இன்னொரு குறளிலும் (குறள்: 1033) உழுது (உழைத்து) உண்டு
    வாழும்படி கூறுகிறார்.

    4.2.3 குறிப்பறிந்து கொடுத்தல்


        தன் குழந்தையின் முகத்தைப் பார்த்த உடனேயே, அந்தக்
    குழந்தையின் முகக்குறிப்பை அறிந்து அது வாய் திறந்து
    கேட்பதற்குள்ளாகவே உதவும் இயல்பு தாயிடம் உள்ளது. அது
    போலவே, ஒரு நல்ல குடியில் பிறந்தவன், தன்னிடம் வந்து ‘ஐயா
    என்னிடம் ஒன்றும் இல்லை. நான் வறுமையால் வருந்துகின்றேன்.
    எனக்கு உதவுங்கள்’ என்று கேட்பதற்குள்ளாகவே, வந்தவனின்
    முகக்குறிப்பை அறிந்து செயல்பட வேண்டும். யாசிப்பவன்
    கேட்பதற்குள்ளாகவே கொடுக்கும் நல்ல இயல்பு, நல்ல குடியில்
    பிறந்தவனிடமே உள்ளது என்கிறார் வள்ளுவர். இதனை,


    இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன் உடையான் கண்ணே உள



    (குறள்: 223)


    (இலன் = இல்லை, எவ்வம் = துன்பம், குலன் = நல்ல குலத்தைச்
    சார்ந்தவன், கண்ணே = இடத்தில்)

    என்று குறிப்பிடுகிறார்.

        ‘யான் வறியவன், என்னிடம் ஒன்றும் இல்லை’ என்னும் துன்பச்
    செய்தியை ஒருவன் கூறுவதற்கு முன்னரே, அந்த வறியவனுக்கு
    உதவ முன்வருதல் நல்ல குடியில் பிறந்தானின் இயல்பு என்பது
    இந்தக் குறள் தரும் செய்தி.

        வறுமை என்பதே துன்பம் தருகின்ற ஒன்று. அந்த வறுமையைச்
    சொல்லி, பிறரிடம் சென்று, தன்னிடம் உண்ணுவதற்குக் கூட
    ஒன்றும் இல்லை என்று சொல்வது அதைவிட மிகுந்த துன்பம்
    தரக்கூடியது. எனவேதான் சிலர், பிறரிடம் சென்று யாசிப்பதற்கு
    நாணி, அப்படியே வறுமையோடு இருந்து மடிகின்றனர். இதனை
    உணர்ந்த வள்ளுவர், இல்லை என்று சொல்வதையே ‘எவ்வம்’
    அதாவது துன்பமானது என்று சுட்டுகின்றார். வறுமையால்
    துன்பப்படுகின்ற ஒருவன் தன் வறுமையை நினைத்து தன்னிடம்
    ஒன்றும் இல்லை என்று சொல்லி மேலும் துன்பப்படாமல், அவன்
    வாய் திறந்து தன் இல்லாமையைச் சொல்வதற்கு முன்னாலேயே
    உதவவேண்டும். அவ்வாறு உதவும் இயல்பு நல்ல குடிப்பிறப்பைச்
    சார்ந்தவர்களிடமே உள்ளது என்கிறார் வள்ளுவர்.


    தன் மதிப்பீ்டு : வினாக்கள் : I

    1. நல்ல குடியில் பிறந்தோர், நாணத்தைக்
      காப்பாற்றுவதற்காக என்ன செய்வார்கள்?
    1. மானத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையும்
      விடக் கூடியவர்களை வள்ளுவர் எதனோடு
      ஒப்பிடுகிறார்? ஏன்?
    1. தவறான தீர்ப்பால் தன் குலத்தின் மானமே
      போய்விட்டதே என்று வருந்தி உயிர் விட்ட
      மன்னன் யார்?
    1. யாரை உலகு சுற்றமாகச் சுற்றும்?
    1. எந்த உணவை உண்ணும்பொழுது மிகவும்
      இனிமையாக இருக்கும்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:55:34(இந்திய நேரம்)