தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.1-நாடு: ஒரு விளக்கம்

  • 4.1 நாடு : ஒரு விளக்கம்

    E

    குறையாத விளைபொருள், தக்கார், அழியாத செல்வம் ஆகிய
    மூன்றும் பொருந்தி இருக்கும் நாடே, நாடு என்று அழைப்பதற்குத்
    தகுதி வாய்ந்தது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலாச்
    செல்வரும் சேர்வது நாடு



    (குறள் : 731)


    (தள்ளா = குறையாத, தக்கார் = தகுதி வாய்ந்தவர்,
    தாழ்வு
    = குறைவு அல்லது அழிவு).


    4.1.1 நாடும் பொருளும்

    பொருள் என்றால் என்ன? வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப்
    பொருள்களும் பொருள் எனப்படும். நம் உடைமைகள், நாம்
    வைத்து, அனுபவித்து மகிழும் பொருள்கள், நாம் உற்பத்தி
    செய்யும் உணவு வகைகள் முதலியன அதில் அடங்கும்,

    பொருள் வளமே, நாட்டின் வளமாகக் கருதப்படுகிறது. பொருள்
    வளம் பெற்ற நாட்டில், மனிதப் பண்பு மேம்பாடு அடையும்.
    சமுதாய ஒழுக்கம் உயர்வு அடையும். இல்லாமையால் அல்லது
    வறுமையால் ஏற்படும் தீமைகள், கேடுகள் அழியும். பொதுவாகக்
    கூறினால் நாடு நலம் பெறும்.

    மேலும் ஒரு நாட்டின் வளம் அல்லது செல்வம், நாட்டின்
    உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டே அமையும். ஒரு
    நாட்டின் உற்பத்திப் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு
    தான், ஒரு நாடு முன்னேறிய நாடா? அல்லது முன்னேறாத
    நாடா? என்பதைக் கணக்கிடுவார்கள்.



    எனவே, வள்ளுவரும், ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும்
    என்று குறிப்பிடும் போது பொருளை அதாவது விளைபொருளையே
    முதலில் குறிப்பிடுகிறார். அதைத் தள்ளா விளையுள் என்று
    சுட்டுகிறார். தள்ளா என்றால் குறையாது அல்லது அழியாது
    விளையும் பொருள் என்று கொள்ளலாம். அதாவது நிலத்தில்
    விளைவிக்கப்படும் உணவுப் பொருள்.


    • உணவு

    தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலை, உயிர்களின் வாழ்க்கைக்கு
    உணவு எவ்வளவு முக்கியமானது என்பதனை எடுத்துரைக்கும்.
    இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு உண்ணுவதற்கு உரிய
    உணவு கொடுத்தோர், உயிர் கொடுத்தோராகக் கருதப்படுவார்கள்.


            மண் திணி ஞாலத்து
             உண்டி கொடுத்தோர்
            உயிர் கொடுத்தோரே


    (மணிமேகலை - காதை வரி)


    (உண்டி = உணவு)

    என்று குறிப்பிடுகிறது மணிமேகலை. உணவு இல்லாமல் எந்த
    உயிரும் வாழ இயலாது. எனவே, உயிர் வாழ்வதற்கு அடிப்படைத்
    தேவை உணவு. மேலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு
    இல்லாத நாடு, பொருளியல் வளம்பெற்ற நாடாகக் கருத இயலாது.
    உணவுப் பற்றாக் குறையே, நாட்டின் அமைதி இன்மைக்கும்,
    சமூக விரோதச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணம்.

    ஒரு நாட்டில் நிலையான அரசும், நேர்மையான ஆட்சியும்,
    செல்வச் செழுமையும், அமைதியும் இருக்க வேண்டுமானால்,
    அந்நாட்டில் உணவு போதிய அளவுக்கு விளைவிக்கப்பட வேண்டும்.

    உணவு உற்பத்திக்கு அடிப்படை அமைத்துக் கொடுப்பது மழை.
    மழை இல்லாவிட்டால், இந்த உலகத்தில் ஒரு புல்கூட
    முளைக்காது. உயிர் வாழ்வதும் கடினம். இந்த உண்மையை நன்கு
    உணர்ந்தவர் வள்ளுவர். உலகிற்கு உணவுப் பொருள்
    உற்பத்தியாவதற்குக் காரணம் மழை. எனவே மழையைப் பற்றிய
    கருத்துகளை வழங்குவதற்கு வள்ளுவர் ஓர் அதிகாரத்தை
    அமைத்துள்ளார்.

    கடவுள் வாழ்த்திற்கு அடுத்த நிலையில் இரண்டாவதாக வான்
    சிறப்பு என்ற அதிகாரத்தை அமைத்துள்ளார். இதிலிருந்து
    மழைக்குத் திருவள்ளுவர் கொடுத்த சிறப்பு புலனாகும்.

    வானுலகத்தில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவை ‘அமிழ்தம்’
    என்பார்கள். அமிழ்தத்தை உண்டால் இறப்பு இல்லை என்பர்.
    தேவர்கள் அமிழ்தத்தை உண்டு சாகாவரம் பெற்றனர். எனவே
    இதைத் தேவாமிர்தம் என்பர். நாம் உண்ணும் உணவு மிகவும்
    இனிமையாகவோ, சுவையாகவோ இருந்தால் அமிழ்தம் போல்
    இருக்கிறது என்கிறோம். அமிழ்தத்தை உண்ட அனுபவமோ
    கண்ணால் கண்ட அனுபவமோ இல்லாமலே ‘என்ன சுவை! என்ன
    சுவை, அமிழ்தம் போல் இருக்கிறது’ என்று சொல்கிறோம்.
    ‘அமிழ்தம்’ என்ற சொல் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது.
    எனவே தான் உயிர்களை வாழவைக்கும் உணவைத் தரும்
    மழையையும் அமிழ்தம் போன்றது என்கிறார் வள்ளுவர்.



    வான்நின்று உலகம் வழங்கி வருதலான்
    தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று



    (குறள் : 11)


    (பாற்று = தன்மை)

    உணவின் சிறப்பினை அறிந்த வள்ளுவர், உணவைத் தரும்
    மழையையும், வான் உலகத்தில் வாழும் தேவர்களது உணவாகிய
    ‘அமிழ்தம்’ என்று கருதத் தக்கது என்று குறிப்பிடுகிறார்.

    எனவே, உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு, ஒரு நாட்டின்
    உயிர்நாடி போன்றது. நாட்டின் உயர்வு-தாழ்வு, செழுமை-வறுமை,
    இன்பம்-துன்பம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் தகுதி வாய்ந்தது.
    இத்தகு உணவைத் தருவது மழை.


    4.1.2 அழியாப் பொருள்

    இன்று உலக நாடுகளை மூன்று பெரும் பிரிவுகளாகப்
    பிரிப்பார்கள். அவை, முன்னேறிய நாடுகள் (Developed
    Countries), முன்னேறும் நாடுகள் (Developing Countries),
    முன்னேறாத நாடுகள் (Under Developed Countries) என்பவை.

    சப்பான், செர்மன், இங்கிலாந்து, அமெரிக்கா முதலியன முன்னேறிய
    நாடுகளாகக் கருதப்படுகின்றன.

    இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்றவை முன்னேறும் நாடுகளாக
    எண்ணப்படுகின்றன.

    எத்தியோப்பியா, சாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள்
    முன்னேறாத     நாடுகளாகக்      கணக்கிடப்படுகின்றன.
    மேற்குறிப்பிட்டவாறு     வரையறை     செய்வதற்கு என்ன
    அடிப்படை? அந்த நாடுகளின் பொருளாதார நிலையே.

    பொருளாதார நிலை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?
    நாட்டின் செல்வச்செழிப்பு அல்லது பொருள் வளத்தின்
    அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே நாட்டின் செல்வம்
    எந்த நிலையிலும் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
    இயற்கையின் சோதனைகளாலோ,     அல்லது பகைவர்களின்
    படையெடுப்புகளாலோ, அழிவு வரலாம். அப்பொழுது எல்லாம்
    நாட்டின் செல்வவளம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
    நாட்டில் செல்வம் அழியாத் தன்மை உடையதாக இருக்க
    வேண்டும். அத்தகைய தன்மை வாய்ந்த நாடே, நாடுகளுள்
    எல்லாம் சிறந்த நாடு என்கிறார் வள்ளுவர்.


    கேடு அறியா, கெட்ட இடத்தும் வளம் குன்றா
    நாடு என்ப நாட்டின் தலை



    (குறள் : 736)


    எதிர்பாராத விதமாக, நாடுகளுக்கு இடையே போர் அல்லது
    படையெடுப்பு, இயற்கை நிகழ்வுகள் முதலியவற்றால் பாதிப்புகள்
    அல்லது சேதங்கள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டாலும், அந்த
    நாட்டில் செல்வம் அழியாமல் இருக்க வேண்டும்.

    அவ்வாறு அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால் என்ன
    செய்யவேண்டும்? எத்தகையச் சூழல் வந்தாலும், பாதகமான
    விளைவுகள் நிகழ்ந்தாலும் நாட்டின் செல்வம் அழியாதவாறு,
    முன்எச்சரிக்கையாகச் செல்வத்தைப் பாதுகாப்பாகச் சேமித்து
    வைத்திருக்க வேண்டும். அல்லது, இழந்த செல்வத்தை மீண்டும்
    பெற, நிறைவு செய்ய உழைத்து உற்பத்தியை அல்லது
    பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டும்


    எடுத்துக்காட்டாக, இரண்டாவது உலகப்போரில், சப்பான்நாடும்,
    செர்மன்நாடும் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள். அதனால்
    அந்நாட்டினரின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
    இருப்பினும் தங்களது கடினமான உழைப்பால், உற்பத்திப்
    பெருக்கத்தால் அழியாச் செல்வம் படைத்த நாடாக, ஏனைய
    நாடுகளை எதிர்பார்க்காத வளமான நாடுகளாக மாறிவிட்டன.

    எனவேதான் வள்ளுவர், எதிர்பாராத வகையில் செல்வ இழப்பு
    அல்லது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், அந்த நாடு
    பாதிக்கப்படாத வகையிலான செல்வம் உடையதாக இருத்தல்
    வேண்டும், அதுதான் நாடுகளுள் சிறந்தநாடு என்கிறார். இழந்த
    செல்வத்தைச் சரிசெய்யும் ஆற்றல் வாய்ந்தநாடு நாடுகளுள்
    சிறந்தநாடு என்று குறிப்பிடுகிறார்.

    வள்ளுவரின் இத்தகைய கருத்துகள், அறிவியலில் முன்னேற்றம்
    பல பெற்ற இந்த நூற்றாண்டிற்கும் பொருந்தக்கூடிய
    சிறந்த பொருளாதார கருத்துக்களாக அமைந்துள்ளன. இது
    எதைப் புலப்படுத்துகிறது? வள்ளுவரின் உயர்ந்த சிந்தனை
    வளத்தையே!.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:13:43(இந்திய நேரம்)