தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

D03114-4.2 திணையின் தொடர்புடையவை

4.2 திணையின் தொடர்புடையவை

திணையின் தொடர்புடையனவாகத் திணை, கைகோள், கூற்று,
கேட்போர், இடம், காலம் என்பனவற்றைக் கொள்ளலாம்.


4.2.1 திணையும், கைகோளும்

திணை, கைகோள் என்னும் இரண்டும் அகப்பாட்டு உறுப்புகள்
பன்னிரண்டில் முதல் இரண்டாக இடம் பெற்றவை. இவற்றுள் திணை
என்பது குறிஞ்சி முதலான ஏழு என்றும், கைகோள் என்பது களவு, கற்பு
என்னும் இரண்டு என்றும் முன்னர்க் கண்டோம்.

இவ்விரு அகப்பாட்டு உறுப்புகளும் முறையான வரிசை முறை பற்றி
இங்குக் கூறப்பட்டன. ஆனால் நம்பி அகப்பொருள் நூலின்
தொடக்க இயலாகிய அகத்திணையியலில் இவ்விரண்டும், விரிவாக
விளக்கப்பட்டு விட்டன. இதனையே நாற்கவிராச நம்பி

அவற்றுள், முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும்
                     (ஒழிபியல்,3)

என்று ஒரு நூற்பாவாக்கிக் குறிப்பிட்டுள்ளார்.


4.2.2 கூற்று

இது அகப்பாட்டு உறுப்புகளில் மூன்றாவதாக இடம்பெறுவது.
அகப்பாடல்களில் பேசுவோர் யார் என்பதை உணர்த்தும் பகுதி கூற்று
எனப்படும். இதனை மூன்று நிலைகளில் பிரித்துக் காணலாம்.
அவையாவன:

# களவில் கூற்றிற்கு உரியோர்

# கற்பில் கூற்றிற்கு உரியோர்

# கூற்றிற்கு உரிமை இல்லாதோர்

களவில் கூற்றிற்கு உரியோர்

தலைமக்களின் மறைமுகக் காதல் வாழ்க்கைக்குக் களவு என்று
பெயர். அவ்வாறு களவு வாழ்க்கை நிகழும் போது, பேசுவதற்கு
உரியவர்களாக, தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி,
செவிலி
என்னும் அறுவகைப்பட்டோரை நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச்
சொல்கிறார்.

களவில் கூற்று - சிறப்புச் செய்திகள்

தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி
என்னும் அறுவரும் களவில் கூற்று நிகழ்த்துவர். அவ்வாறு கூற்று
நிகழ்த்தும்போது அவர்கள் கூற்றிற்குக் குறிப்பிடத்தக்க சில சிறப்புச்
செய்திகளை நாற்கவிராச நம்பி குறிப்பிடுகின்றார். அவற்றை இனிக்
காண்போம்.

* தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு உடன் போக்காகச்
செல்லும்போது அவளது உறவினர் வந்தால் தலைவியைப் பார்த்து
‘ஆணை’ இடுவதுபோல் சில சொற்களைக் கூறுவான்.

* தலைவன் பிரியும்போது தலைவியானவள்     பாலைவனத்தின்
கொடுமையைக் குறிப்பிடுதலும், அதையும் மீறித் தலைவன் பிரிந்து
சென்றபோது தன்     நெஞ்சோடும் பிறரோடும், வருத்தத்தை
வெளிப்படுத்திப் பேசுதலும் உண்டு.

* தலைவி உடன்போக்காகச்     சென்ற     பிறகு, அதுபற்றிச்
செவிலித்தாய் தோழியோடும் நற்றாயோடும் பேசுவாள்.

* தலைவி அஃறிணை உயிர்கள் மற்றும் உயிரற்ற பொருட்களைப்
பார்த்து அவை தன் சொற்களைக் கேட்பன போலவும், தனக்குப்
பதில் சொல்வன போலவும், தன் கட்டளையை நிறைவேற்றுவன
போலவும், தனக்குத் தானே நினைத்துக்கொண்டு பேசுவதும் உண்டு.

கற்பில் கூற்றிற்கு உரியோர்

தலைமக்கள் ‘களவு’ வாழ்க்கையில் இருந்து மாறி ‘வரைவு’ என்னும்
திருமணத்தின் பிறகு மேற்கொள்ளும் புதிய இல்லற வாழ்க்கைக்குக்
‘கற்பு’ என்று பெயர். அவ்வாறு நிகழும் கற்பு வாழ்க்கையிலும்
நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தை, அறிவர்
(சான்றோர்) என்னும் எழுவரும் கூற்று நிகழ்த்துவர். இவ்வெழுவர்
தவிர, களவில் கூற்று நிகழ்த்திய தலைவன் முதலான அறுவரும் கூற்று
நிகழ்த்துவர். அவ்வகையில் கற்பில் கூற்றிற்கு உரியவர்கள் பதின்மூவர்
ஆவர்.

கற்பில் கூற்று - சில சிறப்புச் செய்திகள்

தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும்
அறுவரும், நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தை
என்னும் எழுவரும் ஆகப் பதின்மூவரும் கற்பில் கூற்று நிகழ்த்துவர்.
அவ்வாறு கூற்று நிகழ்த்தும் போது அவர்கள் கூற்றிற்குக்
குறிப்பிடத்தக்க சில சிறப்புச் செய்திகளை நாற்கவிராச நம்பி
குறிப்பிடுகின்றார். அவற்றை இனிக் காண்போம்.

* நற்றாய், தனது மகள் (தலைவி) தலைவனுடன் உடன்போக்காகச்
சென்றதை அறிந்தபின் தெய்வம், அறிவர், அந்தணர், அயலோர்,
செவிலி, தோழி, கண்டோர் முதலான அனைவரோடும் கூற்று
நிகழ்த்துவாள்.

* உடன்போக்காகச் செல்லும் தலைவன் தலைவியை இடைவழியில்
சந்திப்பவர்கள் கண்டோர் எனப்படுவர். அவர்கள் நற்றாய், தோழி,
தலைவன், தலைவி என்னும் நால்வரோடும் கூற்று நிகழ்த்துவர்.

* பார்ப்பான், பாங்கன், பாணன், கூத்தர், விறலி, பரத்தை, அறிவர்
என்னும் எழுவரும் எல்லா     இடங்களிலும் தலைவன் தலைவி
இருவருக்கும் பொருத்தமானவற்றை     எடுத்துக்கூறும் கூற்று
நிகழ்த்துவர்.

* கூற்று நிகழ்த்துவதற்குரிய பதின்மூவரும் தமக்குத் தாமே பேசிக்
கொள்வதாகவும் சில கூற்றுகள் அமைவதுண்டு.

கூற்றிற்கு உரிமை இல்லாதோர்

தந்தை, தன் ஐயர் (தலைவியின் தமையன்மார்), தலைவியின்
காமநோய் அறிவோர், ஊரவர், அயலோர், சேரியோர் என்னும்
அறுவரும் களவு கற்பு என்னும் இரண்டு இடங்களிலும் கூற்று
நிகழ்த்துதல் இல்லை. இவர்களையே கூற்றிற்கு உரிமை இல்லாதோர்
என்று குறிப்பிட்டார் நாற்கவிராச நம்பி.


4.2.3 கேட்போர்

இது அகப்பாட்டு உறுப்புகளில் நான்காவதாக இடம்பெறுவது.
அகப்பாடல்களில் பலரும் கூற்று நிகழ்த்துவர் அவர்கள் நிகழ்த்தும்
கூற்றுகளைக் கேட்போர் யாவர் என்பதை இப்பிரிவில் நாற்கவிராச நம்பி
விளக்கியுள்ளார்.

தலைவன் தலைவி என்னும் இருவர் கூற்றுகளையும் நற்றாய் தவிர
மற்ற யாவரும் கேட்பர். பார்ப்பான், அறிவர் என்னும் இருவரது
கூற்றுகளை எல்லோரும் கேட்பர்.


4.2.4 இடம்

இது அகப்பாட்டு உறுப்புகளில் ஐந்தாவதாக இடம் பெறுவது.

அகப்பாடல்களில் உணர்த்தப்படும் காதல் செயல்பாடுகள் நிகழும்
நிலம், இடம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தலைமக்கள் சந்திக்கும் இடம், பேசும் இடம், குறி இடம்,
புணர்ச்சிக்குரிய இடம் என்பனவாகப் பல நிலைகளில் விரிவுபடுத்திப்
பொருள் உணர்ந்து கொள்ளலாம்.


4.2.5 காலம்

இது அகப்பாட்டு உறுப்புகளில் ஆறாவதாக இடம் பெறுவது.
பொதுவாகக் காலம் என்பது மூவகைப்படும். இறந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம் என்பன     அவை,     இம்மூன்றே அகப்பாடல்களில்
உணர்த்தப்படும் செய்திகளுக்கும் உரிய காலங்களாக அமைகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

ஒழிபியல் விளக்கம் - தருக.

விடை
2.

அகப்பாட்டு உறுப்புகள் எத்தனை - யாவை?

3.

களவில் கூற்றிற்கு உரியோர் யாவர்?

4.

கற்பில் கூற்றிற்கு உரியோர் யாவர்?

5.

இடம், காலம் - விளக்குக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:17:54(இந்திய நேரம்)