Primary tabs
-
கால ஓட்டத்தில் தேவாரப் பாடல்கள் பல மறைந்து போயின. சோழ மாமன்னன் முதலாம் இராஜராஜன் (கி.பி.10 ஆம் நூற்றாண்டு) இவற்றை மீட்டெடுக்க விரும்பினான். தேவாரம் எழுதிய ஓலைகள் சிதம்பரம் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மாமன்னன் பெருமுயற்சி செய்து அடைத்த கதவுகளைத் திறக்கச் செய்தான்.
மலைபோலக் குவிந்து கிடந்தன தேவார ஓலைகள். அவற்றில் கறையானால் அரிக்கப்பட்டுப் போன ஓலைகள் பல. ஒடிந்து போன ஓலைகள் பல. இருந்தும் நம்பியாண்டார்நம்பி என்பவரைக் கொண்டு பல ஓலைகளை மீட்டெடுத்தான் மன்னன்.
தேடிக் கண்டெடுத்த தேவாரப் பதிகங்கள் அனைத்தும் நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பட்டன. அவற்றை ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார். சம்பந்தர் பாடிய தேவாரங்கள் முதல், இரண்டு, மூன்று, என்னும் திருமுறைகளாயின. அப்பர் பாடியவை நான்கு, ஐந்து, ஆறு என்னும் திருமுறைகளாயின. சுந்தரர் பாடியவை ஏழாந் திருமுறையாக வகுக்கப்பட்டன.
இவ்வாறு வகுக்கப்பட்ட திருமுறையுள் மொத்தம் 797 பதிகங்கள் இன்று கிடைக்கின்றன, இடையில் இல்லாதவை போக இவற்றுள் 8272 தேவாரப் பாடல்கள் அடங்கும். இதனை விவரமாக இங்குப் பார்க்கலாம்.
தேவார அமைப்பு
அருளியோர்திருமுறை எண்கள்பதிகங்கள்பாடல்கள்சம்பந்தர்முதல், இரண்டு, மூன்று3844169அப்பர்நான்கு, ஐந்து, ஆறு3123066சுந்தரர்ஏழு1011037தேவாரப் பாடல்கள் இசையோடு பாட வேண்டியவை அல்லவா? எனவே சோழ மாமன்னன் இவற்றின் பண்ணிசைகளைப் பாணர் மரபுவழிப் பெண் ஒருத்தி மூலமாக உயிர்ப்பித்தான். தஞ்சையில் தான் கட்டிய ‘ஸ்ரீ இராஜராஜேஸ்வரம்’ என்னும் பெரிய கோயிலில் தேவாரங்களைப் பாட ஏற்பாடு செய்தான். ஐம்பது பாடகர்களை நியமித்தான். இவர்கள் நாள்தோறும் கோயிலில் தேவாரங்களைப் பண்ணிசையில் பாடினார்கள்.
தலைமுறை தலைமுறையாக இவர்கள் வழி வந்தவர்கள் ஓதுவார் எனப்பட்டனர். இவர்கள் தேவாரங்களின் பண்ணிசைகளை மரபுவழி பாடுவர்.
எண்ணற்ற தேவாரப் பண்கள் இருந்தன. அவற்றுள் 23 மட்டுமே இன்று வரை நடைமுறையில் உள்ளன.
தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் இருபத்து மூன்று பண்களில் பாடுவார்கள். அப்பண்கள் பெயர் பின்வருமாறு:
1.செவ்வழிப் பண்2.தக்கராகப் பண்3.புறநீர்மைப் பண்4.பஞ்சமப்பண்5.நட்டபாடைப் பண்6.அந்தாளிக் குறிஞ்சிப்பண்7.காந்தாரப் பண்8.பழம்பஞ்சுரப் பண்9.மேகராகக் குறிஞ்சிப் பண்10.கொல்லிக் கௌவாணப் பண்11.பழந்தக்கராகப் பண்12.குறிஞ்சிப் பண்13.நட்டராகப் பண்14.வியாழக் குறிஞ்சிப் பண்15.செந்துருத்திப் பண்16.தக்கேசிப் பண்17.கொல்லிப் பண்18.இந்தளப் பண்19.காந்தார பஞ்சமப் பண்20.கௌசிகப் பண்21.பியந்தைக் காந்தாரப் பண்22.சீகாமரப் பண்23.சாதாரிப் பண்‘யாழ்முரி’ என்ற பெயரில் புதியதொரு பண் பாடினார் சம்பந்தர். "மாதர் மடப் பிடியும்" எனத் தொடங்கும் தேவாரப் பாடல் இந்த அபூர்வமான பண்ணிசையில் அமைகிறது. சம்பந்தர் பாடிய இந்தப் புதிய பண் இசையை யாழில் மீட்ட இயலாது வருந்தினார் திருநீலகண்ட யாழ்ப்பாணர்.