தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5378


 

கண்ணும்.

அது நாலாம் நாளை யிரவின்கண்ணதாம்.

உ-ம்:

“விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி
மாண்வரி யல்குற் குறுமகள்
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே.”    (குறுந்.101)

இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி.

“முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே.” (அகம்.86)

என முற்காட்டியது கரணத்தின் அமைந்து முடிந்தது.

எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் - அதன் பின்னர் ஒழியாத
மகிழ்ச்சி  பலவேறு  வகையவாகிய   நுகர்ச்சிக்கட்   புதிதாக   வந்த
காலத்தினிடத்தும்;

உ-ம்:

“அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.”         (குறள்.1110)

என்றது  பொருள்களை   உண்மையாக   உணர்ந்த   இன்பத்தை
அறியுந்தோறும் அவற்றை முன்னர்   இவ்வாறு   விளங்க   உணராத
அறிவின்மையை வேறுபடுத்துக் கண்டாற்போலுஞ்  சேயிழை  மாட்டுச்
செறியுந்தொறுந் தலைத்தலை சிறப்பப்பெறுகின்ற  காமத்தை  முன்னர்
அறியப்பெற்றிலே மென்று வேறுபடுத்த லென்றவாறு.

அஞ்ச வந்த உரிமைக்கண்ணும் - தலைவனும் பிறரும் அஞ்சும்படி
தலைவிக்கட் டோன்றிய உரிமைகளிடத்தும்:

அவை  இல்லறம்  நிகழ்த்துமாறு  தன்  மனத்தாற் பலவகையாகக்
காணலும் பிறர்க்குத் தான் கொடுத்தலுங் கற்புச் சிறத்தலுமாம்.

உ-ம்:

“உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்க ணொண்பொருள் - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.”             (நாலடி.39-6)

இதனுள் நலமென்றது இம்மூன்றினையும். தலைவி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:44:38(இந்திய நேரம்)