51. நருமதை கடந்தது

இதன்கண்: உதயணன் செல்லும் வழியிலுள்ள நருமதை என்னும் பேராற்றின் எழிலும் அதனை அவன் கடந்து சென்றமையும் பிறவுங் கூறப்படும்.
 
              எய்தி இகந்த இயற்றமை இரும்பிடி
            கொய்பூங் குறிஞ்சிக் கொழுநிலம் கைவிட்டு
            ஐந்நான்கு எல்லையொடு ஆறுஐந்து அகன்றபின்
 
 

            மதியம் உரைஞ்சும் மால்வரைச் சென்னிப்
        5   பொதிஅவிழ் பூமரம் பொதுளிய சோலை
            அகலத்து எல்லையும் ஆழ்ச்சியது அந்தமும்
            உயர்பின் ஓக்கமும் உணர்த்தற்கு ஆகா
            விஞ்சைஅம் பெருமலை நெஞ்சகம் பிளந்து
            கல்லுள் பிறந்த கழுவாக் கதிர்மணி
       10    மண்ணுள் பிறந்த மாசறு பசும்பொன்
            வேய்உள் பிறந்த ள்ஆய்கதிர் முத்தம்
            வெதிரில் பிறந்த பொதியவிழ் அருநெல்
            மருப்பினுள் பிறந்த மண்ணா முத்தம்
            வரையிற் பிறந்த வயிரமொடு வரன்றி

 
         15    நுரையுள் பிறந்த நொ......லாடை
            முடந்தாள் பலவின் குடம்புரை அமிழ்தமும்
            நெடுந்தாள் மாவின் நெய்படு கனியும்
            கருந்தாள் வாழைப் பெருங்குலைப் பழனும்
            பெருந்தேன் தொடையலும் விரைந்துகொண்டடு அளைஇ
       20    நறவம் சாரல் குறவர் பரீஇய
            ஐவன நெல்லும் கைவளர் கரும்பும்
            கருந்தினைக் குரலும் பெருந்தினைப் பிறங்கலும்
            பாவை இஞ்சியுதம் கூவைச் சுண்ணமும்
            நாகத்து அல்லியும் ஏலத்து இணரும்
       25    கண்சா லேகமும் உள்காழ் அகிலும்
 
              குங்குமத் தாதும் பைங்கறிப் பழனும்
            கிழங்கும் மஞ்சளும் கொழுங்கால் தகரமும்
            கடுப்படு கனியும் காழ்த்திப் பிலியும்
            சிற்றிலை நெல்லிச் சிறுகாய்த் துணரும்
       30    அரக்கின் கோலொடு அன்னவை பிறவும்
            ஒருப்படுத்து ஒழியாது விருப்பின் ஏந்தி
            மலைவயின் பிறந்த மாண்புறு பெருங்கலம்
            நிலைவயின் வாழ்நர்க்குத் தலைவியின் உய்க்கும்
            பகர்விலை மாந்தரின் நுகர்பொருள் அடக்கிப்
 
         35   பன்மலைப் பிறந்த தண்நிற அருவிய
            அமலை அருங்கலம் அடக்குபு தழீஇத்
            தன்னில் கூட்டிய தானைச் செல்வமொடு
            இருகரை மருங்கினும் பெருகுபு தழீஇ
 
 

            அணிக்குருக் கத்தியும் அதிரலும் அனுக்கி
       40    மணிச்சையும் மயிலையும் மௌவலும் மயக்கி
            ஞாழலும் புன்னையும் வீழ நூக்கிக்
            குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கித்
            தடவும் பிடவும் தாழச் சாய்த்து
            முளவும் முருக்கும் முருங்க ஒற்றி
       45    மாவும் மருதும் வேரறப் புய்த்துச்
            சேவும் குரவும் சினைபிளந்து அளைந்து
            நறையும் நாகமும் முறைநடு முருக்கி
            வழையும் வாழையுங் கழையுங் கால்கீண்டு
            ஆலும் அரசும் காலொடு துளக்கிப்
       50    புன்கு நாவலும் புரள எற்றிக்
            கொங்கார் கோடலொடு கொய்யல் குழைஇ
            அனிச்சமும் அசோகமு அடர வலைத்துப்
            பனிச்சையும் பயினும் பறியப் பாய்ந்து
            வள்ளியும் மரலும் தன்வழி வணக்கிப்

 
         55   புள்ளி மானும் புல்வாய்த் தொகுதியும்
            ஆமா இனமும் தாமா றோடி
            இடைப்புனற் பட்டவை புடைப்புனற் இவரப்
            பொறிமயில் பேடை போத்தொடு புலம்ப
            எறிமயிர் ஏனமொடு எண்கின இரியக்
       60   குரங்கும் முசுவும் மரந்தொறும் வாவச்
            கரும்பும் தும்பியும் விரும்புபு விரைய
            அகத்துறை பல்லுயிர் அச்சம் எய்தப்
            புறத்துறை பல்லுயிர் புகன்றுவிளை யாடப்
            படிவப் பள்ளியொடு பாக்கம் கவர்ந்து
       65   குடிகெழு வளநாடு கொள்ளை கொண்டு
            கவ்வை ஓதங் கால்கிளர்ந்து உராஅய்ப்
            பௌவம் புகூஉம் படர்ச்சித்து ஆகிக்
 
 

            கருங்கால் குருகும் கம்புளும் கழுமிப்
            பெரும்பூட் பூணியும் பேழ்வாய்க் கொக்கும்
       70    குளிவையும் புதாவும் தெளிகயக் கோழியும்
            அன்றிலும் நாரையும் துன்புறு கெழீஇ
            வாளையும் வராலும் நாள்இரை ஆக
            அயிரையும் பிறவும் அல்கிரை யமைத்துப்
            பறவைப் பார்ப்புஇனம் சிறுமீன் செகுத்து
       75    வார்மணல் அடைகரைப் பார்வலொடு வதியும்
            சும்மை அறாஅத் தன்மைத்து ஆகிக்
            கயம்பல கெழீஇ இயங்குதுறை சில்கிப்
            பெருமத யானையொடு பிடிஇனம் பிளிற்றும்
            நருமதைப் பேர்யாறு நண்ணிய பொழுதில்

 
 

       80    தலைப்பெரும் தண்புனல் தான்வந் தன்றுஎன
            நிலைப்பரும் நீள்நீர் நீத்திற்று ஆகி
            மார்க்கடல் வரைப்பின் மன்னுயிர்க்கு இயன்ற
            ஆக்கமும் கேடும் சாற்றியது ஒப்ப
            வளமலர்ப் பைந்தார் வயந்தகன் இழிதந்து
       85    இளமணல் படாஅது இயங்குதுறை நோக்கிக்
            கால்நிலை கொள்உழித் தான்நிலை காட்ட

 
 

            அரிமதர் மழைக்கண் அனந்தர் எய்திய
            திருமா மேனியைத் திண்ணிதிண் தழீஇச்
            செல்விசை கதும்எனச் சுருக்கி மெல்லென
       90    வரையேறு அரிமாப் போல மற்று அதன்
            கரையே றினனால் கார்நீர் கடந்துஎன்.