13. குறிக்கோள் கேட்டது

 

இதண்கண், உதயண குமரன் அரசியல் சுற்றம் சூழ ஒருகாட்டை அடைந்து, அக்காட்டிலிருந்த ஒரு முனிவனைக் கண்டுகுறிகேட்டலும், அம் முனிவர் குறி கூறுதலும், சோலைவளமும் உதயணன் உவத்தலும், பிறவும் கூறப்படும்.
 
              மைந்தரும் மகளிரும் மலைவயின் ஆடி
            வெந்திறல் வேந்தன் வீழ்பவை காட்டி
            ஐம்பெரும் குழுவும் எண்பே ராயமும்
            கண்ணுறக் கவவிக் கலந்து விடாஅ
        5   அருமைக்கு ஒத்த அஞ்சுவரு காப்பின்
            உரிமைச் சுற்றம் பின்பட உய்த்துத்
            தீதற எறியுந் தெரிபொருள் கேள்வி
            மூதறி முனிவன் பள்ளி முன்னர்
 
              அரணம் வேண்டாது அச்சம் நீக்கி
       10    வருணம்ஒன்றாய் மயங்கிய ஊழிச்
            சிறுமையும் வறுமையும் தின்மையும் புன்மையும்
            இறுபும் புலம்பும் இன்மையும் இரக்கமும்
            அறியும் மாந்தரின் உறுவளம் கவினி
 
              ஐந்திணை மரனும் பைந்தளிர்க் கொடியும்
       15    தந்துணைச் செல்வம் தலைத்தலை பெருகி
            அருமதி முனிவர் நிருமிதம் போல
 
              அழல்கண் அகற்றி நிழல்மீக் கூரி
            நீர்புக்கு அன்ன நீர்மைத் தாகி
            ஊர்புக் கன்ன உள்உவப்பு உறீஇ
       20    மலர்த்தவிசு அடுத்துத் தளிர்க்குடை ஓங்கிப்
            பூங்கொடிக் கவரி புடைபுடை வீசித்
            தேங்கொடிப் பறவையும் திருந்துசிறை மிஞிறும்
            விரும்புறு சுரும்பும் பெரும்பொறி வண்டும்
            குழல்வாய்த் தும்பியும் குயிலும் கூடி
       25    மழலையம் பாடலின் மனம்பிணி உறீஇ
            முதிர்கனி அமிர்தம் எதிர்கொண்டு ஏந்தி
 
              மேவன பலபயின்று ஈவன போன்ற
            பயமரம் அல்லது கயமரம் இல்லாக்
            காவினுள் இரீஇக் காவல் போற்றி
       30   மாதவ முனிவர்க்கு மன்னவன் காணும்
            கருமம் உண்மை மரபின் கிளப்பப்
 
              பெருங்குலப் பிறப்பினும் அரும்பொருள் வகையினும்
            இருங்கண் ஞாலத்து இன்னுயிர் ஓம்பும்
            காவல் பூண்ட கடத்தினும் விரும்பி
       35   இமையோர் இறைவனை எதிர்கொண்டு ஓம்பும்
            அமையாது ஈட்டிய அருந்தவ முனிவரின்
            வியலக வேந்தனை இயல்புளி எதிர்கொண்(டு)
            அணித்தகு பள்ளி அசோகத்து அணிநிழல்
            மணித்தார் மார்பனை மணல்மிசை அடுத்த
       40   பத்திப் பன்மலர்ச் சித்திரம் குயின்ற
            இயற்றாத் தவிசின்மிசை இருக்கை காட்டக்
 
              கவற்சி மனத்தொடு காண்டக இருந்ததன்
            தாள்முதல் சார்ந்து தோள்முதல் தோழனை
            உள்ளி உள்ளழிந்து ஒழுகுவரைத் தடக்கையின்
       45   வெள்ளிதழ் நறுமலர் வீழப்பை யாந்து
            நினைப்புஉள் ளுறுத்தஅந் நிலைமை நோக்கி
            இனத்தின் இரிந்தாங்கு எவ்வகை நிமித்தமும்
            மனத்தின் உற்றவை மறையின்று உணர்தலின்
            துனிவுகொள் மன்னன்கு முனிவன் கூறும்
 
         50   பசுமரம் சார்ந்தனை ஆதலின் மற்றுநின்
            உசிர்ப்பெருந் தோழன் உண்மையும் கூட்டமும்,
            கண்அகன்று உறைந்த கடிநாள் அமையத்துத்
            திண்ணி தாகும் தெளிந்தனை ஆகுமதி
            விரும்பிநீ பிடித்த வெண்மலர் வீழ்ச்சி
       55   பொருந்திநீ அளக்கும் பொருவில் போகத்து
            இடையூறு உண்மை முடியத் தோன்றும்
 
              வீழ்ந்த வெண்மலர் வெறுநிலம் படாது
            தாழ்ந்த கச்சைநின் தாள்முதல் தங்கலில்
            பிரிந்த போகம் பெயர்த்தும் பெறுகுவை
       60   நிலத்துமிசை இருந்தனை ஆதலின் மற்றுநின்
            தலைப்பெரு நகரமொடு நன்நாடு தழீஇக்
            கொற்றம் கோடலும் முற்றிய தாகி
            முன்னிய நின்றவை முடியத் தோன்றும்என்று
 
              எண்ணிய இப்பொருள் திண்ணிதின் எய்தும்
       65   பெறும் பயம் இதுஎனப் பிழைத்தல் இன்றி
            உறும்பெரும் சாரணர் உரைவேறு உண்மையும்
            இறுவா எழுச்சியும் இத்துணை அளவென.
            உறுதவ முனிவன் உள்விரித்து ஒழியாது
            வத்தவர் பெருமகன் தத்துறவு அகலக்
       70   கழிபொருள் எதிர்பொருள் ஏது வாக
            அழிபொருள் அன்றி ஆகுபயங் கூறத்
 
              தக்கது மன்ற மிக்கோன் கூற்றென
            நட்புடைத் தோழனை நண்ணி அன்னதோர்
            உட்புகன்று எழுதரும் உவகையன் ஆகிப்
       75   பள்ளி மருங்கில் பாவம் கழீஇ
            வள்ளி மருங்கில் வாசவ தத்தையைக்
            கூடுதல் ஆனாக் குறிப்புமுந்து உறீஇ
            ஆடுதல் ஊற்றமொடு அமர்ந்தனன் உவந்துஎன்,