காலம் / ஆட்சியாளர் :
கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்
கல்வெட்டு / செப்பேடு :
முதலாம் இராஜேந்திர சோழனால் கி.பி.1036-இல் வெளியிடப்பட்ட எசாலம் செப்பேடுகள் இக்கோயிலிருந்து எடுக்கப்பட்டன. இராஜேந்திரனது கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளன.
சிற்பங்கள் :
தெற்குப்புறத்தில் தளம் கோட்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தி அமர்ந்த நிலையில் உள்ளார். மேற்குப்புறத்தில் தளம் கோட்டத்தில் திருமால் அமர்ந்த நிலையில் உள்ளார். வடக்கு தளம் கோட்டத்தில் நான்முகன் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். தேவகோட்டங்களில் மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் உள்ளனர். அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் கணபதியும், வடபுறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அமைந்துள்ளனர். 23-க்கு அதிகமான செப்புத் திருமேனிகள் இக்கோயிலில் அகழ்ந்தெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இராஜேந்திர சோழன் காலத்தவை. அவற்றுள் பைரவர், கணபதி, துர்க்கை, சிவன், பார்வதி, தூபக்கால் ஆகியன குறிப்பிடத்தக்கன.
கோயிலின் அமைப்பு :
இக்கோயில் ஒரு தளத்தை உடைய கற்றளியாகும். வேசரபாணியில் அதாவது வட்டவடிவத்தில் கருவறை விமானத்தின் தலைப்பகுதி அமைந்துள்ளது. தாங்குதளம் முதல் கலசம் வரை கற்றளியாக அமைந்துள்ளது. தேவகோட்டங்களில் இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், அம்மன் திருமுன் ஆகிய அமைப்புகளைப் பெற்று இக்கோயில் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தில் சோழர் கால தூண்கள் அழகு செய்கின்றன.