வேறு பெயர்கள் :
சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்
தாயார் / அம்மன் பெயர் :
ஏழுகன்னியர், பேச்சியம்மன், இருளம்மன், பாதாளகண்டிகை
பூசைக்காலம் :
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் :
ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, தை வெள்ளி, பங்குனி உத்திரம்
தலவரலாறு :
கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு சிவபெருமான் அனுப்பினார். பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் இவ்விடத்தில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி பூசை செய்து வந்தார். காலப்போக்கில் அந்த சிவலிங்கத்தை மண் மூடியது. பசு ஒன்று அவ்விடத்தில் நாள்தோறும் பாலைச் சொரிந்து சிவனுக்கு அபிடேகம் செய்தது. இச்செய்தி அறிந்த மன்னன் இவ்விடத்தில் உள்ள சிவலிங்கத்தை தோண்டி அவ்விடத்தில் கோயில் எழுப்பினார். அங்கேயே தர்மசாஸ்தாவான அய்யனாருக்கும் கோயில் எழுப்பப்பட்டது. இந்த அய்யனார் அருளை பக்தர்கள் பால் சொரிபவர் ஆதலால் சொரிமுத்து அய்யனார் என அழைக்கப்பட்டார். பாண்டியர்களின் செல்வத்திற்கு காரணமான முத்து அய்யனாருக்கும் பெயராக சூட்டப்பட்டது. முன்பொரு காலத்தில் பிராமணர் ஒருவர் சூழ்நிலையின் காரணமாக தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்த இருபெண்களை திருமணம் செய்து கொண்டார். அவர் தன் மாமனாரின் கட்டளையின் பேரில் செருப்பு தைக்கும் தொழிலையும் கற்றுக்கொண்டார். அந்த பிராமணர் பசுக்களைக் காக்கும் சண்டையில் உயிர் நீத்தார். அவரை பட்டவராயர் என்றழைத்து அவருடைய இரு மனைவியர் பொம்மக்கா-திம்மக்காவுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. பட்டவராயருக்கு செருப்புகளை காணிக்கையாக பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த செருப்புகள் அடுத்த ஆண்டுக்குள் தேய்ந்து விடுவதாகவும், பட்டவராயரே இந்த செருப்புகளை பயன்படுத்துகின்றார் எனவும் மக்கள் நம்புகின்றனர்.
பாதுகாக்கும் நிறுவனம் :
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :
அகத்தீஸ்வரர் கோயில், காசிபநாதர் கோயில், கிருஷ்ணசுவாமி கோயில், தென்னழகர் கோயில், நீலமணிநாதசுவாமி கோயில், அம்மைநாதர் கோயில்
சுருக்கம் :
முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது போல ஐயப்பனுக்கு சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறு கோயில்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவே சாஸ்தாவின் முதல் கோயில் என்று கருதப்படுகிறது. இங்கு அய்யனார் என்பது நாட்டுப்புறத்தில் வழங்கபெறும் பெயராகும். சாஸ்தா என்பது வடமொழியாகும். இங்கு அய்யனார் பூரணை புஷ்கலையுடன் விளங்குகிறார். மேலும் ஆடி அமாவாசை தினம் இங்கு சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள அய்யனார் இடதுகாலை குத்துக்காலிட்டு, வலதுகாலை தொங்கவிட்டு சற்றே இடதுபுறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே நந்தி, யானை, குதிரை வாகனங்கள் ஒரே பீடத்தில் இருக்கின்றன. மேலும் இவரது திருமுன்னிலேயே (சந்நிதி) ஏழுகன்னியர் உள்ளனர். முன்மண்டபத்தில் பைரவர் எதிரே நாய் வாகனம் காட்டப்பட்டுள்ளது. குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். மேலும் இக்கோயிலில் தளவாய் மாடன், அகத்தியர், பட்டவராயன், திம்மக்கா, பொம்மக்கா, சுடலை மாடன், பேச்சியம்மன், பாதாள கண்டிகை, இருளப்பன், இருளம்மன் ஆகியோர் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். கோயில் வளாகத்தில் உள்ள இலுப்பை மரம் தலமரமாகும். மக்கள் இம்மரத்தில் மணியினைக் கட்டுகின்றனர். இதற்கு மணிவிழுங்கி மரம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.