காலம் / ஆட்சியாளர் :
கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் ஆதித்த சோழன்
கல்வெட்டு / செப்பேடு :
கிரந்தத்தில் அமைந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் அமைந்துள்ளன. மலைநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது, கி.பி.888இல் பொறிக்கப்பட்ட முதலாம் ஆதித்தச் சோழனுடைய கல்வெட்டாகும். பார்சுவநாதர் கோயிலில் நாயக்கர் காலத்தில் வடிக்கப்பட்ட தமிழ், கன்னட வரிவடிவக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சிற்பங்கள் :
இக்கோயிலில் ரிஷபநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், கோமதீசுவரர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள நேமிநாதர் சிற்பம் சென்னை மயிலாப்பூரில் இருந்த சமணக் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும். 100-க்கும் அதிகமான தூண் சிற்பங்கள் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. இவை புடைப்புச் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்கள், இயக்கிகள், சைவக் கடவுளர், வைணவக் கடவுளர், பெண் தெய்வங்கள் மற்றும் நவக்கிரகங்கள் முதலிய சிற்பங்கள் காணப்படுகின்றன. பகவான் பார்சுவநாதர் இக்கோயிலின் மூலவர் ஆவார். கருவறையில் பார்சுவநாதரின் சிற்பம் அமைந்துள்ளது. மடத்தோடு இணைந்தவடிவில் அதன் பக்கவாட்டில் அமைந்திருக்கின்றது இந்த ஆலயம். இக்கோயிலில் இடது புறத்தில் நின்ற கோலத்தில் மாதவிக் கொடி கால்களை படர்ந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாகுபலி சிற்பம் உள்ளது. கோயிலின் ஒரு பக்கத்தில் இருக்கும் தனி அறையில் கருங்கற்களால் செய்யப்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் பாதச்சுவடுகள் உள்ளன. அதன் அருகில் சமண ஐயனார் காணப்படுகிறார். இங்கு ஒரு தனிப்பகுதியில் சாந்தி நாத தீர்த்தங்கரரின் சிற்பமும் உள்ளது. சாந்தி நாத தீர்த்தங்கரர் சிற்பத்தின் அடிப்பகுதியில் அவரது சின்னமாகிய மான் வடிவத்தையும் காணலாம். இக்கோயிலின் ஒரு தனிப்பகுதியில் ஜ்வாலாமாலினி இயக்கி, பத்மாவதி இயக்கி, ஸ்ரீஜினவானி அல்லது சரஸ்வதி , ஸ்ரீ கணதரர், பிரம்மதேவர் ஆகியோருக்குத் தனி சன்னிதிகளும் உள்ளன. கோயிலின் வெளிப்புறத்தில் கல் தேர் ஒன்று உள்ளது. இது தேர் போன்ற வடிவத்தை ஒத்தது. இந்தத் தேரை இழுத்து வரும் யானை வடிவம் கற்பாறையில் செய்யப்பட்டது.
கோயிலின் அமைப்பு :
மேல்சித்தாமூரில் உள்ள பார்சுவநாதர் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம் ஆகியவை கி.பி.16ஆம் நூற்றாண்டு கலைப்பாணியை கொண்டுள்ளது. எஞ்சியவை 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். மண்டபங்களிலுள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. தற்காலக் கலைப்பணியாக கோபுரம் காணப்படுகிறது. தொடர்ந்து மானஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம் ஆகியன வரிசையாக அமைந்துள்ளன. முகமண்டபம், மகாமண்டபம் ஆகியன தூண்களுடன் காணப்படுகிறது. நவக்கிரகம் இங்கு அமைந்துள்ளது.