தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

ஜலகண்டேஸ்வரர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்

ஊர் :

வேலூர்

வட்டம் :

வேலூர்

மாவட்டம் :

வேலூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

ஜலகண்டேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

அகிலாண்டேஸ்வரி

தலமரம் :

வன்னி

திருக்குளம் / ஆறு :

கங்கா பாலாறு, தாமரை புஷ்கரணி

ஆகமம் :

சிவாகமம்

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

சித்திரை பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், மகாசிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம்

தலவரலாறு :

ஏழு ரிஷிகளில் ஒருவரான அத்திரி மகரிஷி இப்பகுதியில் இலிங்கத்தை நிறுவி பூசித்தார். பின் இப்பகுதி வேலமரக்காடாக மாறிவிட்டது. இலிங்கத்தை மண்ணுக்குள் புதைந்து புற்று மூடிவிட்டது. சின்னபொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்ட சிவலிங்கம் இருந்த இடத்தைக் காட்டி அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். பொம்மி அரசரும் அவ்வாறே செய்தார். அந்நியப் படையெடுப்புகளின் போது இக்கோயில் போர் முகாமாக செயல்பட்டு வந்தது. அவ்வேளையில் இறைவனது திருவுரு சத்துவாச்சாரி என்ற ஊருக்கு மாற்றப்பட்டது. மீண்டும் 1981-இல் இங்கு நிறுவப்பட்டது. திருக்கார்த்திகை நாளில் இங்கு சிவன், நான்முகன், திருமால் மூவரும் ஒருசேர காட்சி தருவார்கள். இந்நிகழ்வு இத்தலத்தின் சிறப்பு. ஜ்வரகண்டேஸ்வரர் இங்கு ஆதிமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

வேலூர் கோட்டை, வேலூர் அருங்காட்சியகம், பள்ளி கொண்ட பெருமாள் கோயில், மணிகண்டேஸ்வரர் கோயில், ஜலநாதீஸ்வரர் கோயில்

சுருக்கம் :

இக்கோயில் வேலூர் கோட்டையைப் போலவே கி.பி.1566-க்கு முன்பாக, வீரப்ப நாயக்கரின் மகனும், லிங்கபூபாலரின் தந்தையுமான சின்னபொம்மி நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டது. இம்மன்னன் மஹாமண்டலேச்வரர் திருமலையத் தேவருக்கும் மஹாராஜசதாசிவ தேவருக்கும் அவருக்குப்பின் ஸ்ரீரங்கதேவ மஹாராஜருக்கும் உட்பட்ட சிற்றரசாக வேலூர்ச் சீமையில் ஆண்டார். இக்கோயில் விஜயநகரக் கட்டடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு, கருவறையும், அர்த்தமண்டபமும் அதனுடன் ஒருமித்த மகாமண்டபமும் கூடியது. மகாமண்டபத்து வடபுறம் நடராஜருக்குரிய சிறிய கோயில் அறையின் அடித்தளத்தில் நிலவறையொன்றுண்டு. கோயிலமைப்பின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு முகமாக உயர்ந்த கோபுர வாயிலொன்றும், தென்மேற்கே திருமண மண்டபமும், வடமேற்கே அகழியுடன் தொடர்புள்ள நிலவறையுடன் கூடிய மண்டபமும், அம்மன் திருமுன்னும் உள்ளன. திருமண மண்டபத்தின் சிறந்த நுண்ணிய சிற்ப வேலைப்பாடு விஜயநகரபாணியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கோட்டை ஜ்வரகண்டேசுவரருக்கு மானியமாக வழங்கப்பட்ட அருகிலுள்ள ஏழு கிராமங்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. இதனின்றும் சிவனுக்குரிய ஜ்வரகண்டேசுவர் என்னும் பெயர் காலப்போக்கில் ஜலகண்டேசுவரர் என்று மாறியதை அறியலாம். கி.பி.17,18,19-ஆமு் நூற்றாண்டில் தொடர்நது விளைந்த பீஜப்பூர் ஆதில்ஷாஹி, மராட்டிய, கர்நாடக நவாபியப் படையெடுப்புகளின் போது இக்கோயில் படைமுகாமாக உபயோகிக்கப்பட்டு சிதைந்து பூசனையற்ற நிலையை அடைந்தது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.14-15-ஆம் நூற்றாண்டு / விசயநகரர்

கல்வெட்டு / செப்பேடு :

கோட்டை ஜ்வரகண்டேசுவரருக்கு மானியமாக வழங்கப்பட்ட அருகிலுள்ள ஏழு கிராமங்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. இதனின்றும் சிவனுக்குரிய ஜ்வரகண்டேசுவர் என்னும் பெயர் காலப்போக்கில் ஜலகண்டேசுவரர் என்று மாறியதை அறியலாம்

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

இத்தலத்து விநாயகர் செல்வவிநாயகர் எனப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். இக்கருவறையின் பின்புறம் வெங்கடேசப்பெருமாள் அமைந்துள்ளார். சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் பல்லிகள் திருச்சுற்றில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. ஆதிசங்கரர் திருவுரு இங்கு அமைந்துள்ளது. 63 நாயன்மார்களின் செப்புத் திருமேனிகள் இக்கோயிலில் இருக்கின்றன. சித்திரை பிரம்மோற்சவத்தின் போது 8 பல்லக்குகளில் 8 நாயன்மார்களாக 63 நாயன்மார்களும் திருவீதியுலா வருவது சிறப்பு. இத்தலத்தின் அன்னை தெய்வம் அகிலாண்டேஸ்வரி தனிக்கோயில் கொண்டிருக்கிறார். அம்மன் மகாமண்டபத்தில் இலக்குமி, சரஸ்வதி ஆகிய தெய்வ வடிவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இங்குள்ள கலியாண மண்டபம் என அழைக்கப்படும் அழகிய சிற்பங்கள் நிறைந்த மண்டபம் விசயநகர சிற்பக் கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இம்மண்டபத்தின் உள்ள தூண்களின் பாதப்பகுதியில் நான்குபுறமும் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பைரவர், நடராஜர், கண்ணப்பர் வரலாறு, கிருஷ்ணன், மத்தளம் வாசிக்கும் திருமால், நரசிம்மர் காலடியில் கருடாழ்வார், சிவவடிவங்கள் ஆகியன எழிலார்ந்த சிற்பங்களாகும்.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் விஜயநகரக் கட்டடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு, கருவறையும், அர்த்தமண்டபமும் அதனுடன் ஒருமித்த மகாமண்டபமும் கூடியது. மகாமண்டபத்து வடபுறம் நடராஜருக்குரிய சிறிய கோயில் அறையின் அடித்தளத்தில் நிலவறையொன்றுண்டு. கோயிலமைப்பின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு முகமாக உயர்ந்த கோபுர வாயிலொன்றும், தென்மேற்கே திருமண மண்டபமும், வடமேற்கே அகழியுடன் தொடர்புள்ள நிலவறையுடன் கூடிய மண்டபமும், அம்மன் திருமுன்னும் உள்ளன. திருமண மண்டபத்தின் சிறந்த நுண்ணிய சிற்ப வேலைப்பாடு விஜயநகரபாணியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டக் கோயிலாக திகழ்கிறது. மிக உயர்ந்த தெற்குக்கோபுரம் வேலூர் மாவட்டத்தின் சிறப்பைப் பறைசாற்றுவதாக அமைகிறது.

அமைவிடம் :

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர்-632 001, வேலூர்

தொலைபேசி :

9894745768, 9894682111, 0416-2223412, 2221229

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.30-01.00 முதல் மாலை 3.00-8.30 வரை

செல்லும் வழி :

வேலூரின் மத்தியில் உள்ள வேலூர் கோட்டையில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

காட்பாடி, ஆற்காடு

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

வேலூர், காட்பாடி, ஆற்காடு

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

வேலூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:47(இந்திய நேரம்)