தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

இலக்கணமும் மொழிநூலும்

5.5 இலக்கணமும் மொழிநூலும்

    இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் பிற காலங்களைப்
போல் அல்லாமல் இலக்கணமும் மொழி ஆராய்ச்சியும் சற்றுப்
பின்தங்கியே இருந்தது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத் தான்
வேண்டும்.     இலக்கணத்     துறையில்     அ.கு.ஆதித்தர்,
அரஞ்சண்முகனார், தேவநேயப் பாவாணர் போன்றோரும்
மொழி நூலாராய்ச்சியில் மாகறல் கார்த்திகேய முதலியார்,
தெ.பொ.மீ, ரா.பி.சேதுப்பிள்ளை, தேவநேயப் பாவாணர்,
வேங்கடராஜூலு     ரெட்டியார்     ஆகியோரும்
குறிப்பிடத்தகுந்தவர்கள்.

     அ.கு. ஆதித்தர் என்பவர் உயர்நிலைப் பள்ளி
மாணவர்களுக்கான இலக்கணச் செப்பம் முதலிய நூல்களை
இயற்றி உள்ளார்.     தொல்காப்பியம் - சொல்லதிகாரம்
முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். உரிச்சொல் விளக்கம் -
இவரது புலமையை எடுத்துக்காட்டும் நூல்.

    அரசஞ்சண்முகனார்,      திருக்குறளாராய்ச்சி,
தொல்காப்பியப் பாயிர விருத்தி
முதலிய நூல்கள்
எழுதியுள்ளார். மாகறல் கார்த்திகேய முதலியார் தமிழ்மொழி
நூல்
என்ற நூலை எழுதி உள்ளார். இதுவே முதன் முதலில்
தமிழில்     எழுந்த     மொழியாராய்ச்சி நூல் ஆகும்.
கா.சுப்ரமணியப்பிள்ளை தனித் தமிழ்க் காப்பாருள் ஒருவர்.
தமிழ்மொழி அமைப்பு, மொழி நூற்கொள்கை தமிழ்
இலக்கிய வரலாறு
(2 பாகம்) என்ற நூல்களை எழுதியுள்ளார்.
மொழி ஞாயிறு எனப் போற்றப்படும் ஞா.தேவநேயப்
பாவாணர் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 78 படைத்துள்ளார்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழ் உலகிற்கு
இவரது நன்கொடை. முதல் தாய்மொழி, திராவிடத்தாய்,
பழந்தமிழாட்சி, வேர்ச்சொற் கட்டுரைகள், உயர்தரக்
கட்டுரை இலக்கணம், வடமொழி வரலாறு, தமிழ் வரலாறு
,
The Primary classical Language of the world, சுட்டு விளக்கம்,
இயற்றமிழ் இலக்கணம் போன்ற பல நூல்களை இயற்றிய இவர்
பாடல்களை இயற்றுவதிலும் வல்லவர். க.வெள்ளை வாரணனார்
செய்த தொல்காப்பிய உரை வளம் இக்காலக் கட்டத்தில்
குறிப்பிடத்தக்க நூலாகும்.

    சொல்லாராய்ச்சியில் வல்லவரான ரா.பி. சேதுப்பிள்ளை
‘Tamil words and their significance’ என்ற நூலைப் படைத்தவர்.
ஊரும் பேரும், செந்தமிழும் கொடுந்தமிழும் போன்ற பல
நூல்களைப் படைத்தவர். D.Litt. அறிஞர்களில் இவரும் ஒருவர்.

    ‘தமிழ் மொழியியலின் தந்தை’ என்ற பெருமைக்கு உரியவர்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். A History of Tamil language, Tamil
Foreign Models in Tamil Grammar, Tamil Sands, Callected papers of
TPM
என்ற நூல்கள் மூலம் உலக அரங்கில் தமிழை
இடம்பெறச் செய்தவர். வேங்கட ராஜூலு ரெட்டியார்
வடமொழியோடு திராவிட மொழிகளை ஒப்பிடும் ஆராய்ச்சியில்
தலைசிறந்தவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:41:06(இந்திய நேரம்)