தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிறுவர் நாடகமும் பெரியோர் நாடகமும்

  • 3.5 சிறுவர் நாடகமும் பெரியோர் நாடகமும்

    சிறுவர் நாடகமும் பெரியோர் நாடகமும் நாடக வகையில் முக்கியமான இடத்தைப் பெறுவனவாகும். நாடகத்தில் விளக்கப்படும் கருத்து, நாடக மொழிநடை ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விருநாடகங்களும் வகைப்படுத்தப்படுகின்றன.

    தத்துவக் கருத்துகள் உட்பட நுட்பமான கருத்துடையவை சிறுவர் நாடகங்களில் இடம் பெறுவதில்லை. புராண, இதிகாச நாடகங்கள் பெரியவர்களுக்கே உரியன என்றாலும் சில நேரங்களில் சிறுவர்களும் இத்தகைய நாடகங்களை நடித்துக் காட்டுகின்றனர். ஆயினும் சிறியவர் நாடகம் என்னும் வகையில் இவை அடங்கா.

    3.5.1 தமிழில் சிறுவர் நாடகங்கள்

    சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கேற்பவும் வயது வளர்ச்சிக்கேற்பவும் அவர்களின் கலைத்திறனை வளர்க்கும் நிலையிலும் அமைவனவே சிறுவர் நாடகங்கள்.

    சிறுவர்கள் அறிவைச் சேர்க்கும் நிலையில் உள்ளவர்கள்; பெரியவர்கள் அறிவைக் கொடுக்கும் நிலையிலும் அனுபவிக்கும் நிலையிலும் உள்ளவர்கள். எனவே சிறுவர் நாடகங்களுக்கும் பெரியவர் நாடகங்களுக்கும் தரத்தில் மிகுந்த வேறுபாடுண்டு. அறிவைத் திரட்டலும், கலைத்திறனில் சுடர் விடுதலும் சிறுவர் நாடகங்களில் ஒருசேர வெளிப்பட வேண்டும்.

    வியப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஆரவாரம் ஆகியன சிறுவர் நாடகங்களில் முக்கியப் பங்கினை வகிக்க வேண்டும்.

    குழந்தை எழுத்தாளர் சங்கம் 1955-ஆம் ஆண்டு சிறுவர் நாடக விழாவை நடத்தியது. சென்னையில் உள்ள ஜவஹர் பால பவன் சிறுவர்களுக்குக் கலைப் பயிற்சி அளித்து வருகிறது.

    தமிழில் சிறுவர் நாடகம் எழுதுவோரில் குறிப்பிடத்தகுந்தவர்கள், அழ.வள்ளியப்பா, தணிகை உலகநாதன், கூத்தபிரான், பூவண்ணன், அகமது பஷீர், கி.மா.பக்தவச்சலம் ஆகியோர். இவர்கள் திட்டமிட்டுச் சிறுவர் நாடகங்களை எழுதுகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2018 15:19:48(இந்திய நேரம்)