Primary tabs

சமணம்
என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின்
திரிபாகும். அதனால் ‘சிரமணர்’,
தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்பதுன்பம் ஆகிய இரண்டையும்
சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம். நட்பு, பகை
அற்றவர் என்றும் கூறலாம்.
தன்னை இகழ்வாரைக் கோபித்தலும்
புகழ்வாரைப் போற்றலும் இல்லாதவர். அன்பும் அருளும்
நிறைந்தவர். இறப்பையும் பிறப்பையும் பொருட்படுத்தாமல் உலகில்
நல்லவற்றைச்
செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்களின் எல்லாச்
சுகங்களையும் துறந்தவர். அது மட்டுமன்றி ஐம்புலன்களையும்
தன்வயப்படுத்தியவர். யான், எனது என்னும் செருக்கினை
அழித்தவர். எக்காரணத்தாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவர்.
ஒழுக்கத்தை
உயிரினும் மேலாகக் காப்பவர் என்று விரிவான
பொருளைத் தருவதாகக் கொள்ளலாம்.
சமணசமயக்
கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில்
பரவச் செய்வதின் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள்
தோன்றுகின்றனர் என்பது சமண சமயக் கொள்கை.
‘தீர்த்தங்கரர்’ என்பதற்குத் “தம் ஆன்மாவைப்
பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்”
என்பது
பொருள். இதுவரை
24 தீர்த்தங்கரர்கள்
தோன்றியுள்ளார்கள் என்பதும் இனியும் 24 தீர்த்தங்கரர்கள்
தோன்றுவர்
என்பதும் இச்சமயக் கொள்கையாகும்.
தொன்மையும் நீண்ட வரலாறும் கொண்ட சமண சமயம் இருபத்தி நான்காம் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறும் பழக்கம் இன்னும் பலரிடையே தொடர்கிறது. இது வரலாற்றுக்கு முரண்பட்டதாகும். அத்துடன் இந்து சமயத்தின் கிளை என்று கூறுவதும் தவறானது. சமண சமயத்தின் தோற்றம் முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது சமணர் கொள்கை. விருஷபதேவரை ஆதிபகவன் என்றும் ஆதிநாதர் என்றும் வழங்கும் வழக்கமும் சமணரிடையே உண்டு. விருஷபதேவர் வரலாற்றுக்கு முற்பட்டவர் என்பதால் இக்கருத்தை வரலாற்றாசிரியர் ஏற்பதில்லை. ஆயினும் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதாலும், அவர்க்கும் முன்னவரான இருபத்தி இரண்டாம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருக்கும் வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதாலும் வர்த்தமான மகாவீரர் சமண மதத்தைத் தோற்றுவித்தவர் என்ற கருத்து தவறானது என்பதை உறுதிபடக் கூறலாம். காலத்திற்கு ஏற்பச் சில சீர்திருத்தங்களை மகாவீரர் செய்தாரே ஒழிய சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் அல்லர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மகாவீரர் காலத்தில்தான் கௌதம
புத்தரும் வாழ்ந்தார்.
இவர்களின் தோற்றமும் எழுச்சியும் இந்திய வரலாற்றிலேயே
ஒரு
குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எனக் கூறலாம். அந்தக் காலக் கட்டத்தில்
தான்
கொல்லாமை அறமும் மறுபிறப்பு எடுத்தது.
கொல்லாமை அல்லது அகிம்சைக்
கோட்பாட்டைப்
போற்றும் சமண சமயம் (ஜைன சமயம்)
வேதகாலத்திற்கும்
முற்பட்டது. நால்வகை வேதத்தில் பழமையானது
என்று கருதப்படும் ரிக்வேதம் சமண சமயத்தின்
மேன்மையைப் பறைசாற்றுகிறது. ஆதிநாதரைப்
(விருஷபதேவரை) போற்றும் தோத்திரங்கள்
பல
அங்குக் காணலாம். யஜுர் வேதத்தில்
நேமிநாதர்
(22 - ஆம் தீர்த்தங்கரர்)
துதி
சிறப்புடன் அமைந்துள்ளது. பதினெண்
புராணங்களிலும் தீர்த்தங்கரர்கள் பற்றிய
செய்திகள் வருகின்றன. சிவபுராணம்,
அக்கினிபுராணம் ஆகியவற்றிலும்
ஆதிபகவனின்
துதியைக்
காணலாம். இவற்றை யெல்லாம்
நோக்கும்போது
மிகப் பழங்காலத்தில்
ஜைன
சமயமும் தத்துவமும் நாடெங்கும்
பரவியிருந்திருக்கலாம்
என்பதை உணரலாம். ஆங்காங்கே
கிடைத்துள்ள சமண சமயம்
சார்ந்த சாசனங்கள்
இக்கருத்தினை
மேலும் உறுதிச் செய்கின்றன.
தெய்வங்களாகத் தொழப்படுகின்ற 24
தீர்த்தங்கரர்களும் பொதுவாக இறைவன் செயலாகக் கூறப்படுகின்ற
முத்தொழில்களைச் செய்வதில்லை. அதாவது ஆக்கல், அழித்தல், காத்தல்
என்ற தொழில்களில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் இவர்கள் வேண்டுதல்
வேண்டாமை இல்லாதவர்கள். காய்தல் உவத்தல் அற்றவர்கள்.
தன்னையறிந்து, வீடுபேற்றிற்குத் தடையாக
அமைந்த இரு வினைகளை முற்றுமாகப் போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையில்
என்றென்றும் நிலைப்பவர்கள். அதனால் தம்மை வணங்குபவர்க்கு
எதையும் தருவதோ, தவறு செய்தோரைத்
தண்டிப்பதோ இவர்களிடம் இல்லை. பின் ஏன் இவர்களை வணங்கவேண்டும்?
அவர்கள் சென்ற பாதையில் அவர்கள் விளக்கும்
நற்காட்சி, நல்ஞானம் இவற்றின் அடிப்படையில், நல்லொழுக்கத்தைப் போற்றி
வாழவேண்டும் என்ற தூண்டுதலைப் பெறத்தானே தவிர, வேறு
எதற்காகவும் அன்று! வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, அதன்பின்
தெய்வநிலை அடைவதற்காகவே அவர்களை வணங்குகிறார்கள் சமணர்கள்.
ஏனென்றால் அதுவே மனிதப் பிறவியின் குறிக்கோள் எனப் போற்றுகிறது சமண சமயம்.
அதனாலேயே உருவ வணக்கமும் சாவகர்களுக்கு (சமண இல்லறத்தார்) மிக முக்கியத்துவம்
பெற்றதாகக் கருதப்படுகிறது. சமண சமயத்தில் உருவ வணக்கம் இல்லை என்பார் கூற்று சரியானதன்று. இல்லறத்தார்
கோவிலுக்குச் சென்று வணங்குதல்
அவர்தம் அன்றாடக் கடமைகளில் ஒன்று என வலியுறுத்தப்
படுகிறது.
சமண மதம் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. ஐம்புலன்களையும் இருவினைகளையும் ஜெயித்தவர் (வென்றவர்) என்பதால் தீர்த்தங்கரர், ஜினர் என்று போற்றப்படுகிறார். ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் என்று அழைக்கப்பட்டது. இது தமிழில் சமண மதம் என வழங்கப்பட்டது. தீர்த்தங்கரரை, அருகபதவியை (பேரின்ப நிலை) அடைந்தவர் என்பதால் அருகன் என்றும் வழங்குவதுண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் எனப்பட்டனர். அம்மதம் ஆருகதமதம் என்றும் வழங்கப்பட்டது. சமணர் நிக்கந்தர் என வழங்கப்பட்டனர். நிக்கந்தர் என்றால் பற்றற்றவர் என்று பொருள்படும். அதனால் சமணர் நிகண்டர் எனவும் வழங்கப்பட்டனர். சமண சமயம் நிகண்டமதம் எனப்பெயர்பெற்றது.
ஜெயித்தவர்) = ஜைனமதம்
வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்) = அருகமதம்
அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணர் பிண்டியர் என்றும் குறிக்கப்பட்டனர். மதங்கள் ஏகாந்த
வாதம், அநேகாந்த வாதம் என இருவகைப்படும். சமணசமயத்துக்கு
‘அனேகாந்தவாதம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.
சமணம் தவிர, பிற மதங்கள் ஏகாந்தவாதத்தைக்
கூறுவன. சமணம் மட்டுமே அனேகாந்தவாதக் கொள்கையைக் கூறுவதால்
அனேகாந்தவாதம் என்றழைக்கப்பட்டது.
காலத்திற்கு ஏற்ப எந்த ஒரு
சமயமும் சிற்சில மாறுதல்களை அடைவது இயல்பான நிகழ்ச்சிதான். உலகச் சமயங்கள்
எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல எனலாம். தொடக்கத்தில்
வழக்கத்தில் இருந்த
திகம்பரச் சமணம் பின்னர் இரண்டாகப்
பிரிந்தது. அப்பிரிவுகள் சுவேதாம்பர
சமணம், ஸ்தானகவாசி
சமணம் என வழங்கப்படலாயின. ஆக சமணம் மூன்று பெரும்
பிரிவுகளைக்
கொண்டதாயிற்று.
திகம்பரச் சமணத் துறவியர் ஆடை அணியார்.
திக்குகளையே ஆடையாக உடுத்தியவர்கள். திகம்பரச் சமணக்
கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகளும் / திருவுருவங்களும்
ஆடையுடுத்தப் பெறாமல் திகம்பரமாக இருக்கும். சுவேதாம்பரத்
துறவியர் வெண்ணிற ஆடை அணிவர். திகம்பரச் சமணரும் சுவேதாம்பரச் சமணரும் உருவ வழிபாட்டினர். ஆனால்
ஸ்தானகவாசியைச் சேர்ந்த சமணர்
தம் கோயில்களில் சாத்திரம் அதாவது சமணசமய ஆகம நூலையே வணங்கும் வழக்கமுடையர்.
ஆயினும் இவர்களுக்குள் அடிப்படை வேற்றுமை ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அன்றும் இன்றும் இடம் பெற்றிருப்பது திகம்பரச்
சமணமே. சமண சமயத்தில் சாதிகள் இல்லை. சாதி வேற்றுமைகள்
ஏதுமில்லை என்பது நம் கவனத்துக்குரியதாகிறது. இன்றும் கூட
தமிழகத்தில் வாழும்
திகம்பரச் சமணர்களிடம் சாதிகள் இல்லை
எனவே வேற்றுமைகளும் இல்லை. மேற்கூறிய,
மூன்று பிரிவினரும்
இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளனர்.
கிறிஸ்து பிறப்பதற்குச் சிறிது காலத்துக்கு முன்னர்தான்
சந்திரகுப்தர் இந்தியாவில் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார்.
அன்று வட இந்தியாவில் இருந்த அன்னிய ஆதிக்கத்தை
அடியோடு அகற்றி, ஒரு வல்லமை வாய்ந்த பேரரசை நிறுவியதால்
இந்நாட்டின் வரலாற்றில் அது ஒரு புகழ்வாய்ந்த நிகழ்ச்சியாகக்
கருதப்பட்டது. சந்திரகுப்த மௌரியப் பேரரசனுக்குக் குருவாக
அமைந்தவர் பத்திரபாகு என்னும் சமண முனிவராவர். சந்திர
குப்தன் பல ஆண்டுகள் நல்லாட்சி செய்தபின் மகனிடம் அரசைத்
தந்துவிட்டு துறவறம் மேற்கொண்டான். அத்துடன் அமையாது
பத்திரபாகு முனிவரைத் தலைமையாகக் கொண்ட சமண சங்கத்தில்
தன்னை இணைத்துக் கொண்டான். வட இந்தியாவில் கொடிய
பஞ்சம் உண்டாகும் என்பதை முன்னதாக அறிந்து பத்திரபாகு
முனிவர் அங்கிருந்து தென்னகம் வந்தார் என்பர். இப்பஞ்சம்
பன்னிரண்டு ஆண்டுகள் நீடித்தது. அச்சூழலில் ஜைன சங்கத்தார்
பல ஆயிரம் (எண்ணாயிரம் என்பர்) துறவிகளுடன்
தென்னிந்தியாவில் குடிபுகுந்தார் என்பர். தென்னிந்தியா அப்போது
மிகவும் செழிப்பான நிலையில் இருந்தது. சமண முனிவர்கள்
உணவை ஏற்றுக் கொள்வதில் சில விதிமுறைகளைத் தவறாது
பின்பற்றுவர். அவற்றில் ஏதேனும் குறை நேர்ந்தால் அன்று
உண்ணாமலேயே இருந்து விடுவர். அதனால் அவர்களுக்கு
உணவிடும் முறைகளை, அவர்களது சமயப் பழக்கவழக்கங்களை
நன்கறிந்த இல்லறத்தார் இருந்ததாலேயே அவர்கள் தென்னகம் நாடி
வந்திருப்பர். அவர்கள் ஒருவேளை சமண நெறிகளைப்
பின்பற்றியவர்களாக இருந்திருக்கலாம் என ஊகிக்க இடமுள்ளது.
தென்னகத்தில் குடியேறியதும் முனிவர்கள் அம்மக்களுடன்
நெருங்கிப் பழகி அவர்களுடைய மொழி, பண்பாடு, நாகரிகம்
ஆகியவற்றை நன்கு அறிந்து கொண்டதோடு அவற்றில் நல்ல
பயிற்சியும் பெற்றனர். அவர்கள் சங்கம் சமணசமயக்
கொள்கைகேளாடு தமிழ், கலை, இலக்கியம் ஆகியவற்றையும்
வளர்க்கத் தொடங்கியது.
தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர் மைசூர் நாட்டில்
வந்து வெள்ளைக்குளம் என்னும் பொருள்படும் சிரவணபௌகுளா
(சிரவண = சமணர்; பௌ = வெள்ளை; குளா = குளம்) என்று
இப்போது வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த
முனிவர்களுடன் தங்கினார்.
தங்கியபின், தம் சீடர்களில் ஒருவரான
விசாகமுனிவர் என்பவரை அனுப்பிச் சோழபாண்டிய
நாடுகளில்
சமண
சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர்
சல்லேகனை
நோன்பிருந்து கி.மு. 297-இல் வீடுபேறு பெற்றார்.
சல்லேகனை
என்பது வடக்கிருத்தல். வடக்கிருத்தல் என்பதன்
விளக்கம்
பின்னர்க் காண்க. இவரது சீடராகிய சந்திரகுப்தரும்
அங்கேயே
சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.
பாண்டிய நாட்டில் முன்னமேயே சமணமதம் கால்
கொண்டிருந்ததால் வடநாட்டுத் துறவிகளின் வருகையும்
செயல்பாடுகளும் புதியதொரு ஊக்கத்தை உண்டு பண்ணியது
எனலாம்.
ஆக, தமிழகத்தைப் பொறுத்தவரை
கி.மு. 3-ஆம்
நூற்றாண்டிலேயே சமணசமயம் பரவி இருந்ததாக அறிகிறோம்.
இக்கருத்தை
அரண் செய்ய நமக்கு உதவுவது ஆங்காங்கே
கிடைக்கும் சமணத் தொடர்பு உடைய பிராமிக்
கல்வெட்டுகளாகும்.
இத்தகைய கல்வெட்டுகள் தமிழகத்தில் அச்சரப்பட்டி, மாங்குளம்,
திருப்பரங்குன்றம், அழகர்மலை முதலிய இடங்களில்
காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்த
ஆய்வாளர்கள் கர்நாடக
மாநிலத்திலிருந்து கொங்கு நாட்டின் வழியாக முதலில் பாண்டி
மண்டலத்திலும், பின்னர் தொண்டை மண்டலத்திலும் சமணம்
பரவியிருக்கலாம் என்று
கூறுகிறார்கள்.
எவ்வாறாயினும் தமிழகத்தில்
கி.மு. மூன்றாம்
நூற்றாண்டிலேயே சமண சமயம் வேரூன்றத் தொடங்கியது என்பது
வரலாறு
உணர்த்தும் உண்மையாகும்.
இனி, பழந்தமிழ் நூல்களில் சமணம் என்பதைப்பற்றி
அறியலாமா?