தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.2 எட்டுத்தொகை நூல்கள்

2.2 எட்டுத்தொகை நூல்கள்

    எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம்
சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக
அமையும். அவற்றுள்,

  • அகம் சார்ந்தன

  • 1.
    நற்றிணை
    2.
    குறுந்தொகை
    3.
    அகநானூறு
    4.
    ஐங்குறுநூறு
    5.
    கலித்தொகை

    என்ற ஐந்துமாகும்.

  • புறம் சார்ந்தன

  • 1.
    புறநானூறு
    2.
    பதிற்றுப்பத்து

    என்ற இரண்டுமாகும்.

  • அகமும் புறமும் கலந்தமைந்த தொகுதி


  • பரிபாடல் மட்டுமே.

    இனி ஒவ்வொரு நூலின் அமைப்பும் சிறப்பும் பற்றிக்
    காண்போம்.

    2.2.1 நற்றிணை

        அகநானூறு போல் மிக நீண்டனவாகவும் குறுந்தொகை போல்
    மிகச் சிறியனவாகவும் அமையாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட
    அளவினதான 400 அகவல்கள் நற்றிணை என்ற தொகுப்பில்
    உள்ளன. இதன் அடியளவு 9 முதல் 12 அடிகள். இதில் 110,
    379 ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆகிய இரண்டும் 13 அடிகள்
    கொண்டவை. இந்த நூலுக்கு அமைந்த திருமால் வணக்கப் பாடல்
    பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.

        நற்றிணையில் உள்ள பாடல்களை இயற்றிய புலவர்கள் நூற்று
    எழுபத்தைவர். 56 பாடல்களை இயற்றியோர்     பெயர்
    தெரியவில்லை. இதனைத் தொகுத்த புலவர் பெயரும்
    தெரியவில்லை. தொகுத்தவன் பாண்டியன் பன்னாடு தந்த மாறன்
    வழுதி.

    உண்மைக்காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,

    சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
    பிறப்புப் பிறிதாகுவ தாயின்
    மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397)

    என்னும் அடிகள் காட்டுகின்றன.

        செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை
    மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன்
    செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை
    வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

    கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்
    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
    ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
    பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)

    என்ற பகுதி இதனைக் காட்டுகிறது.

        ஒருவனுக்கு உண்மையான செல்வம் என்பது, தன்னை
    நம்பியோரின் துன்பம் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களின்
    துயர்துடைக்கும் கருணை உள்ளமே என்கின்றார் இன்னொரு
    புலவர்.

    சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
    புன்கண் அஞ்சும் பண்பின்
    மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)

    பெரியோர் நன்கு ஆராய்ந்து ஒருவரோடு நட்புக் கொள்வர்
    என்றும், மாறாக நட்டபின்னர் அதன் பொருத்தத்தை ஆராயார்
    என்றும் ஒருவர் கூறுகின்றார். (32)

    முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
    நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் (355)

    என்ற நற்றிணைப் பகுதி 'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்
    நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' என்ற திருக்குறளை
    நினைவூட்டக் காணலாம்.

        ஏனைய சங்க நூல்கள் போன்றே இந்நூலும் தமிழர்
    பண்பாட்டின் விளக்கமாகவும், உவமைகள் நிரம்பிய உயர்ந்த
    இலக்கியச் செல்வமாகவும் விளங்குகின்றது.

    2.2.2 குறுந்தொகை

        குறுகிய அடிகளால் ஆன 400 ஆசிரியப்பாக்களால் ஆன நூல்
    குறுந்தொகை
    ஆயிற்று. இதில் நாலடி முதல் எட்டடி வரை
    அமைந்த பாடல்கள் இடம் பெற்றன. இதனை இயற்றியோர் 205
    புலவர்கள். இதற்குக் கடவுள் வாழ்த்தொன்று உண்டு. இதன்
    ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இதனைத் தொகுத்தவர்
    பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார் பெயர் தெரியவவில்லை.
    இதற்குப் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் எழுதிய உரைகள்
    கிடைக்கவில்லை. இதன்     235     பாடல்கள் பல்வேறு
    உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

        இயற்பெயரான் அன்றிச் சிறப்புப் பெயரால் அறியப்பட்ட
    புலவர் பலர் இதில் இடம் பெறுவர். அணிலாடு முன்றிலார்,
    குப்பைக்கோழியார், விட்ட குதிரையார் என்பவை அவற்றுள் சில.
    தாம் பாடிய பாடல்களில் இடம் பெற்ற அழகிய தொடரே
    இப்பெயர்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

    காதல் வாழ்வின் பல்வேறு சிறப்புகளும் இந்நூலில் சுவைபடக்
    கூறப்பட்டுள்ளன.

    இம்மை மாறி மறுமை ஆயினும்
    நீயாகியர் என் கணவனை
    யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49)

    (இம்மை = இப்பிறவி ; மறுமை = அடுத்து வரும் பிறவி;
    நெஞ்சுநேர்பவள்
    = மனம் கவர்ந்தவள்)

    என்ற பகுதி, காதலின் அமரத் தன்மைக்குச் சான்றாகும்.

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே (3)

    என்ற பகுதியால் காதலின் ஆழமும், விரிவும், உயர்ச்சியும்
    உணர்த்தப் படுகின்றன.

        ஒரு பெண், ஊரார் பேசும் பழிச் சொல்லால் தன் உள்ளம்
    நைவதற்கு உவமையாக, யானையால் மிதிக்கப்பட்ட நன்கு முதிர்ந்த
    அத்திப் பழத்தைக் குறிப்பிடுகிறாள். (24)

        மற்றொரு தலைவி தனக்கும் ஆகாது, தன் காதலனுக்கும்
    பயன்படாது வீணாகும் தன் பெண்மை நலத்துக்கு, கன்றும்
    உண்ணாமல், கலத்திலும் (பாத்திரத்திலும்) கறக்கப்படாமல்,
    மண்ணில் வீழ்ந்து பாழாகும் நல்ல ஆவின் பாலை உவமை
    கூறுகின்றாள் (27). தாய்வழியிலும் தந்தை வழியிலும் உறவினராகாத
    ஓர் ஆணும் பெண்ணும் அன்பினால் ஒன்றுபடுதலுக்குச் செம்மண்
    நிலத்திலே பெய்த மழையை உவமை கூறினார் ஒரு புலவர்.
    அவரே செம்புலப்பெயல் நீரார். அவரது இறவா வரிகள்:

    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே (40)

    (புலம் = நிலம்)

    தன் காதலனாகிய கடுவனை இழந்த பெண் குரங்கு, தன்
    இளங்குட்டியைத் தன் இனத்திடம் விட்டு, மலையிலிருந்து வீழ்ந்து
    உயிர் துறத்தலை ஒரு புலவர் காட்டுகின்றார்.

        ஆடவனுக்குக் கடமையே உயிராக, வீட்டிலிருந்து இல்லறம்
    செய்யும் பெண்களுக்குத் தம் ஆடவரே உயிர் என்கிறது ஒரு
    செய்யுள். (135)

    2.2.3 ஐங்குறுநூறு

        இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று
    அடிகளும் உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை.
    இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும்
    நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர்
    பாடியுள்ளனர். ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துக்களைக்
    கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு.
    கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும்
    பாத்திரம் முதலியவற்றுள் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக
    அமையும்.

        இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து
    இயற்றியுள்ளார். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய
    கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல்
    இரும்பொறை என்பவர். இதன் 129, 130 ஆம் செய்யுட்கள்
    கிட்டவில்லை.

        இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற
    முறையில் திணைகள் கோக்கப்பட்டுள்ளன. இதற்குச் சுருக்கமான
    பழைய உரை கிடைத்துள்ளது.

    இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:

    மருதம்
    - ஓரம்போகியார்
    நெய்தல்
    - அம்மூவனார்
    குறிஞ்சி
    - கபிலர்
    பாலை
    - ஓதலாந்தையார்
    முல்லை
    - பேயனார்

        இதில் பல புதுமைகள் உண்டு. இதில் தொண்டிப்பத்து
    என்னும் பகுதி அந்தாதியாகவுள்ளது. மேலும் இயற்கைப்புணர்ச்சி,
    இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியர்க் கூட்டம் என்ற
    கிளவிகளும் தொடர்ச்சியாக உள்ளன. இதில் உள்ளுறையும்
    இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக
    அமைந்துள்ளன.

        ஒரு குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப்பாடும் போக்கை
    இந்நூலில் மட்டுமே காண முடியும். ‘வாழி ஆதன் வாழி
    அவினி!’ என்ற அடி பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப்
    பத்தி
    ல் காண்க.

        நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும்
    இல்லாது ஒழியவும், அன்பும் அறமும், ஒழுக்கமும், செல்வ
    வளமும் பெருகவேண்டும் என வேண்டும் பெண்களை
    இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.

        தன் கணவன் ஊரில், பாலை நிலத்தில் உள்ள கிணற்றடியில்
    கிடக்கும் அழுகல் நீர், தன் தாய் வீட்டில் தான் உண்ட
    தேன்கலந்த பாலை விட இனிமையாகக் கருதும் பெண்ணைக்
    கபிலர் அறிமுகப்படுத்துகின்றார். (203)

    2.2.4 அகநானூறு

        இது 13 அடிச்  சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும்
    உடைய 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது.
    பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார்.
    அது சிவ வணக்கப் பாடலாகும். இதற்கு நெடுந்தொகை என்ற
    பெயரும் உண்டு. இது களிற்று யானை நிரை (1-120) மணிமிடை
    பவளம் (121-300) நித்திலக்கோவை (301 - 400) என்று மூன்று
    தொகுதிகளாக உள்ளது. தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை
    விட வேறுபட்டுள்ளது. பாட்டின் எண் கொண்டு அதன்
    திணையைச் சொல்லும் வகையில் இவை கோக்கப்பட்டுள்ளன.
    ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைக்கு உரியன.
    2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற
    எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன
    மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன.
    மதுரை     உப்பூரிகுடி     கிழாரைக் கொண்டு இதனைத்
    தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175
    புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர்
    பெயர் தெரியவில்லை.

  • அரசியல், சமூக வரலாறுகள்

  •     அகநானூறு பண்டைத் தமிழரின் அரசியல் வரலாற்றையும்,
    சமூக வரலாற்றையும் அறியப் பெருந்துணை செய்யவல்லது.
    மூவேந்தர் பலர் பற்றியும் குறுநில மன்னர் பலர் பற்றியும் இது
    பதிவு செய்துள்ளது. வெண்ணிப்போர், ஆலங்கானத்துப் போர்
    முதலான பெரும்போர்கள் உவமை வாயிலாக விளக்கப்பட்டுள்ளன.
    யவனரின் கப்பல்கள் முசிறித் துறை முகத்திற்குப் பொன்னொடு
    வந்து, மிளகொடு திரும்பியதாக ஒரு செய்யுள் குறிப்பிட்டுள்ளது
    (149). ஒரு கன்னிப் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து, ‘அவளைத்
    தெரியாது’ என்று வாதிட்ட அறம் அற்ற ஒருவனுக்குக் கள்ளுர்
    அவையினர் தண்டனையளித்த செய்தியும் (256) அகநானூற்றில்
    காணப்படுகிறது.

        வெண்ணிப்போரில் புண்பட்ட பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து
    மாண்ட செய்தி கேட்டுச் சான்றோர் பலர் மாண்ட செய்தியும் (58)
    பேசப்படுகின்றது. குடவோலை முறையில் அவை உறுப்பினர்
    தேர்ந்தெடுக்கப்பட்டதை 77 ஆம் பாட்டால் அறியலாம். மக்களின்
    அன்றாட வாழ்வு பற்றியும், பழக்க வழக்கங்கள் பற்றியும் அரிய
    செய்திகள் இதில் உள்ளன. சிலவற்றை மட்டும் இங்குக்
    குறிப்போம்.

    மக்கட்பேற்றின் சிறப்பினை,



    இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
    மறுமை உலகமும் மறுவின்று எய்துப
    செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
    சிறுவர்ப் பயந்த செம்மலோர் (66)

    (இம்மை = இப்பிறவி; இசை = புகழ்; மறுமை உலகம் = வான்
    உலகம்; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் =
    பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர்
    = உயர்ந்தோர்)

    என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.

         தமிழர் திருமணமுறை பற்றி இந்நூலின் 86, 136 ஆகிய
    செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன.


  • இசை

  •     இந்நூலின் 82, 111, 352, 301 ஆகிய பாடல்கள் பண்டைத்
    தமிழிசையைப் பற்றி அறிய உதவுகின்றன. 352ஆம் செய்யுள் இசை
    இலக்கணத்தைக் குறிப்பிடுகின்றது.

  • இதிகாசச் செய்திகள்

  •     சேதுக்கரையில் ஓர் ஆல மரத்தடியில், கடல் கடந்து
    இலங்கைக்குச் செல்வது பற்றிய ஆலோசனையில் இராமன்
    ஆழ்ந்திருந்த போது, ஆலமரத்திலிருந்து பறவைகள் ஒலி எழுப்பி
    இடையூறு செய்தன. அப்போது இராமன் தலைநிமிர்ந்து பார்த்த
    பார்வையில் அவை ஒலி அடங்கின. தலைவியின் திருமணச்
    செய்தி அறிந்த அலர்தூற்றுவோர் அடங்கிப் போயினர் என்பதை
    உணர்த்தத் தோழி இராமனது நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறாள்.
    கம்பர் காப்பியத்தில் கூட இல்லாத இச்செய்தியை அகநானூறு (70)
    கூறுகிறது. கண்ணபிரான் கோபியர் தழை உடுத்திக் கொள்ளுதற்கு
    ஏற்ப மரத்தின் கிளையை மிதித்த செய்தி ஒருபாட்டில்
    காணப்படுகிறது. (59)

    2.2.5 கலித்தொகை

        கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள்
    கொண்டது இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத்
    தொல்காப்பியரால் சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது
    நினையத்தக்கது.

        பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும்
    பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும்
    அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.

    பாலை
    - பாலை பாடிய பெருங்கடுங்கோ
    குறிஞ்சி
    - கபிலர்
    மருதம்
    - மருதன் இளநாகனார்
    முல்லை
    - சோழன் நல்லுருத்திரன்
    நெய்தல்
    - நல்லந்துவனார்

    அம்மூவனாரே இந்நூலைத் தொகுத்தார் என்பர். நூல்
    முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற
    கருத்தும் உண்டு.

        காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது
    கலித்தொகை. இதன் உவமைகள் அழகு மிக்கன; ஓசை இனிமை
    மிக்கது; எண்ணங்கள் மிக உயர்ந்தன.

        இளமை நிலையில்லாதது என்று கூறி, அது உள்ள போதே
    காதலின்பத்தை முழுமையாகத் துய்க்க வேண்டும் என்பார் ஒரு
    புலவர். மிகக் கொடிய வறுமையால் வாடினாலும் ஒன்றினார்
    வாழ்க்கையே வாழ்க்கை என்கின்றார். அவர், மேலும்,

    ஒரோஒகை தம்முள் தழீஇ ஒரோஒகை
    ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை ! (18)

    (ஒரோஒகை = ஒரு கை ; ஒன்றன் கூறு ஆடை = ஆடையின்
    ஒரு பகுதி; ஒன்றினார் = சேர்ந்து இருப்பவர்)

        காதலன் துன்பத்தில் பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய
    இன்பம் இல்லை என்கிறாள் ஒரு தலைவி.

    அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
    துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
    இன்பமும் உண்டோ எமக்கு? (6)

    (அன்பற = அன்பு நீங்க; சூழாதே = கருதாமல்; ஆற்றிடை
    =வழியில்; நாடின் = சிந்தித்தால்)

        மனத்தில் வருத்தம் உண்டாகும்படி பிரிந்து செல்வதைப் பற்றி
    எண்ணாமல் உன்னுடன் வந்து வழியில் ஏற்படும் துன்பங்களைப்
    பகிர்ந்து கொள்வதைவிட வேறு இன்பம் எங்களுக்கு உண்டா?
    என்பது பொருள்.

        கலித்தொகையில் மதுரையும், வையையும் மீண்டும் மீண்டும்
    புகழப்படுகின்றன.     பாண்டியனும்     பல     பாடல்களில்
    புகழப்படுகிறான். இதில் இராமாயணக் கதை நிகழ்வுகளும், பாரதக்
    கதை நிகழ்வுகளும் உவமைகளாக ஆளப்பட்டுள்ளன. ஆயர்கள்
    ஏறுதழுவிப் பெண்ணை மணத்தல் இந்நூலில் மட்டுமே
    காணப்படுகிறது. கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் பற்றிய
    குறிப்புகள் இந்நூலில் மட்டுமே காணப்படுகின்றன.

    2.2.6 புறநானூறு

        புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது
    புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர்
    எனத் தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுட்களும்
    அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப் பின்னர் வரும் செய்யுள்களில்
    சிதைவுகள் உள்ளன. இதற்கு வணக்கச் செய்யுள் பாடியவர் பாரதம்
    பாடிய பெருந்தேவனார். அது சிவ வணக்கமாகும். இதற்கு 266
    செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு. இதனை இயற்றியோர்
    157 பேர் என்பர். பல பாடல்களை இயற்றியோர் பெயர்
    தெரியவில்லை. (16 செய்யுட்கள்) இதனை நமக்குத் தேடித் தந்தவர்
    தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார்.

        தமிழரின் பொற்கால நாகரிகத்தை நாம் அறிந்து போற்றத்
    துணை நிற்கும் அரும்பெரும் பெட்டகம் புறநானூறு. தமிழகத்தின்
    அரசியல், சமூகநிலை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள்,
    கலைச்சிறப்பு, வானியல் முதலிய அறிவுத் துறைகளில் பெற்றிருந்த
    வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் நிழற்படம் போல் தெரிவிக்க
    வல்லதாகும்.

        சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தர்கள்,
    பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி என்னும்
    கடையெழு வள்ளல்கள் முதலிய பலருடைய போர் வெற்றிகள்,
    கொடைவண்மை ஆகியவற்றை இந்நூல் விளக்கமாகத் தருகின்றது.
    மன்னர் சிலர்க்கும், புலவர் பெருமக்கட்கும் இடையே நிலவிய
    வியத்தகு நட்புறவும், புலவர்களின் தன்மான வாழ்வும் உலகம்
    வியக்கும் தன்மை உடையனவாகும்.

        கணவனை இழந்த பெண்டிர் தம் கூந்தலையும், வளையலையும்,
    பிற அணிகளையும் களைதல், உடன்கட்டை ஏறி உயிர்விடல்,
    இறந்தாரைத் தாழியில் இட்டுப் புதைத்தல், தீ மூட்டி எரித்தல்,
    வீரர்கட்கு நடுகல் நட்டு வழிபடல், நோய் கொண்டு இறந்த அரச
    குடும்பத்தார் உடலை வாளால் கீறிப் புதைத்தல், கணவனை இழந்த
    பெண்டிர் கைம்மை நோன்பு மேற்கொள்ளுதல் முதலான தமிழர்
    பண்பாட்டு நிலைகளை இந்நூல் காட்டி நிற்கின்றது.

        தமிழர் கையாண்ட இசைக்கருவிகளைப்பற்றியும், இருபத்தொரு
    இசைத் துறைகளை பற்றியும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே
    தமிழர் வானியல் அறிவில் மேம்பட்டிருந்தனர் என்பது பற்றியும்
    இந்நூலிலிருந்து அறியலாம்.

        மானம் அழிய வந்த பொழுது, வடக்கு நோக்கியிருந்து
    இறத்தலையும் (219) பகைவர்க்கு முன்னறிவுப்புச் செய்து
    படையெடுத்தலும் (9) அக்கால மரபுகளாம்.

        உலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கத்தக்க உயர்ந்த
    அறநெறிகளின் அரங்கமாக இந்நூல் விளங்குகின்றது.

    மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (18)

    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்போம் எனினே தப்புந பலவே (189)

    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே (187)

    மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (186)

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா (192)

    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் (195)

    அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55)

    என்பவை அவற்றுள் சிலவாகும்.


    2.2.7 பதிற்றுப் பத்து

        பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப்
    பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது.
    இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80
    செய்யுட்களே. இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார்
    எனத் தெரியவில்லை. இதற்குப் பழைய உரையொன்று உண்டு.

        இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு.
    அதன் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும்
    உள்ளன. இது, பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன்
    பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு,
    பாட்டுகளின் பெயர்கள், புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய
    செய்திகளைத் தருகின்றது.

        இந்நூலிற் காணும் பத்துக்களை இயற்றியோர் பெயரும், பாடல்
    பெற்ற மன்னர் பெயரும் பின்வரும் அட்டவணை வழி அறிக.

    பத்தின் பெயர்

    பாட்டுடைத் தலைவன்

    பாடிய புலவர்

    முதற் பத்து

    -

    -

    இரண்டாம் பத்து
    இமயவரம்பன்
    நெடுஞ்சேரலாதன்
    குமட்டூர்க்
    கண்ணனார்
    மூன்றாம் பத்து
    பல்யானைச்
    செல்கெழுகுட்டுவன்
    பாலைக்
    கௌதமனார்
    நான்காம் பத்து
    களங்காய்க்
    கண்ணிநார்முடிச்சேரல்
    காப்பியாற்றுக்
    காப்பியனார்
    ஐந்தாம் பத்து
    கடல்பிறக்கோட்டிய
    வேல்கெழு குட்டுவன்
    பரணர்
    ஆறாம் பத்து
    ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
    காக்கை பாடினியார்
    நச்செள்ளையார்
    ஏழாம் பத்து
    செல்வக் கடுங்கோ
    வாழியாதன்
    கபிலர்
    எட்டாம் பத்து
    தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
    இரும்பொறை
    அரிசில் கிழார்
    ஒன்பதாம் பத்து
    இளஞ்சேரல் இரும்பொறை
    பெருங்குன்றூர் கிழார்
    பத்தாம் பத்து

    -

    -


        இந்நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுட்கும், அதிலுள்ள ஒரு
    அழகிய     தொடரால்     தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
    அருவியாம்பல், தசும்பு துளங்கு இருக்கை, பிறழ நோக்கு
    இயவர்
    என்பன அவற்றுள் சில.

         ஒவ்வொரு பாட்டுக்கும் திணை, துறை, வண்ணம், தூக்கு
    என்பன காணப்படுகின்றன. இவை இசையுடன் பாடப்பட்டன
    போலும். இதன் நான்காம்பத்து அந்தாதித் தொடையால்
    அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

        சேர வேந்தர்களின் வீரமும் கொடையும், அவர்தம் தேவியரின்
    அழகும், சிறப்பும், கற்பு மேம்பாடும் இப்பாடல்களில் நன்கு
    விளக்கப்பட்டுள்ளன.

        பந்தர், கொடுமணம் என்ற இரண்டு ஊர்களின் செல்வ வளமும்
    இவ்விடங்களில் சேரரின் பண்டக சாலைகள் இருந்தமையும்
    அறியத் தக்கன. அண்மையில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள்
    இப்பகுதிகளின் பண்டைப் பெருமையைக் காட்டவல்லன.

        நன்மக்கள் வேண்டி வேள்வி செய்தல் உண்டு என்பதனை
    இந்நூலால் அறிகின்றோம். அந்தணரின் ஆறு கடமைகள்
    இன்னின்னவென்று ஒரு செய்யுள் (24) கூறுகின்றது. அறநெறிப்படி
    ஆளப்படும் அரசுக்குத் தடையாக அமைவன இன்னவை என
    இந்நூல் கூறுகின்றது. அதனைக் காண்க:-

    சினனே காமம் கழிகண்ணோட்டம்
    அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை
    தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து
    அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும் (22)

    (சினன் = கடுங்கோபம்; கழிகண்ணோட்டம் = அளவுக்கு
    விஞ்சிய அருள்; தெறல் கடுமை = மிகக் கடுமையாகத்
    தண்டித்தல்; திகிரி = சக்கரம்)

    2.2.8 பரிபாடல்

        எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த
    நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற
    பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள்
    பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து
    பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது
    22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன.
    புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.

        இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றிய விவரம்
    கிடைக்கவில்லை. இதிலுள்ள பாடல்களை இயற்றியோர் பதின்மூவர்.
    இவற்றுக்கு இசை     வல்லுநர்களைக் கொண்டு பண்
    வகுக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியர் பெயருடன், இசை வகுத்தவர்
    பெயரும், பண்ணின் பெயரும் ஒவ்வொரு பாடலுக்கும் கீழ்
    தரப்பட்டுள்ளன. கண்ணகனார் முதல் மருத்துவன் நல்லச்சுதனார்
    ஈறாகப் பத்து இசையறிஞர்கள் பண் வகுத்துள்ளனர்.

        இதில் திருமால் பற்றியனவும், முருகன் பற்றியனவுமான
    புராணச் செய்திகள் மிகுதி. மேலும், புதிய இலக்கணக் கூறுகளும்,
    புதிய சொல்லாட்சியும்,     வடசொற் கலப்பும் மிகுந்து
    காணப்படுகின்றன.

        முருகப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச்
    செய்திகளும், வையையில் நீராடுவாரின் பல்வேறு செயற்பாடுகளும்
    சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன. இசை, கூத்து ஆகிய
    கலைகள் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் உண்டு.
    திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபம் இருந்த செய்தியை
    அறியலாம்.

        பிற உயிர்களைக் கொல்வோர், வெகுளி உடையோர்,
    அறநெறியைப் பின்பற்றாதார், கூடா ஒழுக்கம் கொண்டோர்,
    மறுமையை நம்பாதோர் ஆகியோர் முருகன் அருள் பெற
    மாட்டார்கள் என்று ஒரு பாட்டுக் கூறுகின்றது. (5 : 73-77)

        முருகப்பெருமானிடம் பொன்னும் பொருளும் வேண்டாமல்,
    அருளும் அன்பும் வேண்டும் அன்பர்களையும் இந்நூலில்
    காணலாம்.

             - யாம் இரப்பை
    பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
    அருளும் அன்பும் அறனும் மூன்றும்
    உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே (5 : 78-81)

    1.
    எட்டுத்தொகை நூல்களுள் மூன்றடிகள் கொண்ட அகவல்
    இடம் பெற்ற நூல் எது?
    2.
    எட்டுத்தொகையுள் முருகவேள் வணக்கத்தை வாழ்த்துச்
    செய்யுளாகப் பெற்ற நூல் எது?
    3.
    குப்பைக்கோழியார் பாடல் இடம்பெற்ற நூல் எது?
    4.
    பதிற்றுப்பத்தில் அந்தாதித் தொடை அமைந்த பத்து எது?
    5.
    ஐங்குறுநூற்றைத் தொகுத்த சான்றோர் யார்?
    6.
    கலித்தொகையைத் தொகுத்த புலவர் யார்?

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:44:31(இந்திய நேரம்)