தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20222l3-2.3 ஆழ்வார்களும் நாயன்மார்களும்

2.3 ஆழ்வார்களும் நாயன்மார்களும்
பக்தி இயக்கத்தின் கொடையாக நமக்குக் கிடைத்த
அருளாளர்களே ஆழ்வார்களும்
நாயன்மார்களும் ஆவர். நாயன்மார்களைப்
பொறுத்தவரை இவ்வியக்கத்தின்
முன்னோடியாக - விடிவெள்ளியாகக்
காரைக்காலம்மையாரைக் குறிப்பிடலாம்.
வைணவத்தில் இத்தகைய
பெருமைக்குரியவர்களாக முதலாழ்வார்களைக்
கூறலாம். அவர்கள் பொய்கையாழ்வார்,
பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும்


காரைக்கால்
அம்மையார்


பொய்கையாழ்வார்


பூதத்தாழ்வார்


பேயாழ்வார்

மூவரும் ஆவர். சைவம், வைணவம் ஆகிய இருசமயங்களின்
மறுமலர்ச்சி தமிழகத்தில் பக்திப்பெருவெள்ளமாக ஓடப்போகிறது
என்பதை முன்கூட்டியே உணர்த்தி நிற்பவை இவர்களின்
பாடல்களே. இவர்கள் காட்டிய வழியிலேயே நாயன்மார்களும்
ஆழ்வார்களும் நடந்து பக்தியை அதன் உச்சநிலைக்குக் கொண்டு
சென்றனர். “தமிழகத்திலே பக்தியானது பொருளாதார - சமூக -
அரசியல் - சமயப்பேரியக்கமாக மாறியது. அதுகண்டு மன்னரும்
மாறினர்” என்று க. கைலாசபதி குறிப்பிடுவது நாம் மனம்
கொள்ளத்தக்கது.

வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்

என்று பாடுகிறது பெரியபுராணம். (காடவன் - பல்லவன்
மகேந்திர வர்மன்; கண்ணுதல் - சிவபெருமான்.) பல்லவ மன்னன்
மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக்
கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.
பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்தின் விளைவையே இதில்
குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார். ஆதலின் இப்பாடல் கூறும் செய்தி
உண்மையே ஆகும்.

  • பக்தி இலக்கியம்
  • பக்தி இயக்கத்தை முன்னின்று நடத்திச் சமண பௌத்த
    மதங்களைப் புறங்கண்ட சைவமும் வைணவமுமே தமிழ்ப்பக்தி
    இலக்கியத்துக்குப் பெருங்கொடை நல்கியுள்ளன. தமிழில் பக்தி
    இலக்கியம் என்னும்போது சைவநூல்களான
    பன்னிருதிருமுறையும்
    வைணவ நூலான நாலாயிரத்திவ்வியப்
    பிரபந்தமுமே
    நம்முன் நிற்கின்றன. இவை, இன்றைய தொகுப்பு
    வடிவில் நமக்குக் கிடைக்குமாறு செய்தவர்கள் இருவர்.


    நம்பியாண்டார்
    நம்பிகள்

    சைவத்திருமுறைகளைத் தொகுக்கும்
    முயற்சியைத் தொடங்கியவர் நம்பியாண்டார்
    நம்பிகள். நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தைத்
    தொகுத்தவர் நாதமுனிகள். இவ்விருவரின்
    தொகுப்புப் பணியினாலும் பக்தி இயக்கம் தன்
    சிகரத்தைத் தொட்டதாக வரலாற்றறிஞர்கள்
    கருதுகின்றனர்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:09:16(இந்திய நேரம்)