Primary tabs
6.3 இருபதாம்
நூற்றாண்டு உரைநடை
தமிழ் உரைநடை
இதுவரை இருந்து வந்த போக்கிலிருந்து
முற்றிலும் விடுபட்டு, தனக்கேயுரிய சிறப்புடன் வளம் பெற்ற
காலம் இருபதாம் நூற்றாண்டு எனலாம். ‘நான் ஏறிய ரயில்
வண்டி நடுராத்திரி மதுரை சேர்ந்தது’ என்ற சாதாரண
விஷயத்தைச் சொல்லவந்த ஒரு வித்வான், ‘நான் போந்த
நீராவித் தொடர்வண்டி நள்ளிரவில் நான்மாடக் கூடலினை
நண்ணிற்று’ என்று எழுதிய காலம் மாறிவிட்டது. இருபதாம்
நூற்றாண்டுக் காலப்பகுதி, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்
பகுதியில் எழுதி வந்தவர்களுடைய உரைநடையாலும்
தெளிவு பெற்றது. ஆகவே அத்தகைய உரைநடையாளர்களையும்
இருபதாம் நூற்றாண்டு உரைநடைப் பகுதியிலேயே காண்போம்.
நவீன இலக்கியப்
படைப்பாளர்களில், தமக்கென
தனித்தன்மை வாய்ந்த உரைநடைகளைப் பின்பற்றியவர்கள்
வேதநாயகம் பிள்ளையும் பி.ஆர்.ராஜமையரும் ஆவர்.
வேதநாயகம் பிள்ளை
மாயூரத்தில் 13
ஆண்டுகள் முன்சீப் பதவி வகித்தவர்.
தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை
எழுதினார். பெண்மதி மாலை, சுகுணசுந்தரி கதை, பிரதாப
முதலியார் சரித்திரம் போன்ற உரைநடை நூல்களையும்
எழுதினார். அவர் காலத்து
உரைநடையாளர்களின்
உரைநடையிலிருந்து, பிள்ளையின் உரைநடை மாறுபட்டிருந்தது.
எளிமை, நகைச்சுவை, பழமொழி, பிறமொழிக் கலப்பு என
அவருடைய உரைநடை அமைந்திருந்தது. கடினமான
வாக்கியங்களை அவர் பயன்படுத்தவில்லை.
வேதநாயகம் பிள்ளையின்
உரைநடைக்குச் சான்றாகக்
கீழ்க்காணும் பகுதியைக் காணலாம்.
“ஆதியூரில் அருமைநாத
பிள்ளை என்பவன் ஒருவன்
இருந்தான். அவன் சனியனை விலைக்கு வாங்குவது போல்,
ஏககாலத்தில் இரண்டு தாரங்களை மணம் செய்து கொண்டான்.
அந்தத் தாரங்கள் இருவரும் சகோதரிகள், கலியாணம் நடந்த
மறுவருஷத்தில் மூத்தவள் பெண் குழந்தை பெற்றாள்” என்ற
பகுதியைச் சான்றாகக் கூறலாம்.
பி.ஆர்.ராஜமையர் (1872-1898)
மதுரை மாவட்டம்
வத்தலக்குண்டில் பிறந்தவர்.
கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எழுதியுள்ளார். இது
நாவல் இலக்கிய வரலாற்றில் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
எளிய நடையில் உரைநடை எழுதினார்.
மனிதன் அவன்
தாழ்வும் ஏற்றமும் என்ற நூலும்
அவரால் எழுதப்பட்டது. “ஓசைச் சிறப்பும், கம்பீர நடையும்
அவர் உரைநடையின் சிறப்பு” என உரைநடை வரலாறு
என்னும் நூலில் வி.செல்வநாயகம் கூறுவார். கவிதையிலே
காணப்படும் உருவகங்களும், அகவுருவக் காட்சிகளும்
ராஜமையர் உரைநடையில்தான் தொடக்கம் பெற்றது.
ராஜமையரின்
புதிய உரைநடைப் போக்கிற்கு,
“கடலோசை விட புருஷர்களின்
விளையாட்டரவமல்ல;
வாலிப ஸ்திரீகளின் வம்புக் கூப்பாடல்ல;
இனிய வீணை
யாதிகளின் கானம் அல்ல;
வெற்றித் தம்பட்டத்தின்
ஓசையுமல்ல. அந்தக் குரலில்
களியாட்டத் தொனி
கிடையாது....” என்ற பகுதியே சான்றாக அமைகின்றது.
தொகுப்பாசிரியர்களுள்
சிறப்புக்குரியவர்களாகத் திகழ்பவர்கள்
சி.வை.தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதய்யரும் ஆவர்.
சி.வை.தாமோதரம் பிள்ளை (1832 - 1901)
யாழ்ப்பாணத்தில்
பிறந்த சி.வை.தாமோதரம் பிள்ளை
தமிழ்நாட்டில் உயர்ந்த உத்தியோகஸ்தராகப் பணியாற்றியவர்.
ஓலைச் சுவடிகளைத் தேடிப் பதிப்பித்தவர். கலித்தொகை,
தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்துக்
குறிப்புகளும் எழுதியுள்ளார். இவரது நடை இலக்கியமும், பேச்சு
வழக்கும் கலந்ததாக அமைகின்றது.
உ.வே.சாமிநாதையர் (1855 - 1942)
ஓலைச் சுவடிகளைத்
தேடிக் கண்டு, அவற்றை நூலாகப்
பதிப்பித்தவர் உ.வே.சா. ஆவார். இவர் மணிமேகலைக்
கதைச் சுருக்கம், உதயணன் சரித்திரச் சுருக்கம், கண்டதும்
கேட்டதும், நினைவு மஞ்சரி எனப் பல உரைநடை நூல்களை
எழுதியுள்ளார். இரண்டு விதமான உரைநடைகளை இவரது
நூல்களில் காணலாம்.
உரையாசிரியர்களைப்
பின்பற்றி உயர்ந்த செந்தமிழ்
நடையில் எழுதினார்.
பிற்காலத்தில்
எளிய நடையில், பத்திரிகைக்கு ஏற்றவாறு
எழுதினார். பிழையற்ற எளிய தமிழ் உரைநடை உ.வே.சா.வின்
சிறப்பாகும்.
மேற்குறிப்பிட்டோரைத்
தவிரவும், பெரியார் ஈ.வெ.ரா.
போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும்,
இலக்கியப்
படைப்பாளர்களும், தமிழ் அறிஞர்களும் சிறந்த உரைநடை
ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர்.
திருமணம் செல்வக் கேசவராய முதலியார்
(1864-1921)
கம்பநாடர்,
திருவள்ளுவர், தமிழ் வியாசங்கள் போன்ற
நூல்களை எழுதியுள்ளார். வசன நடையின் இயல்புகளை, அது
எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இவர்தான் முதலில்
விளக்கிக் காட்டியுள்ளார். தமிழ் உரைநடையில் கட்டுரைகள்
எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இவருடைய
‘உரைநடையே’ சான்றாக அமைகின்றது.
வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872-1936)
தேச
விடுதலைப் போராட்டத்தில்
மட்டுமல்ல,
இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் வ.உ.சி. மனம் போல
வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு
மார்க்கம் போன்ற மொழியாக்க நூல்களையும், இலக்கிய
உரைகளையும் படைத்துள்ளார். உயர்ந்த மெய்யுணர்வுக்
கருத்துக்களைச் செறிவான தமிழ் நடையில் எழுதியுள்ளார்.
சான்றாக,
“ஸ்ரீ ஜேம்ஸ்
ஆலன் நூல்களெல்லாம் உலகத்திற்கு
முக்கியமாக நம் தேயத்திற்கு,
மிக்க நன்மை
அளிப்பவையென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம்.
அந்நூல்கள் நம் வள்ளுவர் மறைக்கொப்பப் போற்றத்
தக்கவை....” என்னும் பகுதியைக் கூறலாம்.
வ.உ.சிதம்பரம்
பிள்ளை
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
அ.மாதவையா (1872-1925)
பஞ்சாமிர்தம்
என்ற பத்திரிகை நடத்தியவர் அ.மாதவையா.
பத்மாவதி சரித்திரம், தில்லை கோவிந்தன் போன்ற
நாவல்களையும், குசிகர் குட்டிக் கதைகள் என்ற நூலையும்
எழுதியுள்ளார். இவருடைய உரைநடையும் எளிமைத் தன்மை
வாய்ந்தது.
மறைமலையடிகள் (1876-1950)
நாகப்பட்டினத்திற்கு
அருகில் உள்ள காடம்பாடி என்னும்
ஊரில் பிறந்தவர். சுவாமி வேதாசலம் என்ற பெயரை
மறைமலையடிகள் என்று தூயதமிழாக்கி வைத்துக் கொண்டார்.
ஞானசாகரம் என்ற இதழை நடத்தி வந்தார். குமுதவல்லி
அல்லது நாகநாட்டரசி, மாணிக்க வாசகர் வரலாறும்
காலமும், மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை என
ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
அடிகளார் அனைத்துத்
துறையிலும் நூல்களை எழுதியுள்ளார்.
அவற்றைத் தனித்தமிழிலேயே, பிறமொழிக் கலப்பில்லாமல்
எழுதியுள்ளார். எந்தவொரு துறையையும் தனித்தமிழில் எழுத
முடியும் என உலகிற்கு எடுத்துக் காட்டியவர் மறைமலையடிகள்.
இவருடைய
உரைநடை நீண்ட வாக்கியங்களைக்
கொண்டதாக இருப்பினும் எளிமையும், இனிமையும் வாய்ந்ததாக
உள்ளது. புதுச் சொற்களைப் படைத்தார். தனித்தமிழ்
நடைக்குத் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973)
தனது 95ஆவது வயது
வரை, தொடர்ந்து எழுதியும்,
பேசியும் வந்தவர் பெரியார் என அழைக்கப்படும்
ஈ.வெ.இராமசாமி அவர்கள். பொதுமக்கள் பேசும் பேச்சிலேயே
இவரது உரைநடை சிறந்து அமைந்தது. அதனால் இலக்கணம்
பற்றிக் கவலைப்படாமல் எழுதினார். மொழிவளம் பற்றி
நினையாமல் பொருள் வளம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டது
பெரியாரின் உரைநடை. சுருக்கென்று தைக்குமாறு கூடிய
மொழிநடையைத் தமிழில் இவர்தான் முதலில் பயன்படுத்தியவர்
எனலாம்.
சான்றாக,
“பிறப்பால் உயர்வும்
இல்லை;
தாழ்வும் இல்லை. ஆணும்
பெண்ணும் சமம். மனைவி மலிவான வேலைக்காரியல்ல;
வெறும்
விளையாட்டுப் பொம்மையல்ல;
நகை மாட்டியல்ல;
வாழ்க்கைத்
துணை” என்ற பகுதியைக் கூறலாம்.
திரு.வி.கல்யாண சுந்தரனார் (1883-1953)
தேசபக்தன்,
நவசக்தி ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர்
திரு.வி.க. மேலும் பல்துறை அறிஞராக விளங்கினார்.
உள்ெளாளி, முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை,
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் எனப் பல உரைநடை
நூல்களைப் படைத்துள்ளார்.
தன் உரைநடை பற்றித்
திரு.வி.க.வே இவ்வாறு கூறுவார்.
“என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று
இளமையில் உற்றது;
இன்னொன்று சங்க இலக்கியச் சார்பு
பெற்றபோது பொருந்தியது. மற்றொன்று பத்திரிகை உலகை
அடைந்த நாளில் அமைந்தது. இறுதியதே எனக்கு உரியதாய்
உடையதாய் நிலைத்தது. இந்நடை எளியது. சிறுசிறு
வாக்கியங்களாலாயது.”
“திரு.வி.க.வின்
நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை”
என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்.
பாரதியார் (1882-1921)
மகாகவி பாரதி
சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்,
பத்திரிகையாளர் எனப் பன்முகத் திறமைப் பெற்றவர்.
பாரதியாரின் கட்டுரைகள் இப்போது தனிநூல்களாக அச்சிடப்
பெற்றுள்ளன. இவரது நடையில் வட சொற்கலப்பும், ஆங்கிலச்
சொற்கலப்பும் காணலாம். மொழித் தூய்மை பற்றிக்
கவலைப்படாதவர். நடை உயிரோட்டமுடையதாக இருப்பதில்
கவனம் கொண்டார். புதிய
சொல்லாக்கங்களையும்
படைத்துள்ளார்.
தமிழ் வசனநடை
எப்படியிருக்க வேண்டும் என்பதைப்
பற்றிப் பாரதி கூறும்போது “தமிழில் வசன நடை இப்போதுதான்
பிறந்து பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு
மட்டும். ஆதலால் இப்போதே நமது ‘வசனம்’ உலகத்தின்
எந்தப் பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி
முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவது போலவே
எழுதுவது தான் உத்தமம் என்பது என் கட்சி” என்பார்.
நேருக்கு நேர்
பேசுவது போல அமையும் பாரதியின்
உரைநடைக்குச் சான்றாக “உன்னுடைய ஆன்மாவும்
உலகத்தினுடைய ஆன்மாவும் ஒன்று. நீ, நான், முதலை,
ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லாம் ஒரே உயிர். அந்த
உயிரே தெய்வம்” என்னும் பகுதியைச் சுட்டலாம்.
பாரதிக்குப்
பின் தமிழ் உரைநடை என்னும் நூலில்
வல்லிக்கண்ணன்.
‘தமிழ் உரைநடை
வரலாற்றில் பாரதி காலம் என்றே ஒரு
காலம் சுட்டப்படுகின்றது’ என்பார்.
மகாகவி
பாரதியார்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
வ.வே.சு.ஐயர் (1881 - 1925)
திருச்சி வரகனேரியில்
பிறந்தவர். கம்பராமாயண ரசனை
என்னும் திறனாய்வு நூலை எழுதியவர். தமிழின் முதல்
சிறுகதையைப் படைத்தவர். தமிழில் மறுமலர்ச்சி நடை
வ.வே.சு.ஐயரிலிருந்து தொடங்குவதாக
உரைநடைத்
திறனாய்வாளர்கள் கூறுவர்.
இலக்கண அமைதி,
கம்பீரமான நடையழகு, இலக்கியச் சுவை,
தகுந்த இடங்களில் பிறமொழிச் சொற்கள் கலப்பு, பேச்சு வழக்கு
என அனைத்தையும் அளவாகக் கலந்து படைக்கப்பட்ட புதிய
உரைநடை வ.வே.சு.நடையாகும்.
“நாரஸிஸ்ஸனுக்குத்
தாகம் எடுத்தது, எரிக்கரைக்குச் சென்று
நீரை அள்ளிக் குடிக்கலாம் என்று போய், கரையில் உட்கார்ந்து
கொண்டு குனிந்தான். ஏரியின் ஜலம் நிர்மலமாய், நீல வானத்தை
பிரதிபிம்பித்துக் காட்டிக் கொண்டு பளிங்கு
போல்
அசைவற்றிருந்தது” என்னும் பகுதி வ.வே.சு.ஐயர் உரைநடை
அமையும் தன்மையைக் காட்டுகிறது.
டி.கே.சிதம்பரநாத முதலியார் (1882-1954)
ரசிகமணி
என்றழைக்கப்படும் டி.கே.சி. இதய ஒலி,
அற்புத ரஸம், கம்பர் யார் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
இவரது நடை எளிமையான, உயிரோட்டமுள்ள, பொது மக்கள்
விரும்பிப் படிப்பதற்குரிய பேச்சு வழக்கை அடிப்படையாகக்
கொண்ட நடையாகும். பண்பாடு, வானொலி போன்ற
சொற்களை உரைநடையில் படைத்தவர் இவர் என்று கூறுவர்.
டி.கே.சிதம்பரநாத
முதலியார்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
எஸ்.வையாபுரிப் பிள்ளை
(1888-1956)
தமிழ்ப் பேரகராதி
உருவாகப் பெருங்காரணமாக
இருந்தவர் வையாபுரிப்பிள்ளை. இலக்கணச் சிந்தனைகள்,
இலக்கிய தீபம், இலக்கிய மணிமாலை, தமிழ்ச் சுடர்
மணிகள் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார்.
வ.ராமசாமி (1889-1951)
மணிக்கொடி
இதழின் ஆசிரியராக இருந்த, வ.ராமசாமி
இன்றைய தமிழ் உரைநடைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்
படைப்புக்களை அளித்தவர். நடைச்சித்திரம் என்ற இலக்கிய
வடிவத்தை உரைநடைக்கு அளித்தவர். பாத்திரங்களின்
குணாதிசயங்களை விளக்கும் வகையில் அமைந்த அந்த நடைச்
சித்திரங்கள் உரைநடை இலக்கியத்திற்கு உயிரோட்டம் தந்தன.
சீரிய சிந்தனைகளும்
அவருடைய உரைநடையில்
அமைந்திருக்கும்.
வ.ரா.வின் நடைச்சித்திரங்களின்
ஒன்று மார்க்கட்டு
மாணிக்கம். அதன் ஆரம்பப் பகுதி
“மார்க்கட்டு
மாணிக்கம் கடைத் தெருவில் காசுக் கடையில்
விற்கும் நவரத்ன கற்களில் ஒன்றல்ல. மாணிக்கம் உயிருள்ளவன்.
அவன் மார்க்கட்டில் அலுக்காமல், சலிக்காமல் வியாபாரம்
செய்கிறான். கடனுக்கு விற்றேன் என்று தலைமயிரைப் பிடித்து
இழுத்து தொடையில் கைவைத்து, எலிகள் ஓடுவதையும்
கவனிக்காமல், ஏக்கக் கவலையில் ஆழ்ந்து கிடக்கும் மனிதனை,
சித்திரத்தில் பார்த்திருப்பீர்கள். அந்தப் பேர்வழியல்ல மாணிக்கம்”
என்ற அமைந்திருக்கும்.
ரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961)
சொல்லின்
செல்வர் என்று
அழைக்கப்படும்
ரா.பி.சேதுப்பிள்ளை, ஊரும் பேரும் உட்படப் பல நூல்களைப்
படைத்தவர். “உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால்
சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்” என்பார்
சுத்தானந்த பாரதி. இவரது நடை செய்யுளின் இனிமை கொண்ட
செந்தமிழ் நடையாகும். ‘இனிய உரைச் செய்யுள்’ என்றே இவர்
உரைநடையைக் குறிப்பிடுவர். அடுக்குமொழி, எதுகை, மோனை,
இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு
வந்தவர் ரா.பி.சேதுப்பிள்ளை. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில
அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே
பாராட்டுவார்.
“அருமையான தமிழ்ச்
சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை
எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக்
கடிப்பார் உண்டோ?” - இது ரா.பி.சேதுப்பிள்ளை
உரைநடையின் ஒரு துளியாகும்.
தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (1901-1980)
பன்மொழிப்
புலவர் எனப் பாராட்டப் பெறும் தெ.பொ.மீ.
அவர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கியவர்.
தத்துவம், வரலாறு, இலக்கணம், மொழியியல் என அனைத்துத்
துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளார். சிறு சிறு சொல்
தொடர்களில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் முறையில் இவரது
உரைநடை அமைகின்றது.
மு.வரதராசனார் (1912-1974)
பேராசிரியராகவும்,
துணைவேந்தராகவும் விளங்கிய
மு.வரதராசன் பல்துறை நூல்களைப் படைத்தவர். நடையை
எளிமைப்படுத்தியவர். திரு.வி.க. நடையைப் போன்று, எளிய
நடையில் தெளிவுமிக்க வகையில் இனிமையும் மென்மையும்
வாய்ந்த சொற்களால் உரைநடையைப் படைத்துள்ளார்.
வினாக்களை எழுப்பிச் செல்லும் பாங்கையும் இவரது நடையில்
காணலாம்.
மு.வரதராசனாரின்
வினா நடைக்குச் சான்றாக,
“திருடர்களுக்கு
மனைவி மக்கள் இல்லையா? நண்பர்கள்
இல்லையா? அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்
தானே இப்படிப் பொருளுக்காகத் திருட்டுக் குற்றஞ் செய்யத்
தூண்டுகிறது?” என்ற பகுதியே அமைகின்றது.