தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


குறிஞ்சி

1. குறிஞ்சி
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார்

2. குறிஞ்சி
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக

3. குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - தேவகுலத்தார்

13. குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர்

14. குறிஞ்சி
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
'நல்லோள் கணவன் இவன்' எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
'மடன்மா கூறும் இடனுமார் உண்டே' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். 'மடலேறுவல்' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர்

17. குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமாறாமல் கூறியது.- பேரெயின் முறுவலார்

18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர்

23. குறிஞ்சி
அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார்

25. குறிஞ்சி
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்

26. குறிஞ்சி
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே-
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய்
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக் கொடியோனையே.
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ

29. குறிஞ்சி
நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார்

32. குறிஞ்சி
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார்

36. குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர்

38. குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர்

40. குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், 'பிரிவர்' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது. - செம்புலப்பெயனீரார்

42. குறிஞ்சி
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர்

47. குறிஞ்சி
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே!
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா

52. குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே?
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார்

54. குறிஞ்சி
யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார்

58. குறிஞ்சி
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!
கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார்

60. குறிஞ்சி
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருந்ங் கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர்

62. குறிஞ்சி
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

68. குறிஞ்சி
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை

69. குறிஞ்சி
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன்

70. குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே.
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார்

72. குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார்

73. குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர்

74. குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார்

76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண் வரல் வாடை தூக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார்

78. குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!-
நோதக்கன்றே-காமம் யாவதும்
நன்று என உணரார்மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார்

81. குறிஞ்சி
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்-
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

82. குறிஞ்சி
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு,
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்;
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழுங் கொடி அவரை பூக்கும்
அரும் பனி அற்சிரம் வாராதோரே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன்

83. குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை-
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே!
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன்

8. மருதம்
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்.

6. நெய்தல்
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார்

87. குறிஞ்சி
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர்

88. குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன்

90. குறிஞ்சி
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி,
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்

95. குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர்

96. குறிஞ்சி
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை

100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

101. குறிஞ்சி
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன்

105. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர்

106. குறிஞ்சி
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
'தான் மணந்தனையம்' என விடுகம் தூதே.
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர்

111. குறிஞ்சி
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,
'வென்றி நெடு வேள்' என்னும்; அன்னையும்,
அது என உணரும்ஆயின், ஆயிடைக்
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக-தோழி!-நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன்.

112. குறிஞ்சி
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே-
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார்

115. குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி-இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட!-நின் அலது இலளே.
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர்

116. குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது - இளங்கீரன்.

119. குறிஞ்சி
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார்

120. குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர்

121. குறிஞ்சி
மெய்யே, வாழி?-தோழி-சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என் தட மென் தோளே.
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ

129. குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

132. குறிஞ்சி
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே,
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார்

133. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே-தோழி!-என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன்

134. குறிஞ்சி
அம்ம வாழி-தோழி!-நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல-
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி,
நிலம் கொள் பாம்பின், இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன்

136. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

141. குறிஞ்சி
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே, அன்னை' என, நீ
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ' எனவே.
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ

142. குறிஞ்சி
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்

143. குறிஞ்சி
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்;
பழியும் அஞ்சும், பய மலை நாடன்;
நில்லாமையே நிலையிற்று ஆகலின்,
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

146. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்.

150. குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்!
இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. - மாடலூர் கிழார்

152. குறிஞ்சி
யாவதும் அறிகிலர், கழறுவோரே-
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே,
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார்

153. குறிஞ்சி
குன்றக் கூகை குழறினும், முன்றிற்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே,
ஆர் இருட் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர்

156. குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.
கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது. - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்

158. குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை!
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார்.

159. குறிஞ்சி
'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின;
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே.
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.

160. குறிஞ்சி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே?
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன்.

161. குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர்

165. குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை-
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்.

170. குறிஞ்சி
பலரும் கூறுக, அஃது அறியாதோரே-
அருவி தந்த நாட் குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே,
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார்

173. குறிஞ்சி
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப,
'இன்னள் செய்தது இது' என, முன் நின்று,
அவள் பழி நுவலும், இவ் ஊர்;
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே.
குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன்

176. குறிஞ்சி
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்;
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே-
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ?
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது. - வருமுலையாரித்தி

179. குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன்

182. குறிஞ்சி
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன்

185. குறிஞ்சி
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச்
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழி படர் நிலையே?
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

187. குறிஞ்சி
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!-
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர்

198. குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர்

199. குறிஞ்சி
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க்
கை வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர்

201. குறிஞ்சி
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

204. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே!
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன்

206. குறிஞ்சி
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்:
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!

208. குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே,
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

214. குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய, அயலது
அரலை மாலை சூட்டி,
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார்

217. குறிஞ்சி
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;
ஐதேய் கம்ம யானே;
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார்

222. குறிஞ்சி
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார்

223. குறிஞ்சி
'பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்' என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, 'இவை
ஒத்தன நினக்கு' எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது. - மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்

225. குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர்

239. குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன்

241. குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின் அழுதன-தோழி!-
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி,
ஏறாது இட்ட ஏமப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

244. குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!-
ஓரி முருங்கப் பீலி சாய
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம்
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே.
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ

247. குறிஞ்சி
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;
திறவோர் செய்வினை அறவது ஆகும்;
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை
வீயா மென் சினை வீ உக, யானை
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். - சேந்தம்பூதன்.

249. குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து,
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்றம் நோக்கினென்-தோழி!-
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே?
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

252. குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை, இன் முகம் திரியாது,
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,
'மடவைமன்ற நீ' எனக் கடவுபு
துனியல் வாழி-தோழி!-சான்றோர்
புகழும் முன்னர் நாணுப;
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?
தலைமகன் வரவறிந்த தோழி, 'அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.- கிடங்கில் குலபதி நக்கண்ணன்

257. குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே.
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன்

259. குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ?
நெஞ்சம் நன்றே, நின் வயினானே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர்.

261. குறிஞ்சி
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்
துஞ்சா வாழி-தோழி!-காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி

263. குறிஞ்சி
மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
'பேஎய்க் கொளீஇயள்' இவள் எனப்படுதல்
நோதக்கன்றே-தோழி!-மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.
'அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?'எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. - பெருஞ்சாத்தன்

264.குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர்

265. குறிஞ்சி
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை

'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்;
'வருவிரோ? என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து,
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன்

272. குறிஞ்சி
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர்
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்
குருதியொடு பறித்த செங் கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன்

276. குறிஞ்சி
பணைத் தோட் குறுமகள்
பாவை தையும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற-
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே!
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கூழிக் கொற்றன்

280. குறிஞ்சி
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.
கழற்றெதிர்மறை -நக்கீரர்

284. குறிஞ்சி
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன்

286. குறிஞ்சி
உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.
இரந்து பின்னின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.- எயிற்றியனார்

288. குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர்

291. குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
பாங்கற்கு உரைத்தது. - கபிலர்

292.குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர்

297. குறிஞ்சி
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி,
புணர்ந்து உடன் போதல் பொருள்' என,
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே.
தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்.

298. குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர்

300. குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார்

301. குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன்

302. குறிஞ்சி
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே?
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
'பிரியா நண்பினர் இருவரும்' என்னும்
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார்

308. குறிஞ்சி
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்
மா மலைநாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன்

312. குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளே:
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர்

315. குறிஞ்சி
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன்-தோழி!-
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.
வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை வேளாதத்தன்

317. குறிஞ்சி
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன்

321. குறிஞ்சி
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.

322. குறிஞ்சி
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே.
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன்

327. குறிஞ்சி
'நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று' என உணர்ந்த
குன்ற நாடன்தன்னினும், நன்றும்
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி!
நம் மனை மட மகள், 'இன்ன மென்மைச்
சாயலள்; அளியள்' என்னாய்,
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

333. குறிஞ்சி
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக் குறை வருத்தம் வீட,
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே?
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன்

335. குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து,
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல்
வல் விற் கானவர் தங்கைப்
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன்

336. குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!-
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந் தேர் நேமி போகிய
இருங் கழி நெய்தல் போல,
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே,
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன்

337. குறிஞ்சி
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே;
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின;
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என
யான் தன் அறிவல்; தான் அறியலளே;
யாங்கு ஆகுவள்கொல் தானே-
பெரு முது செல்வர் ஒரு மட மகளே?
தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.- பொதுக் கயத்துக் கீரந்தை

339. குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி, சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க்
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கலங்கடையே.
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார்

342. குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே?
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்

346. குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன்-தோழி!-
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன்

353. குறிஞ்சி
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.
பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது கவல் அறிந்து, பின்னும் 'பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்', என்று, ப

355. குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!-
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர்

357. குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய-
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர்

360. குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல்
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

361. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும்,
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர்

362. குறிஞ்சி
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே?
வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது. - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்

365. குறிஞ்சி
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே-
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.
'யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி

366. குறிஞ்சி
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?-
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு,
ஒழுகு கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ, தோழி கூறியது. - பேரிசாத்தன்

371. குறிஞ்சி
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு,
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன்

373. குறிஞ்சி
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன்

374. குறிஞ்சி
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார்

375. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்.
யாமம் காவலர் அவியாமாறே.
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது.

377. குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.- மோசி கொற்றன்

379. பாலை
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன்,
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது.

385. குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை,
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்;
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர்

389. குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை-
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
'நன்றோ மகனே?' என்றனென்;
'நன்றே போலும்' என்று உரைத்தோனே.
தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- வேட்ட கண்ணன்

392. குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார்

394. குறிஞ்சி
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன் நாள் இனியது ஆகி, பின் நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:28:24(இந்திய நேரம்)