தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


முல்லை

21. முல்லை
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், 'கார்' எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, 'அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், 'கானம் அவர் வரு

24. முல்லை
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர்

64. முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே.
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை

65. முல்லை
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள,
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்-
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார்

66. முல்லை
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை-
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாராஅளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார்

98. முல்லை
'இன்னள் ஆயினள் நன்னுதல்' என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோக்குளமுற்றன்

99. முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். 'எம்மை நினைத்தும் அறிதிரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார்

108. முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன்

110. முல்லை
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ-தோழி!-நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார்

126. முல்லை
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி!-நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி

148. முல்லை
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
'கார் அன்று' என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார்.

162. முல்லை
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை-
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே?
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன்.

167. முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

183. முல்லை
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?-
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார்

186. முல்லை
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே,
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி.

188. முல்லை
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்-
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்-
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

190. முல்லை
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன்.

191. முல்லை
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?-
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், 'போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

193. முல்லை
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார்

194. முல்லை
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?

உரை

பருவ வரவின்கண், 'ஆற்றாளாம்', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார்.

200. நெய்தல்
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!-
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே-
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு'என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார்.

210. முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார்.

220. முல்லை
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி

221. முல்லை
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன்

233. முல்லை
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன்

234. முல்லை
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை-துணை இலோர்க்கே.
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

240. முல்லை
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி.

242. முல்லை
கானங்கோழிக் கவர் குரற் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.- குழற்றத்தன்

251. முல்லை
மடவ வாழி-மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
பிரிவிடைத் தோழி. 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன்.

270. முல்லை
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான்.

275. முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி

279. முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

287. முல்லை
அம்ம வாழி-தோழி-காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, 'நம்மைத் துறந்து வாரார்' என்று கவன்றாட்கு,பருவங் காட்டி, தோழி, 'வருவர்' எனச் சொல்லியது, - கச்சிப்பேட்டு நன்னாகையார்.

289. முல்லை
வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.
'காலம் கண்டு வேறுபட்டாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், 'கொடியர்' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்'என்று, தலைமகள் சொல்லியது

314. முல்லை
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி!-தோழி!-வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க-
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன்

319. முல்லை
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார்ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன்

323. முல்லை
எல்லாம் எவனோ? பதடி வைகல்-
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே,
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார்

344. முல்லை
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன்

358. மருதம்
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்:
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன்

382. முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைங்
கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே?
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன்

387. முல்லை
எல்லை கழிய, முல்லை மலர,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி?-தோழி!-
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- கங்குல் வெள்ளத்தார்

391. முல்லை
உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய,
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே;
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை,
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே!
பிரிவிடை, 'பருவ வரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார்

400. முல்லை
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று,
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ-
நோய் உழந்து உறைவியை நல்கலானே?
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:28:32(இந்திய நேரம்)