தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நெய்தல்

4. நெய்தல்
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - காமஞ்சேர் குளத்தார்

5. நெய்தல்
அதுகொல், தோழி! காம நோயே?-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார்

6. நெய்தல்
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார்

49. நெய்தல்
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார்

51. நெய்தல்
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;
எந்தையும் கொடீஇயர்வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார்

55. நெய்தல்
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே.
வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தற் கார்க்கியர்

57. நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

92. நெய்தல்
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து-
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை,
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமால் செலவே.
காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது. - தாமோதரன்

97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே.
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி

102. நெய்தல்
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, 'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.- ஒளவையார்

103 நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன்

109. நெய்தல்
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன்

114. நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே,
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன்

117. நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார்

118. நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
'வருவீர் உளீரோ?' எனவும்,
வாரார்-தோழி!-நம் காதலோரே.
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.- நன்னாகையார்

122. நெய்தல்
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார்

123. நெய்தல்
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை,
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,
இன்னும் வாரார்; வரூஉம்,
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே,
பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது. - ஐயூர் முடவன்

125.நெய்தல்
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி-தோழி!-சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே,
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன்.

128. நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி;
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர்

145. குறிஞ்சி
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி-
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கொல்லன் அழிசி

163.நெய்தல்
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன்

166. நெய்தல்
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

172. நெய்தல்
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர்கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார்

175. நெய்தல்
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி,
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை,
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று,
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன்.

177. நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன்

184. நெய்தல்
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மட மகள்
கண் வலைப் படூஉம் கானலானே.
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

195. நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை,
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ-
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச்
செய்வுறு பாவை அன்ன என்
மெய் பிறிதாகுதல் அறியாதோரே!
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது. - தேரதரன்.

197. நெய்தல்
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார்.

205. நெய்தல்
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன்

212. நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண வந்து, நாணப் பெயரும்;
அளிதோ தானே, காமம்;
விளிவதுமன்ற; நோகோ யானே.
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன்

219. நெய்தல்
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
'ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன்-தோழி!-'எந் நீரிரோ?' எனினே.
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்.

226. நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்

227. நெய்தல்
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்-
தேரோன் போகிய கானலானே.
சிறைப்புறம். - ஓத ஞானி

228. நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

230. நெய்தல்
அம்ம வாழி, தோழி! கொண்கன்-
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?-
வயச் சுறா வழங்கு நீர் அத்தம்
தவச் சில் நாளினன் வரவு அறியானே.
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி

236. நெய்தல்
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.
வரைவிடை வைத்துப் பிரிவான். 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார்.

243. நெய்தல்
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே.
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன்

245. நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே-
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மாலை மாறன்

246. நெய்தல்
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு,
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.
சிறைப்புறம். - கபிலர்

248. நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சன்

269. நெய்தல்
சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,
'இனி வரின் எளியள்' என்னும் தூதே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார்

290. நெய்தல்
'காமம் தாங்குமதி' என்போர்தாம் அஃது
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின்,
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல் பொரு சிறு நுரை போல,
மெல்லமெல்ல இல்லாகுதுமே.
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. - கல்பொருசிறுநுரையார்.

294. நெய்தல்
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து,
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே,
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.- அஞ்சில் ஆந்தை

296. நெய்தல்
அம்ம வாழி-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே.
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன்

299. நெய்தல்
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி

303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன்

304. நெய்தல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன்

306. நெய்தல்
'மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

310. நெய்தல்
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின;
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும்,
நம்மே போலும் மம்மர்த்து ஆகி,
எல்லை கழியப் புல்லென்றன்றே;
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே.
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன்

311. நெய்தல்
அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர்
யான் கண்டன்றோஇலனே; பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத்
தாது சேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?
அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - சேந்தன்கீரன்

312. குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளே:
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர்

316. நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி-தோழி!-விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன்

318. நெய்தல்
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

320. நெய்தல்
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன்

324. நெய்தல
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை,
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி; இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது,
கவை மக நஞ்சு உண்டாஅங்கு,
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே.
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாராவரைவல்' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது. - கவைமகன்

325. நெய்தல்
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார்

326. நெய்தல்
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே,
சிறைப்புறம்.

328. நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர்

334. நெய்தல்
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப,
பனி புலந்து உறையும் பல் பூங் கானல்
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே?
'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - இளம் பூதனார்

340. நெய்தல்
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்
பெயர்தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே.
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. - அம்மூவன்

341. நெய்தல்
பல் வீ படரிய பசு நனை குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும், காதலர்
பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவது அன்று' என,
வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே.
'பருவ வரவின்கண் வேறுபடும்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது- மிளைகிழான் நல் வேட்டன்

345. நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல-
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி

349. நெய்தல்
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன்.

351. நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன்

372. குறிஞ்சி
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார்

376. நெய்தல்
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,
வேனிலானே தண்ணியள்; பனியே,
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- படுமரத்து மோசிக் கொற்றன்

381. நெய்தல்
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவதுகொல்லோ-
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது.

386. நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையோ அறிவேன்மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார்

397. நெய்தல்
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,
'அன்னாய்!' என்னும் குழவி போல,
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என் தோழி;
தன் உறு விழுமம் களைஞரோ இலளே.
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன்

401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:28:52(இந்திய நேரம்)