தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பாலை

7. பாலை
வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.
செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார்

10. மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர்

11. பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. - மாமூலனார்

12. பாலை
எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார்

15. பாலை
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார்

16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

20. பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன்

22. பாலை
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே?-சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல்!-நின்னொடும், செலவே.
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- சேரமான் எந்தை

27. பாலை
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார்

28. பாலை
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார்

30. பாலை
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல்,
பொய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த்'
தமியென்; மன்ற அளியென் யானே!
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி

37. பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

39. பாலை
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார்

41. பாலை
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே.
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- அணிலாடு முன்றிலார்

43. பாலை
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே;
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே:
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார்

44. பாலை
காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. - வெள்ளிவீதியார்

48. பாலை
'தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார்

56. பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார்

59. பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார்

63. பாலை
'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே!
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார்

67. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?

உரை

பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை

71. பாலை
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
கல் கெழு கானவர் நல்குறு மகளே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது -கருவூர் ஓதஞானி

77. பாலை
அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

79. பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது ஏகல் வல்லுவோரே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன்

84. பாலை
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன்

104. பாலை
அம்ம வாழி, தோழி! காதலர்,
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார்.

124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர்ஆயின்,
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே?
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

130. பாலை
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே.
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; 'நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!' என

131.பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே,
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. - ஓரேருழவனார்

135. பாலை
'வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே.
'தலைமகன் பிரியும்' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ.

137. பாலை
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக!-யான் செலவுறு தகவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

140. பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து,
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே?
பொருள்வயிற் பிரிந்த இடத்து, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லை.

144. பாலை
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ-
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்

147. பாலை
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி-கனவே!-
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன்

149. பாலை
அளிதோ தானே-நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

151. பாலை
வங்காக் கடந்த செங் கால் பேடை
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது,
குழல் இசைக் குரல குறும் பல அகவும்
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,
'மறப்பு அருங் காதலி ஒழிய
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.
பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - தூங்கலோரி

154. பாலை
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின்
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி,
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்
தயங்க இருந்து, புலம்பக் கூஉம்
அருஞ் சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன்

168. பாலை
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார்

174. பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி

180. பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார்

189. பாலை
இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்.

192. பாலை
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என,
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!-
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும்,
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

207. பாலை
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன்.

209. பாலை
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

211. பாலை
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி,
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்

213. பாலை
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக்
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

215. பாலை
படரும் பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

216. பாலை
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
'அன்னள் அளியள்' என்னாது, மா மழை
இன்னும் பெய்யும்; முழங்கி
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன

218.பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்;
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!-
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்பு வரை அமையா நம் வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன்

224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன்

229. பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுபமன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. - மோதாசனார்

232. பாலை
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும்,
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?-
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், துஞ்சும்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை

235. பாலை
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி
மரையினம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன்.

237. பாலை
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை

250. பாலை
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு,
இரலை நல் மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அளவை, கால் இயல்
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.
தலைமகன் பாகற்கு உரைத்தது. - நாமலார் மகன் இளங்கண்ணன்

253.பாலை
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல்
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன்

254. பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரா-தோழி!-
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்-
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்' என, வரூஉம் தூதே.
பருவங் கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான்

255. பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.
'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன்

256. பாலை
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச்
சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.

260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார்.

262. பாலை
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

266. பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்

267. பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே.
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார்

273. பாலை
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங் காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.
'பிரிவர்' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார்

274. பாலை
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன்

277. பாலை
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-
'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது?' என்றி;
அக் கால் வருவர், எம் காதலோரே.
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார்

278. பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன்

281. பாலை
வெண் மணற் பொதுளிய
பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே?
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன்

282. பாலை
செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல,
சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே?
வினவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. - நாகம் போத்தன்

283. பாலை
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி-தோழி-என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல்

285. பாலை
வைகா வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பருவங் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன்

307. பாலை
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன்

329. பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர்மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார்

331. பாலை
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன்

332. குறிஞ்சி
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர்
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை
குன்றகச் சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்

338. குறிஞ்சி
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம்
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார்

343. பாலை
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயருமாறே.
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன்

347. பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்

348. பாலை
தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே?
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன்

350. பாலை
அம்ம வாழி-தோழி!-முன் நின்று,
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச்
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ-
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி,
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?
பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார்.

352. பாலை
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

356. பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்,
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமனார.்

363. மருதம்
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே?
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன்

369. பாலை
அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார்

378. பாலை
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே!
மகள் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார்

380. பாலை
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி,
பெயல் ஆனாதே, வானம்; காதலர்
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே;
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய
வண்ணத் துய்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், 'கதுமென ஆற்றுவிப்பது அரிது' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்ற

383. பாலை
நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன்

388. குறிஞ்சி
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்;
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார்

390. பாலை
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்-
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!-
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
வளை அணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.
புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது. - உறையூர் முதுகொற்றன்

395. பாலை
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே,
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்;
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே;
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக்
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்;
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்
அளிதோதானே நாணே-
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது.

396. நெய்தல்
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன்
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார்.

398. பாலை
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை,
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை,
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:29:03(இந்திய நேரம்)