தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தோழி

1. குறிஞ்சி
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார்

9. நெய்தல்
யாய் ஆகியளே மாஅயோளே-
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார்

10. மருதம்
யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர்

16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர்

22. பாலை
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே?-சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல்!-நின்னொடும், செலவே.
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- சேரமான் எந்தை

23. குறிஞ்சி
அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார்

26. குறிஞ்சி
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே-
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய்
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக் கொடியோனையே.
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ

34. மருதம்
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!-
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன்

37. பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

42. குறிஞ்சி
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர்

45. மருதம்
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என,
மறுவரும் சிறுவன் தாயே;
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார்

47. குறிஞ்சி
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே!
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா

48. பாலை
'தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார்

51. நெய்தல்
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;
எந்தையும் கொடீஇயர்வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார்

52. குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே?
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார்

53. மருதம்
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல்,
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,
நேர் இறை முன்கை பற்றி,
சூரரமகளிரோடு உற்ற சூளே.
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

55. நெய்தல்
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே.
வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தற் கார்க்கியர்

59. பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார்

61. மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன்

66. முல்லை
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை-
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாராஅளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார்

69. குறிஞ்சி
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன்

73. குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர்

74. குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார்

81. குறிஞ்சி
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்-
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

83. குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை-
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே!
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன்

85. மருதம்
யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன்

88. குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன்

89. மருதம்
பா அடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப;
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?-
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர்

90. குறிஞ்சி
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி,
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்

109. நெய்தல்
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன்

111. குறிஞ்சி
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,
'வென்றி நெடு வேள்' என்னும்; அன்னையும்,
அது என உணரும்ஆயின், ஆயிடைக்
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக-தோழி!-நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன்.

113. மருதம்
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.- மாதீர்த்தன்

114. நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே,
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன்

115. குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி-இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட!-நின் அலது இலளே.
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர்

117. நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார்

123. நெய்தல்
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை,
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,
இன்னும் வாரார்; வரூஉம்,
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே,
பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது. - ஐயூர் முடவன்

124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர்ஆயின்,
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே?
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

127. மருதம்
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம்
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர!
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக,
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே.
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார்

130. பாலை
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே.
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; 'நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!' என

138. குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். - கொல்லன் அழிசி

139. மருதம்
மனை உறை கோழி குறுங் கால் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார்.

143. குறிஞ்சி
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்;
பழியும் அஞ்சும், பய மலை நாடன்;
நில்லாமையே நிலையிற்று ஆகலின்,
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

146. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்.

159. குறிஞ்சி
'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின;
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே.
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.

166. நெய்தல்
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

177. நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன்

178. மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர்; நோகோ யானே.
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை

179. குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன்

196. மருதம்
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்-
ஐய!-அற்றால் அன்பின் பாலே.
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது. - மிளைக் கந்தன்.

198. குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர்

210. முல்லை
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார்.

211. பாலை
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி,
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்

212. நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண வந்து, நாணப் பெயரும்;
அளிதோ தானே, காமம்;
விளிவதுமன்ற; நோகோ யானே.
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன்

213. பாலை
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக்
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

214. குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய, அயலது
அரலை மாலை சூட்டி,
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார்

215. பாலை
படரும் பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

217. குறிஞ்சி
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;
ஐதேய் கம்ம யானே;
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே.
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார்

225. குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர்

227. நெய்தல்
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்-
தேரோன் போகிய கானலானே.
சிறைப்புறம். - ஓத ஞானி

230. நெய்தல்
அம்ம வாழி, தோழி! கொண்கன்-
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?-
வயச் சுறா வழங்கு நீர் அத்தம்
தவச் சில் நாளினன் வரவு அறியானே.
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி

232. பாலை
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும்,
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?-
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், துஞ்சும்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை

236. நெய்தல்
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.
வரைவிடை வைத்துப் பிரிவான். 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார்.

238. மருதம்
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே.
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன்

247. குறிஞ்சி
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;
திறவோர் செய்வினை அறவது ஆகும்;
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை
வீயா மென் சினை வீ உக, யானை
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். - சேந்தம்பூதன்.

248. நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சன்

251. முல்லை
மடவ வாழி-மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
பிரிவிடைத் தோழி. 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன்.

253.பாலை
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல்
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன்

255. பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.
'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன்

258. மருதம்
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;
அலராகின்றால்-பெரும!-காவிரிப்
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்,
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே.
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர்

259. குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ?
நெஞ்சம் நன்றே, நின் வயினானே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர்.

260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார்.

262. பாலை
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

263. குறிஞ்சி
மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
'பேஎய்க் கொளீஇயள்' இவள் எனப்படுதல்
நோதக்கன்றே-தோழி!-மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.
'அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?'எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. - பெருஞ்சாத்தன்

265. குறிஞ்சி
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை

268. நெய்தல்
'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்;
'வருவிரோ? என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து,
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன்

275. முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி

277. பாலை
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-
'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது?' என்றி;
அக் கால் வருவர், எம் காதலோரே.
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார்

282. பாலை
செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல,
சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே?
வினவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. - நாகம் போத்தன்

287. முல்லை
அம்ம வாழி-தோழி-காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, 'நம்மைத் துறந்து வாரார்' என்று கவன்றாட்கு,பருவங் காட்டி, தோழி, 'வருவர்' எனச் சொல்லியது, - கச்சிப்பேட்டு நன்னாகையார்.

292.குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர்

294. நெய்தல்
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து,
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே,
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.- அஞ்சில் ஆந்தை

295. நெய்தல்
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி

297. குறிஞ்சி
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி,
புணர்ந்து உடன் போதல் பொருள்' என,
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே.
தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்.

298. குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர்

303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன்

308. குறிஞ்சி
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்
மா மலைநாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன்

309. மருதம்
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது'
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!-
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன்

317. குறிஞ்சி
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன்

321. குறிஞ்சி
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.

324. நெய்தல
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை,
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி; இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது,
கவை மக நஞ்சு உண்டாஅங்கு,
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே.
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாராவரைவல்' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது. - கவைமகன்

328. நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர்

331. பாலை
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன்

332. குறிஞ்சி
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர்
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை
குன்றகச் சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்

333. குறிஞ்சி
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக் குறை வருத்தம் வீட,
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே?
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன்

335. குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து,
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல்
வல் விற் கானவர் தங்கைப்
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன்

336. குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!-
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந் தேர் நேமி போகிய
இருங் கழி நெய்தல் போல,
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே,
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன்

338. குறிஞ்சி
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம்
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார்

339. குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி, சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க்
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கலங்கடையே.
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார்

342. குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே?
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்

343. பாலை
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயருமாறே.
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன்

345. நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல-
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி

346. குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன்-தோழி!-
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன்

348. பாலை
தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே?
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன்

350. பாலை
அம்ம வாழி-தோழி!-முன் நின்று,
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச்
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ-
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி,
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?
பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார்.

351. நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன்

353. குறிஞ்சி
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.
பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது கவல் அறிந்து, பின்னும் 'பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்', என்று, ப

354. மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ-
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான்

355. குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!-
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர்

357. குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய-
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர்

358. மருதம்
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்:
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
align="right">உரை
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன்

359. மருதம்
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம:
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை,
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ,
புதல்வற் தழீஇயினன் விறலவன்;
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. - பேயன்.

363. மருதம்
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே?
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன்

365. குறிஞ்சி
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே-
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.
'யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி

366. குறிஞ்சி
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?-
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு,
ஒழுகு கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ, தோழி கூறியது. - பேரிசாத்தன்

367. மருதம்
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்,
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே-
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன்

369. பாலை
அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார்

372. குறிஞ்சி
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார்

373. குறிஞ்சி
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன்

374. குறிஞ்சி
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார்

375. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்.
யாமம் காவலர் அவியாமாறே.
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது.

379. பாலை
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன்,
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது.

380. பாலை
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி,
பெயல் ஆனாதே, வானம்; காதலர்
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே;
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய
வண்ணத் துய்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், 'கதுமென ஆற்றுவிப்பது அரிது' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்ற

381. நெய்தல்
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவதுகொல்லோ-
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது.

382. முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைங்
கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே?
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன்

383. பாலை
நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன்

384. மருதம்
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே.
'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார்

388. குறிஞ்சி
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்;
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார்

389. குறிஞ்சி
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை-
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
'நன்றோ மகனே?' என்றனென்;
'நன்றே போலும்' என்று உரைத்தோனே.
தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- வேட்ட கண்ணன்

392. குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார்

393. மருதம்
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே,
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை,
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர்

394. குறிஞ்சி
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன் நாள் இனியது ஆகி, பின் நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார்

397. நெய்தல்
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,
'அன்னாய்!' என்னும் குழவி போல,
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என் தோழி;
தன் உறு விழுமம் களைஞரோ இலளே.
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:29:51(இந்திய நேரம்)