தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மூங்கில் (வேரல், கழை, அமை, வேய்)

18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர்

54. குறிஞ்சி
யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார்

74. குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார்

131.பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே,
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. - ஓரேருழவனார்

179. குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன்

180. பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார்

201. குறிஞ்சி
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

226. நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்

253.பாலை
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல்
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன்

331. பாலை
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன்

396. நெய்தல்
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன்
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:13:48(இந்திய நேரம்)