தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


வாகை (உழிஞ்சில்)

7. பாலை
வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.
செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார்

39. பாலை
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார்

347. பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்

369. பாலை
அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:14:00(இந்திய நேரம்)