தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


முல்லை

126. முல்லை
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி!-நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி

186. முல்லை
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே,
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி.

188. முல்லை
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்-
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்-
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

275. முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி

348. பாலை
தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே?
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:16:24(இந்திய நேரம்)