தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மல்லிகை (குளவி)

56. பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார்

59. பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார்

100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

136. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:19:30(இந்திய நேரம்)