தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கோழி (கானங்கோழி, சேவல்)

107. மருதம்
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார்.

139. மருதம்
மனை உறை கோழி குறுங் கால் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார்.

157. மருதம்
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை

234. முல்லை
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை-துணை இலோர்க்கே.
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

242. முல்லை
கானங்கோழிக் கவர் குரற் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.- குழற்றத்தன்

305. மருதம்
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை-யான் உற்ற நோயே.
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:25:00(இந்திய நேரம்)