தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கடுவன் இளவெயினனார்

கடுவன் இளவெயினனார்

3. திருமால்


திருமாலிடமிருந்து தோன்றிப் பரந்த பொருள்கள்

மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
5
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
10
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
'வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ' என மொழியுமால், அந்தணர் அரு மறை.


முனிவரும் தேவரும் பாடும் வகை

15
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்,
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
20
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும்,
25
'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்
சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
30
பாடுவார் பாடும் வகை.


வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை.
35
இரு கை மாஅல்!
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
40
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
45
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ?
வனப்பும் வலியும்
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்
50
வனப்பு வரம்பு அறியா மரபினோயே!
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
55
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
60
சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்!
ஓ! 'எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்:


சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
65
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
70
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:


நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு

பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
75
இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும்
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
80
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை:


நால் வகை வியூகம்

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!


பல திறப் பெயரியல்புகள்

இட வல! குட வல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
85
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
90
திருவின் கணவ! பெரு விறல் மள்ள!
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!

கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
பெட்டனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ
 
4. திருமால்


புகழ்தலை ஒழியோம்

ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்து, தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்: கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம்ஆயினும்,
5
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப:
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல் மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை:


இரணியனைத் தடிந்தமை

10
செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
15
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
20
வெடி படா ஒடி தூண் தடியொடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை;
புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்:


உலக உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்

25
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
30
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து,
35
மேவல் சான்றன, எல்லாம்.


கருடக் கொடி

சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
40
நின் ஒன்று உயர் கொடி யானை;
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று:
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் முடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடிமேலன;
45
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது;
பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;


பகையும் நட்பும் இன்மை

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
50
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும்
உள்வழி உடையை; இல்வழி இலையே:
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே: 'நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்' எனும்
55
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே:


அரு மறைப் பொருளாகிய இயல்புகள்

மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை:
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
60
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள: அவை
65
நின்ஓர் அன்ஓர் அந்தணர் அரு மறை.


பல்வேறு திருப் பெயர் கொண்ட ஒரு பொருள்

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
70
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே.

கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
பெட்டனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்
 
5. செவ்வேள்


அறுமுகப் பெருமானின் வெற்றிச் செயல்கள்

பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
5
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
10
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை!


வேலனது வெறிப்பாட்டு

'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ!' எனப் பேஎ விழவினுள்,
15
வேலன் ஏத்தும் வெறியும் உளவே:
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்:
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்வு ஆகலும்,
20
பிறப்பினுள் இழிபு ஆகலும்,
ஏனோர் நின் வலத்தினதே:


முருகப் பிரானின் பிறப்பு

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
25
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய,
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
30
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
35
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள:
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
'மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
40
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
45
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்:
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:
50
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!


தேவர் சேனைக்குத் தலைவனாதல்

55
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,
60
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
65
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன்
70
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.


முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்

நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
75
அழி தவப் படிவத்து அயரியோரும்,
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
நின் நிழல்:


முருகப் பெருமானிடம் வேண்டுதல்

அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
80
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!

கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
கண்ணனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:24:11(இந்திய நேரம்)