தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நப்பண்ணனார்

நப்பண்ணனார்
19. செவ்வேள்


வள்ளியை முருகன் வதுவை கொண்டது

நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,

புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,

'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்

இரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின்

5

தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு

சாறு கொள் துறக்கத்தவளொடு

மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.


கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி

புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,

கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,

10

அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,

சிறந்தோர் உலகம் படருநர் போல,

உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,

புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,

தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்

15

குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு

நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய

தார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல்

ஆர் வேலை யாத்திரை செல் யாறு.


பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி

சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்

20

புடை வரு சூழல் புலம் மாண் வழுதி

மட மயில் ஓரும் மனையவரோடும்,

கடன் அறி காரியக் கண்ணவரோடும் நின்

சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்

பாடு வலம் திரி பண்பின் பழ மதிச்

25

சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,

பாடிய நாவின், பரந்த உவகையின்,

நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,

படு மணி யானை நெடியாய்! நீ மேய

கடி நகர் சூழ் நுவலுங்கால்.


குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை

30

தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,

வம்பு அணி பூங் கயிற்று வாங்கி, மரன் அசைப்பார்

வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;

திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக்

கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து

35

பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,

குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற

இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!


மலைச் சிறப்பு
வழுதியுடன் ஏறியோர் கண்டவை

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,

கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,

40

தெய்வப் பிரமம் செய்குவோரும்,

கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,

யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,

வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்;

கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,

45

ஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்;

என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி

ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,

'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,

விரகியர் வினவ, வினா இறுப்போரும்;

50

'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்

சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு

ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்:

இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,

துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,

55

நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்

சோபன நிலையது துணி பரங்குன்றத்து

மாஅல் மருகன் மாட மருங்கு.


குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி

பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,

பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான்

60

வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்

ஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க,

'ஏஎ, ஓஒ!' என்று ஏலா அவ் விளி

அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்

செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை

65

மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே

வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.


இள மகளிரின் மருட்சி

நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்

சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப,

உதிர்த்த சுனையின் எடுத்த தலைய

70

அலர் முகிழ் உற, அவை கிடப்ப,

'தெரி மலர், நனை, உறுவ,

ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த

மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு' என

ஆங்கு இள மகளிர் மருள


குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்
பாங்கர்,

75

பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,

உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,

பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;

80

நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க

மணந்தவை, போல, வரை மலை எல்லாம்

நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;

விடியல் வியல் வானம் போலப் பொலியும்

நெடியாய்! நின் குன்றின்மிசை.


கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்
தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்

85

நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால்

புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,

பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,

மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,

பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,

90

கன்னிமை கனிந்த காலத்தார், நின்

கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்

மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்

முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்

குறுகிச் சிறப்பு உணாக்கால்.


முருகப் பெருமானை வாழ்த்துதல்

95

குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்

சிறப்பு உணாக் கேட்டி செவி.

உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே

படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;

உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்

100

விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;

எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,

தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,

அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்

கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;

105

உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!


கடவுள் வாழ்த்து
நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:24:55(இந்திய நேரம்)