தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செவ்வேள்

செவ்வேள்
5. செவ்வேள்


அறுமுகப் பெருமானின் வெற்றிச் செயல்கள்

பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
5
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
10
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை!


வேலனது வெறிப்பாட்டு

'மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ!' எனப் பேஎ விழவினுள்,
15
வேலன் ஏத்தும் வெறியும் உளவே:
அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்:
சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
சிறப்பினுள் உயர்வு ஆகலும்,
20
பிறப்பினுள் இழிபு ஆகலும்,
ஏனோர் நின் வலத்தினதே:


முருகப் பிரானின் பிறப்பு

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
25
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய,
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
30
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,
'விலங்கு' என, விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
35
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் மருள:
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
'மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
40
சாலார்; தானே தரிக்க' என, அவர் அவி
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
45
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்:
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:
50
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!


தேவர் சேனைக்குத் தலைவனாதல்

55
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,
60
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
65
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன்
70
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.


முருகன் திருவடி அடைவோரும் அடையாதோரும்

நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை,
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
சேரா அறத்துச் சீர் இலோரும்,
75
அழி தவப் படிவத்து அயரியோரும்,
மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
நின் நிழல்:


முருகப் பெருமானிடம் வேண்டுதல்

அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
80
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!


கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
கண்ணனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

8. செவ்வேள்


திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்

மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
5
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
10
பற்றாகின்று, நின் காரணமாக;
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
15
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்
அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
20
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப,
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.


குன்றத்திற்கும் கூடலுக்கும் இடையிலுள்ள வழி

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
25
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம! நின்
குன்றத்தான் கூடல் வரவு.


குன்றத்தின் முழக்கம்

குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
30
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ,
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழை குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
35
குன்றம் குமுறிய உரை.


தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்பு கூறுதல்

'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
40
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல்,
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
45
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும்
சிறப்பிற்றே தண் பரங்குன்று.'


தலைமகள் புலந்து உரைத்தல்

'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்
50
காலை போய் மாலை வரவு.'


தலைமகன் சூளும் தலைவி விலக்கலும்

'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
பனி பொழி சாரலும் பார்ப்பாரும்;...
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
55
துனியல் நனி' 'நீ நின் சூள்.'


தோழி தலைமகனைச் சூள் விலக்கிக் கூறுதல்

'என் பாணி நில் நில் எலாஅ! பாணி நீ, நின் சூள்:
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!
ஈன்றாட்கு ஒரு பெண், இவள்.
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
60
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா;
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைமேல் அன்பு அளிதோ?
65
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின்,
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்:
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்:
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
70
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'


தலைமகனது உரை

யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!
கய வாய நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
75
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்;
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண்
பல் நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று நவின்றதை:
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்
80
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி,
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!


தோழி தலைமகளின் கற்புடைமை கூறுதல்

'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
85
பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை
எருமை இருந் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்.


தலைமகளிரது செய்தி

90
வளி பொரு சேண் சிமை வரையகத்தால்
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
95
நனி மலர்ப் பெரு வழி,
சீறடியவர் சாறு கொள எழுந்து;
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
100
மணியும், கயிறும், மயிலும், குடாரியும்,
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
'கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
105
வரு புனல் அண்க' என வரம் கொள்வோரும்.
'கரு வயிறு உறுக' எனக் கடம்படுவோரும்,
'செய் பொருள் வாய்க்க' எனச் செவி சார்த்துவோரும்,
'ஐ அமர் அடுக' என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
110
மஞ்சு ஆடு மலை முழக்கும்,
துஞ்சாக் கம்பலை
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரை, தோட் தமனியக் கய மலர்,
115
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை,
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்
கூர் எயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி;
120
அரிவையர் அமிர்த பானம்
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;


பரங்குன்றை வாழ்த்தல்

என ஆங்கு,
125
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
130
தண் பரங்குன்றம்! நினக்கு.


கடவுள் வாழ்த்து
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்

9. செவ்வேள்


முருகவேளை வாழ்த்துதல்

இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
5
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
10
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று,
தணி மழை தலையின்று, தண் பரங்குன்று.


தமிழது சிறப்பிற்குக் காரணம்

நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது:
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
15
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி:
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
20
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே;
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;
சுணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே.
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
25
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார், இக் குன்று பயன்.


வள்ளியும் முருகனும் சிறந்தவாறு

ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
30
'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும்
கேழ் இலார் மாண் நலம் உண்கோ, திரு உடையார்
மென் தோள்மேல் அல்கி நல்கலும் இன்று?
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!'
35
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின்
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை,
'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக
40
இறுகிறுக யாத்துப் புடைப்ப;
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.


வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகலுதல்

45
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்;
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள:
50
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்;
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;
தேர் அணி மணி கயிறு தெரிபு வருவார்;
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்;
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்;
55
தோள் வளை ஆழி சுழற்றுவார்
மென் சீர் மயில் இயலவர்.
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
60
மட மொழியவர் உடன் சுற்றி,
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
அறை அணிந்த அருஞ் சுனையான்
நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;
65
கோகுலமாய்க் கூவுநரும்,
ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று.


வாழ்த்தி வேண்டல்

70
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்
அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
75
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய்,
செம்மைப் புதுப் புனல்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எஃகினவை;
80
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை;
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர!
வாழ்த்தினேம், பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
85
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே.


கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பலையாழ்

14. செவ்வேள்


முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்

கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
5
அடியுறைமகளிர் ஆடும் தோளே,
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
10
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன;
மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
15
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று.


முருகனைப் புகழ்ந்து போற்றுதல்

போர் மலிந்து,
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!
20
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
25
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!


விண்ணப்பம்

30
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!


பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இப் பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.

கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண் நோதிறம்

17. செவ்வேள்


மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்

தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
5
விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?


மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்

ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,
10
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ,
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
15
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க,
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,
20
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து.


பரங்குன்றிற்கும் கூடலுக்கும் இடைப்பட்ட நிலம்

பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை,
கமழ் நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப,
25
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து;
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
30
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை
வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;
தேயா மண்டிலம் காணுமாறு இன்று.


பரங்குன்றின் அலங்காரம்

வளை முன் கை வணங்கு இறையார்,
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
35
தார் மார்பின் தகை இயலார்,
ஈர மாலை இயல் அணியார்,
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா:
அனைய, பரங்குன்றின் அணி.


தெய்வ விழவும் விருந்தயர்வும்

40
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது
அரோ;மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு
உழக்கும் அரோ;தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
45
கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும்,
கை ஊழ் தடுமாற்றம் நன்று.


முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்

என ஆங்கு,
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
50
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,
அணி நெடுங் குன்றம் பாடுதும்; தொழுதும்;
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுக, யாம் எனவே.


கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

18. செவ்வேள்


இமயத்தொடு நிகர்க்கும் குன்று

போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
5
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.


தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்

ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:
'உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, நீ எம்மை
10
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து,
அவன் 'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்
பேதுற்ற இதனைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு.


பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின் கூற்று

15
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல்,
மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,
கை வளம் பூத்த வடுவொடு, காணாய் நீ?
மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:
மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி
20
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம
பூத்தன பாணா! நின் பாட்டு.


பரங்குன்றத்திலுள்ள அம்பலம்

தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,
25
இருள் போழும் கொடி மின்னால்
வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் மேல் ஞாயிறு! நின்
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.


குன்றத்துக் காட்சிகள்

30
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி
சூர் ததும்பு வரைய காவால்,
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,
ஏர் ததும்புவன பூ அணி செறிவு.
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
35
காந்தள், செறிந்த கவின்,
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை.
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே,
வச்சிரத்தான் வான வில்லு.


குன்றத்தின் சிறப்பு

40
வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
போர் ததும்பும் அரவம் போல,
45
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்.
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;
எருவை கோப்ப, எழில் அணி திருவில்
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
50
கூனி வளைத்த சுனை.


முருகவேளை வாழ்த்துதல்

புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
55
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே!


கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

19. செவ்வேள்


வள்ளியை முருகன் வதுவை கொண்டது

நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,
'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின்
5
தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு
சாறு கொள் துறக்கத்தவளொடு
மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.


கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி

புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,
10
அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,
சிறந்தோர் உலகம் படருநர் போல,
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,
புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,
தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்
15
குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
தார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு.


பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி

சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
20
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி
மட மயில் ஓரும் மனையவரோடும்,
கடன் அறி காரியக் கண்ணவரோடும் நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின் பழ மதிச்
25
சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,
பாடிய நாவின், பரந்த உவகையின்,
நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,
படு மணி யானை நெடியாய்! நீ மேய
கடி நகர் சூழ் நுவலுங்கால்.


குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை

30
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,
வம்பு அணி பூங் கயிற்று வாங்கி, மரன் அசைப்பார்
வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக்
கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து
35
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,
குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற
இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!


மலைச் சிறப்பு வழுதியுடன் ஏறியோர் கண்டவை

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,
கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,
40
தெய்வப் பிரமம் செய்குவோரும்,
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்;
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,
45
ஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்;
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
50
'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
55
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச்
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு.


குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி

பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,
பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான்
60
வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர்
ஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க,
'ஏஎ, ஓஒ!' என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்
செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
65
மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.


இள மகளிரின் மருட்சி

நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப,
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
70
அலர் முகிழ் உற, அவை கிடப்ப,
'தெரி மலர், நனை, உறுவ,
ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த
மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு' என
ஆங்கு இள மகளிர் மருள


குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல் பாங்கர்,

75
பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;
80
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க
மணந்தவை, போல, வரை மலை எல்லாம்
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
விடியல் வியல் வானம் போலப் பொலியும்
நெடியாய்! நின் குன்றின்மிசை.


கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்
தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்

85
நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால்
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,
பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
90
கன்னிமை கனிந்த காலத்தார், நின்
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்.


முருகப் பெருமானை வாழ்த்துதல்

95
குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச்
சிறப்பு உணாக் கேட்டி செவி.
உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே
படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;
உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
100
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,
அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;
105
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!


கடவுள் வாழ்த்து
நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்

21. செவ்வேள்


பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்

ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
தொட்டதை தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
5
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த,
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.
கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மா முதல் தடிந்து,
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;
10
பூண்டதை சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த
உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார்.
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அணி நீர்ச் சூழி,
15
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம்.
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்
வென்றிக் கொடி அணி செல்வ! நிற் தொழுது.


பரங்குன்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்

சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,
துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,
20
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்,
நுனை இலங்கு எஃகெனச் சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனைத் துனிப்பவள் நிலையும்;
நிழல் காண் மண்டிலம் நோக்கி,
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;
25
பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;
பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்
ஓவத்து எழுது எழில் போலும் மா தடிந்
திட்டோய்! நின் குன்றின்மிசை.


குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்

30
மிசை படு சாந்தாற்றி போல, எழிலி
இசை படு பக்கம், இரு பாலும் கோலி,
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;
35
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க;
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று.


சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்

தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்
40
மீ நீர் நிவந்த விறலிழை, 'கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக' என,
பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,
கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,
45
தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று.


குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுகள்

வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,
50
உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,
அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த
பசும் பூண் சேஎய்! நின் குன்றம் நன்கு உடைத்து.


சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்

கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்
55
ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த
செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,
மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்
பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,
பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்
60
சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான்,
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர்
ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்.
வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்
65
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்.


முருகவேளை வாழ்த்துதல்

மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;
ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை
இன்று போல் இயைக!' எனப் பரவுதும்
70
ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே.


கடவுள் வாழ்த்து
நல்லச்சுதனார் பாட்டு
கண்ணகனார் இசை
பண் காந்தாரம்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:26:05(இந்திய நேரம்)