தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாநிலம் தோன்றாமை

மாநிலம் தோன்றாமை
தி 2. வையை

வையையில் புனல் விரைந்து வருதல்
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ,
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான்,
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ,
காமரு வையை கடுகின்றே, கூடல்.

புதுப் புனலை விரும்பி மக்கள் கோலம் கொண்டு செல்லுதல்
5
'நீர் அணி கொண்டன்று வையை' என விரும்பி,
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி,
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்
சேர் அணி கொண்டு, நிறம் ஒன்று வெவ்வேறு
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி,
10
ஏர் அணி கொண்டார், இயல்.

வையைத் துறையில் மன்னனும் மக்களும் கூடுதல்
கை புனை தாரினர், கண்ணியர்,
ஐ எனும் ஆவியர், ஆடையர்,
நெய் அணி கூந்தலர், பித்தையர்,
மெய் அணி யானை மிசையராய், ஒய்யெனத்
15
தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்ல;
பொங்கு புரவிப்புடைப் போவோரும், பொங்கு சீர்
வையமும் தேரும் அமைப்போரும்; எவ் வாயும்
பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர்
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்; வையத்துக்கு
20
ஊடுவார்; ஊடல் ஒழிப்பார்; உணர்குவார்:
ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார், நகுவார்; நக்கு
ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய், உற்றவரைத்
தேடுவார்; ஊர்க்குத் திரிவார் இலராகி-
கற்றாரும், கல்லாதவரும், கயவரும்,
25
பெற்றாரும், பெற்றாற் பிழையாத பெண்டிரும்,
பொற்றேரான் தானும், பொலம் புரிசைக் கூடலும்,
முற்றின்று-வையைத் துறை.

நீராடற் காட்சிகள்
தலைவன் பரத்தைமையைத் தோழி குறிப்பால் உணர்த்துதல்
துறை ஆடும் காதலர் தோள் புணையாக,
மறை ஆடுவாரை அறியார் மயங்கி,
30
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன்
நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே,
இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு, இப்பால்,
அகல் அல்கும் வையைத் துறை.
காதலான் மார்பின் கமழ் தார், புனல் வாங்கி,
35
ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு, 'மற்று அது
தா தா' என்றாளுக்கு, 'தானே புறன் தந்து
வேய்தந்தது'. 'என்னை? விளைந்தமை மற்று அது
நோதலே செய்யேன், நுணங்கு இழையாய்! இச் செவ்வி
போதல் உண்டாம்கொல்? அறிந்து புனல் புணர்த்தது!
40
ஓஒ! பெரிதும் வியப்பு.
கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை
நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும்
முயக்குக்கு, செவ்வி முலையும் முயக்கத்து
நீரும் அவட்குத் துணை; கண்ணின் நீர் விட்டோய்!
45
நீயும் அவட்குத் துணை.

குலமகளிர் உரிமை மைந்தரோடு நீராடுதல்
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்,
மணி எழில், மா மேனி, முத்த முறுவல்,
அணி பவளச் செவ் வாய், அறம் காவற் பெண்டிர்
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
50
தணிவின்று, வையைப் புனல்.

தலைவன் கூற்று
'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
55
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால்,
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-

பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
60
'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று,
அந்தணர் தோயலர், ஆறு.
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'
ஐயர், வாய்பூசுறார், ஆறு.

வையை நுரை முதலியவற்றோடு பெருகிச் சென்ற வகை
விரைபு இரை விரை நுரை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்,
65
கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை,
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை புரளிய செலும்மறி கடல்,
புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவின்று,வெள்ள மிகை.

திருமருத முன்துறை
வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில்
மணி அணி யானைமிசை, மைந்தரும் மடவாரும்,
70
நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று,
குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி,
தெரி மருதம் பாடுப, பிணி கொள் யாழ்ப் பாணர்.
பாடிப் பாடி, பாய்புனல்
75
ஆடி ஆடி, அருளியவர்
ஊடி ஊடி, உணர்த்தப் புகன்று
கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு,
தேடித் தேடி, சிதைபு சிதைபு,
சூடிச் சூடி, தொழுது தொழுது,
80
மழுபொடு நின்ற மலி புனல் வையை
விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி,
இமிழ்வது போன்றது, இந் நீர்-குணக்குச் சான்றீர்!
முழுவதும் மிச்சிலா உண்டு.

சாந்து, பூ, முதலியவற்றால் நீர் வேறுபடுதல்
சாந்தும், கமழ் தாரும், கோதையும், சுண்ணமும்,
85
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன
பூவினும், அல்லால், சிறிதானும் நீர் நிறம்
தான் தோன்றாது-இவ் வையை ஆறு.
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்
கழு நீர மஞ்சனக் குங்குமக் கலங்கல்
90
வழி நீர்; விழு நீர அன்று-வையை.

பாண்டியன் கூடலாரொடு வையை நீராடிய மாட்சி
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்,
உரு கெழு கூடலவரோடு, வையை
வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால்-
இரு முந்நீர் வையம் படித்து என்னை? யான் ஊர்க்கு
95
ஒரு நிலையும் ஆற்ற இயையா! அரு மரபின்,
அந்தர வான் யாற்று, ஆயிரம் கண்ணினான்
இந்திரன் ஆடும் தகைத்து.

இப் பாடல், தொல்காப்பியம், செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர் உரையில் கண்டது.
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:31:29(இந்திய நேரம்)