தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விரிகதிர் மதியமொடு

விரிகதிர் மதியமொடு
11. வையை


மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்

'விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,
எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
5
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
10
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ,
15
நெரிதரூஉம் வையைப் புனல்.


தோழி திருமருதத் துறையின் சிறப்புக் கூறுதல்

'வரையன புன்னாகமும்,
கரையன சுரபுன்னையும்,
வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
மனைமாமரம் வாள்வீரம்,
20
சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,
தாய தோன்றி தீயென மலரா,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
25
வயவர் அரி மலர்த் துறை என்கோ?
அரி மலர் மீப் போர்வை, ஆரம் தாழ் மார்பின்,
திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின்
அரிவையது தானை என்கோ? கள் உண்ணூஉப்
பருகு படி மிடறு என்கோ? பெரிய
30
திருமருத நீர்ப் பூந் துறை.'


கண்டார் கூற்று

'ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்,
நாளின், நாளின், நளி வரைச் சிலம்பு தொட்டு,
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர; ஓம்பு பெரும் பக்கம்
35
வழியது பக்கத்து அமரர் உண்டி
மதி நிறைவு அழிவதின், வரவு சுருங்க;
எண் மதி நிறை, உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே?
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை!
40
வயத் தணிந்து ஏகு, நின் யாணர் இரு நாள் பெற!
மா மயில் அன்னார், மறையில் புணர் மைந்தர்,
காமம் கள விட்டு, கைகொள் கற்பு உற்றென,
மல்லல் புனல் வையை! மா மலை விட்டு, இருத்தல்
இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்:'
45
என ஆங்கு
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை
படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது, யாறு.


வையை போர்க்களத்தை ஒத்தல்

50
ஆற்று அணி, வெள் வாள் விதிர்ப்போர், மிளிர்
குந்தம் ஏந்துவோர், கொள்வார் கோல் கொள்ளக்
கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம்
படைக் கைம்மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு
ஊர்பு உழக்குநரும், கண் ஆரும் சாயற் கழித்
55
துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்,
மணம் வரு மாலையின் வட்டிப்போரைத்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்,
தெரி கோதை நல்லார் தம் கேளிர்த் திளைக்கும்
உருகெழு தோற்றம் உரைக்குங்கால், நாளும்
60
பாய் தேரான் வையை அகம்.


இளவேனிற் காலத்து ஆடல்

நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்
தார் வரை அகலத்து, அவ் ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி
65
புனை வினைப் பொலங் கோதையவரொடு,
பாகர் இறை வழை மது நுகர்பு, களி பரந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார்,
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புற,
சீர் அமை பாடற் பயத்தால் கிளர் செவி தெவி,
70
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்
அம்பி கரவா வழக்கிற்றே, ஆங்கு அதை.
கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல்,
நீர் ஒவ்வா வையை! நினக்கு.


தைந் நீராடல்

கனைக்கும் அதிர்குரல் கார் வானம் நீங்க,
75
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து,
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
80
'வெம்பாதாக, வியல் நில வரைப்பு!' என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
85
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
90
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!


மகளிர் செயல்கள்

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,
வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,
95
சாய் இழை பிண்டித் தளிர் காதில், தையினாள்;
பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;
'குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்
இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்' என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,
100
கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண்.
பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்
குவளைப் பசுந் தண்டு கொண்டு.
கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,
'நில்லிகா!' என்பாள்போல், நெய்தல் தொடுத்தாளே
105
மல்லிகா மாலை வளாய்.


மகளிர் கருத்தும், வேண்டிக்கோடலும்

தண்டு தழுவா, தாவு நீர் வையையுள்,
கண்ட பொழுதில், கடும் புனல் கை வாங்க,
நெஞ்சம் அவள் வாங்க, நீடு புணை வாங்க,
நேரிழை நின்றுழிக் கண் நிற்ப, நீர் அவன்
110
தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப;
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ,
தாய் அத் திறம் அறியாள், தாங்கி, 'தனிச் சேறல்;
ஆயத்தில் கூடு' என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே
சேய் உற்ற கார் நீர் வரவு.
115
'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும்,
'"கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!" என வேண்டுதும்' என்மாரும்,
'பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!' என்மாரும்,
120
'"கிழவர் கிழவியர்" என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!' என்மாரும்


ஒருவன் உவந்தவை காட்டுதல்

'கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது,
125
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின்:
கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல், குரல் கொண்ட
கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை
ஓர்மின்: பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப்
பாடி, கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும்
130
விரித்து ஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான் வீழ் பூ
நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து,
பின்னும்,கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின்
என ஆங்கு


தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக் கூறுதல்

இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
135
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
140
நறு நீர் வையை நயத் தகு நிறையே!


வரைவு மலிந்த தோழி, 'கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட் டேம்' என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையா
ழ்

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:32:11(இந்திய நேரம்)