பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறம் கெழு தானை அரசருள்ளும்,
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்,
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து,
வழங்கல் ஆனாப் பெருந் துறை
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
கை மாண் தோணி கடுப்ப, பையென,
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!