தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரா(கடம்ப மரம்)
3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.
21. பாலை
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
5
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
10
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
15
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
20
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார்
81. பாலை
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
5
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
10
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ
15
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
83. பாலை
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
5
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
10
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்
121. பாலை
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
5
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
10
தான் வரும் என்ப, தட மென் தோளி
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
15
கரு முக முசுவின் கானத்தானே.
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன்
127. பாலை
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
வலம் படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
5
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
10
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
15
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
5
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
10
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
15
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்
172. குறிஞ்சி
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
5
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்;
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
10
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்,
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
15
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின்
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
மணி ஏர் மாண் நலம் சிதைய,
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே!
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
199. பாலை
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
5
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
10
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல்
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும்
15
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
20
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார்
211. பாலை
கேளாய், எல்ல! தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
5
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
10
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
15
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார்
221. பாலை
நனை விளை நறவின் தேறல் மாந்தி,
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ,
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என,
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,
5
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்,
மதி உடம்பட்ட மை அணற் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து,
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின்
தண் நறு முச்சி புனைய, அவனொடு
10
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை,
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும் பிடி இரியும் சோலை
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார்
257. பாலை
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
5
பொம்மல் ஓதி பொதுள வாரி,
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
10
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
15
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
20
வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயினானே.
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
317. பாலை
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
5
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
10
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
15
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
20
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
என்னுழியதுகொல் தானே பல் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி,
நல் நுதல் பாஅய பசலை நோயே?
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்
335. பாலை
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
யானும் அறிவென்மன்னே; யானை தன்
5
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
இன்னா வேனில் இன் துணை ஆர,
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
10
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
15
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
20
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
25
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:59:29(இந்திய நேரம்)