தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாழை
2. குறிஞ்சி
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
இவளும், இனையள்ஆயின், தந்தை
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர்
8. குறிஞ்சி
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
5
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
10
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய,
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
15
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்.
134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
5
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
10
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
141. பாலை
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
5
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
10
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
15
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
20
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
25
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்
302. குறிஞ்சி
சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
5
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்,
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி!
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
10
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல்,
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என,
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை,
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு,
15
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
328. குறிஞ்சி
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
அரவின் பைந் தலை இடறி, பானாள்
5
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி,
துனி கண் அகல அளைஇ, கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின்,
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம்
10
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
15
சாரல் நாடன் சாயல் மார்பே!
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
332. குறிஞ்சி
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய,
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
5
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
10
நின் புரை தக்க சாயலன் என, நீ
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
15
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:07:09(இந்திய நேரம்)